தமிழகத்தில்… ஊரடங்கு நீட்டிப்பு தேவையா?

Published:

lockdown
lockdown

தற்போதைய திமுக அரசு பதவி ஏற்ற பிறகு போடப்பட்ட ஊரடங்கு கடந்த வாரம் நீட்டிக்கப்பட்டது. தற்போது ஜூன் 7ம் தேதியுடன் ஊரடங்கு முடியப் போகிறது. இந்நிலையில் ஊரடங்கு மீண்டும்  நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது!  தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல் படுத்தப் படலாம் என்றே அரசு முடிவெடுக்கும் எனத் தோன்றுகிறது. இருப்பினும் சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவர்கள் ஊரடங்கு நீட்டிக்கப் பட வேண்டும் என்ற ஆலோசனையை முன்வைக்கின்றனர்.

ஊரடங்கு என்பது குறித்து இருவிதமான கருத்துக்கள் பொதுமக்களிடம் உண்டு. ஒரு தரப்பினர் கடுமையான ஊரடங்கு அமலில் இருந்தால்தான் கொரோனா நோய்த்தொற்று பரவல் சமூகப் பரவலாக மாறாமல் தடுக்கப்படும் என்ற கருத்தினை தெரிவிக்கின்றனர். அதேநேரம் மற்றொரு தரப்பினர் ஊரடங்கு என்பது அரச பயங்கரவாதம்; ஏழை எளிய மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். அன்றாட வாழ்வுக்கும் வயிற்றுப் பசி ஆறுவதற்கும் ஊரடங்கு மிகப் பெரும் தடை என்று  கருத்து தெரிவிப்பவர்களும் உண்டு! 

ஆனால் நோய்த் தொற்றால் உயிரிழந்தால் வாழ்க்கை ஏது? உயிர் முக்கியம்! எனவேதான் ஊரடங்கு உத்தரவுகளை வரவேற்கிறோம் என்றும் ஒரு தரப்பு சொல்லிக் கொண்டிருக்கிறது. கடைகள் முற்றிலும் அடைக்கப்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தினால்… அன்றாட வயிற்றுப் பாட்டுக்கு பொருள்கள் வாங்க எங்கே செல்வது? அனைவருக்கும் உணவு விடுதிகளில் உணவு வாங்கி வந்து உண்பதற்கு நாங்கள் என்ன பணம் படைத்தவர்களா அல்லது அரசு வேலையில் இருப்பவர்களா என்ற குரலை ஏழை எளியவர்கள் எழுப்புகிறார்கள்!

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தற்போது போடப்பட்டுள்ள தளர்வற்ற ஊரடங்கே, நோய்த்தொற்று பரவலை தடுப்பதில் பெரிதும் கைகொடுக்கவில்லை! அந்த நிலைமையில்தான் ஊரடங்கும் இருந்தது. மக்களுக்கும் வேறு வழியில்லை. அரசுக்கும் வேறு என்ன செய்வது என்றும் புரியவில்லை. இதனால், இப்போதே மக்கள் மனதைத் தயார் படுத்தும் விதமாக, ஊரடங்கைத் தொடர்ந்து கொண்டே போக முடியாது என்றெல்லாம் அரசுத் தரப்பில் இருந்து தகவல்கள் கசிய விடப் படுகின்றன. எனவே ஊரடங்கு நீட்டிக்கப் படாது என்ற சமிக்ஞையை அரசுத் தரப்பு கொடுத்திருக்கிறது என்று கருதலாம். 

மேலும், எந்தக் காரணத்துக்காக ஊரடங்கு போடப்பட்டதோ அதில் முழுமையான வெற்றி கிடைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். இப்போதும் தமிழக அளவில் சுமார் 25 ஆயிரம் நபர்கள் என்ற அளவில் புதிய நோய்த் தொற்று தினசரி பதிவாகின்றது. சென்னையிலும் கோவையிலும் இரண்டாயிரத்தைத் தொட்டு தொற்றுகள் பதிவாகின்றன. கொங்கு மண்டலம், மதுரை, சென்னையைச் சுற்றியுள்ள செங்கல்பட்டு, திருவள்ளூரிலும் இன்னமும் அதிக தொற்றுகள் என தகவல்கள் வருகின்றன. 

ஊரடங்கால் ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க, அரிசி அட்டைகளுக்கு 4 ஆயிரம் ரூபாய் பகுதி பகுதியாக தரப்படும் என்கிறது அரசு! எனினும், ஒரு குடும்பத்துக்கு இது போதுமா என்ற கேள்வி எழுப்பப் படுகிறது. சாதாரண மக்களை போலவே சிறு சிறு தொழில் முனைவோரும், குறு தொழில் முனைவோரும் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்! பெரிய நிறுவனங்களே தள்ளாடும் போது குறு சிறு தொழில் முனைவோர்கள் என்ன செய்வார்கள் பாவம்? அவர்களால் பலன் பெறும் தொழிலாளர்களும் என்ன செய்வார்கள் ?

ALSO READ:  எதிரிகள் சிரிக்கிறார்கள்

இருப்பினும் இந்த நேரத்தில் முழுவதுமாக ஊரடங்கை விலக்குவது அல்லது தளர்வுகள் அற்ற ஊரடங்கை தமிழகம் முழுதும் பொதுவாக பிறப்பிப்பது என்பது ஏற்புடையதாக தெரியவில்லை.  கடந்த ஆட்சிக் காலத்தில் கொரோனா நோய்த்தொற்று தீவிரமாக பரவிக் கொண்டிருந்த ஒரு நிலையில் தமிழக அரசு மண்டல வாரியாகப் பிரித்தது. அதில் சிவப்பு, மஞ்சள், பச்சை என்றெல்லாம் வண்ணங்களில் குறிப்பிட்டு அவற்றுக்கு இடையே ஊரடங்கு பிறப்பித்தது! அது தளர்வுகள் உடனோ அல்லது தளர்வுகள் இன்றி முழு ஊரடங்காகவோ என்று இருந்தது!

சென்னை, கோவை, மதுரை, சேலம், ஈரோடு என மக்கள் நெருக்கம் மிகுந்த மாநகர் பகுதிகளிலும் மாவட்டங்களிலும் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகமாக உள்ளது. அதே நேரம் மக்கள் நெருக்கம் குறைந்த கிராமப்புற பகுதிகள் மற்றும் நகர்ப்புறங்களில்  நோய்த்தொற்று பரவல் குறைந்தே காணப்படுகிறது. இப்போதும்கூட அரசு தினந்தோறும் வெளியிடும் அறிக்கைகளில் தினசரி பரவல் 200 அல்லது நூற்றுக்கும் குறைவான மாவட்டங்களை எடுத்துக்கொண்டு அவற்றில் ஊரடங்கை விலக்கலாம்! மாநிலத்தில் ஒரு பகுதியில் உள்ள மக்களுக்காக மாநிலம் முழுதும் உள்ள மற்ற கிராமப் பகுதிகளில் உள்ள மக்களும் ஏன் சிரமத்தை அனுபவிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது அல்லவா?

கொரோனா பரவல் அதிகமுள்ள இடங்களில் மட்டும் போக்குவரத்தை கடுமையாக தடை செய்துவிட்டு மாநிலத்தின் மற்ற இடங்களில் மாவட்டங்களுக்கு இடையே அல்லது மாவட்டங்களுக்குள் போக்குவரத்தை அனுமதிக்கலாம் . கடைகள் திறப்பது கூடுதல் நேரம் அனுமதிக்கப்படலாம்! ஒரே நேரத்தில் கடைகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்ப்பதுதான் புத்திசாலித்தனம்! கடைகளை முழு நேரமும் திறந்துவிட்டு, தெரு வாரியாக, அல்லது பகுதி பகுதியாகப் பிரித்து, குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அவர்களை கடைகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தலாம். கூடவே முகவுறை, கையுறை அல்லது கிருமிநாசினி, கைகளைக் கழுவுதல், தனிநபர் இடைவெளி கடைப்பிடித்தல் உள்ளிட்ட  கொரோனா கால கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க அறிவுறுத்தி, கண்காணிக்கலாம்! 

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்... : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

பல்வேறு இடங்களில், குறிப்பிட்ட நபர்களின் சில கடைகள் மட்டும் திறக்கப்பட, ஒருதலைப் பட்சமாக காவல்துறையினர் அனுமதிப்பதாகவும், மற்றவர்களை கட்டுப்பாடும் கண்டிப்பும் காட்டி அடைக்கச் சொல்வதாகவும் புகார்கள் எழுந்து வருகின்றன! இவற்றைத் தவிர்க்க மேற்சொன்னபடி நடவடிக்கை எடுக்கலாம்!  

சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் தற்போது போல் காய்கறிகள், மளிகைப் பொருள்களை தெருத்தெருவாக வீடு வீடாகக் கொண்டு சேர்க்க ஏற்பாடு செய்யலாம். இதன் மூலம் கூட்டம் கூடுதலும் குறையும், தனிநபர் எரிபொருள் நுகர்வும் குறையும். எனவே அரசு இந்த விஷயங்களை தீவிரமாகக் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்ப்போம்!

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img