
எற்கெனவே குடியால் சீரழிக்கப்பட்டுள்ள மாணவ சமுதாயத்தை மேலும் சீரழிக்க திட்டமிட்டு செயலாற்றி வருகிறது திராவிட மாடலின் உயர் கல்வித் துறை.
அண்மையில் பரவலாகப் பேசப்பட்ட, கவனம் பெற்ற விஷயம் இதுதான். ‘மாணவர்களை ஆசிரியர்கள் பிரம்பால் அடித்த காலம் போய் ஆசிரியர்களை மாணவர்கள் பிரம்பால் அடிக்கும் காலம் வந்து விட்டது. எனவே ஆசிரியர்கள் ‘அட்ஜஸ்ட்’ செய்து கொள்ள வேண்டும்’ என தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி பேசியுள்ளதற்கு பேராசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள செய்தி, கல்வியாளர்கள் மட்டுமல்ல, தமிழகத்தின் எதிர்கால நலனை சிந்திக்கும் பொறுப்புள்ள பிரஜைகளுக்கு பெரும் அதிர்ச்சி தரத்தக்க ஒன்றுதான்!

சட்டமன்றத்தில் ஆளுநர் உரை நிகழ்த்திய போது ஆளுநருக்கு உரிய மரியாதை தராமல் அவர் மீது கண்டன தீர்மானம் அப்போதே நிறைவேற்றிய அரசு தானே விடியல் அரசு. ஆளுநரை வெளியேற்ற வைக்க மரியாதை குறைவாக நடந்து கொண்ட திராவிட மாடலில் யோ போயா என்று அசிங்கமான அருவருக்கத்தக்க செய்கையை செய்த நபர் தானே இந்த பொன்முடி. அவர் அமைச்சராக இருக்கும் துறை மட்டும் சரியாக இருக்குமா? அடிப்படையிலேயே சிந்தனை கோளாறு உள்ளவர் உயர்கல்வித்துறை அமைச்சராக இருப்பது வெட்கக்கேடு.
உயர்கல்வி அமைச்சர் பொன்முடி கல்லுாரி பேராசிரியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய வீடியோ காட்சி ‘வாட்ஸ் ஆப்’ வாயிலாக வலம் வருகிறது. அதில் ‘மாணவர்களை ஆசிரியர்கள் பிரம்பெடுத்து அடித்த காலம் மாறி மாணவர்கள் பிரம்பெடுத்து ஆசிரியர்களை அடிக்க வரும் காலமாகி விட்டது. எல்லாம் கால மாற்றம். இதையெல்லாம் அட்ஜஸ்ட் செய்து தான் கல்வி கற்பிக்க வேண்டும்’ என பேசியுள்ளார். ஒரு பொறுப்புள்ள உயர்கல்வித் துறை அமைச்சர் பேசும் பேச்சா இது?!
மாணவர்களை வைத்துக் கொண்டு அரசியல் செய்து வந்த திமுக., திராவிட மாடல் இப்போது, மாணவர்களை முழு நேர அரசியல்வாதிகளாக்க குடியை தாராளமாகக் கையில் வலியக் கொடுத்து, குடி மயக்கத்திலேயே வன்முறைச் செயல்களிலும் ஈடுபடத் தூண்டுகிறது என்பதே அமைச்சரின் பேச்சில் உள்ள உள்ளர்த்தம் என்பது கற்றறிந்தோரின் குற்றச்சாட்டு.
அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு பேராசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதுகுறித்து. தமிழக ஆசிரியர் பாதுகாப்பு மற்றும் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் ‘உயர் கல்வித்துறை அமைச்சராக இருப்பவரே இப்படி பொறுப்பின்றி பேசியிருப்பது ஆசிரியர்களை வேதனை அடையச் செய்துள்ளது. பொன்முடியின் பேச்சு கண்டனத்திற்குரியது’ என தெரிவிக்கப் பட்டிருந்தது.
அமைச்சரின் பேச்சு மாணவர்களின் தவறான செயலை மேலும் ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. சமீபகாலமாக கல்லுாரிக்கு வரும் பல மாணவர்களின் போக்கு மிகவும் மோசமாகி விட்டது. சிலர் போதை பழக்கத்துடன் வருகின்றனர். சிலர் ஆயுதங்களுடன் வகுப்பறைக்கு வருகின்றனர். ஆனால் ஆசிரியர்கள் நிராயுதபாணியாக வகுப்பறைக்கு சென்று பாடம் நடத்தி விட்டு தங்களை தற்காத்துக் கொண்டு திரும்பும் நிலை உள்ளது. இது ஆரோக்கியமான விஷயமல்ல. மாணவர்களின் இந்தப் போக்கை மாற்ற வேண்டும். அதற்கு உயர்கல்வி அமைச்சர் உயர்கல்வித் துறை அரசு போலீஸ் மற்றும் பெற்றோர் இணைந்து மாணவர்களை நெறிப்படுத்த வேண்டும்.
மாறாக மாணவர்களின் இந்தச் செயல் காலமாற்றம்; அதை அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்று சாக்குபோக்கு கூறி தங்களுக்குரிய பொறுப்பை தட்டி கழித்து விட்டு கடமையில் இருந்து விலகுவது ஆசிரியர்களை மட்டுமல்ல. இளைய சமூகத்தினருக்கும் சமுதாயத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்… என்று எசரிக்கின்றனர் பேராசிரியர்கள் பலர்.
திராவிட மாடல், தமிழகத்தை சூனியமாக்கிவிட்டுத்தான் ஓயும் போல!