
தலைவன் எவ்வழியோ தொண்டரும் அவ்வழி! என்பார்கள். ஒரு ராணுவத் தளபதி, இப்படி காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நம் ராமாயண மகாபாரத இதிகாசங்களை மேற்கோளிட்டுப் பேச முடிந்திருக்கிறதா என்ற ஆச்சரியக் கேள்விகள் இப்போது எழுந்திருக்கிறது. இப்போதுதான் அவர்களின் உள்ளுணர்வு தங்கள் திறமைகளை வெளிப்படுத்த உந்துதலாக இருந்திருக்கிறது என்ற கருத்தும் வெளிப்படையாக முவைக்கப்படுகிறது.
சொல்லப்போனால், ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சிகளின் போது, இவ்வாறு நம் இதிகாச புராணங்களில் இருந்து நன்னெறிக் கதைகள், சம்பவங்கள், உத்திகள், சிக்கலான தருணங்களில் எப்படி மீண்டார்கள் என்பது குறித்த பாடங்களை சொல்லிக் கொடுப்பது வழக்கம்தான்! இது மேலாண்மை உத்திகளைக் கையாண்டு வெற்றிகளைப் பெற்ற பஞ்சதந்திரக் கதைகளைப் போன்றதுதான்!
பஞ்ச தந்திரக் கதைகள் வெறும் கதைகளாயினும் இக்கட்டான தருணங்களில் அறிவுபூர்வமாக யோசித்து முடிவு எடுக்கக் கூடிய சமயோஜித புத்தியை நெருக்கடியான நேரங்களில் நமக்குத் தரும். இதிகாசங்கள் நடந்த வரலாறுகள் என்பதால் அவற்றில் இருந்து பெறப்படும் உத்திகள் முன்னோர்களின் மேலாண்மை உத்திகள். ஆனால் ஊடகவியலாளர்கள் நிறைந்த ஒரு பிரஸ்மீட்டில் ஒரு தளபதி வெளிப்படையாகச் சொல்வது புதிது. அது ஆட்சியாளர்கள் கொடுத்த சுதந்திரம் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்!
இதயங்களை வென்ற ஏர் மார்ஷல் பாரதி – என்றுதான் ஒவ்வொருவரும் அவரைப் பாராட்டி வருகிறார்கள். துப்பாக்கியும் தோட்டாவும் கைகளில் இருந்தாலும், வீரம் இருக்கும் இடத்தில் ஈரமும் இருக்கும் போல் தன் கவிதை உள்ளத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் ஏர் மார்ஷல் பாரதி.
நேற்று நண்பகல் 2.30க்கு, இந்திய ஆயுதப் படைகளின் மூன்று பிரிவுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (DGMO) ஒரு செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். நிகழ்வின் முதல் பகுதில், முப்படைகளின் மூன்று பிரதிநிதிகளும் அந்தந்த கிளைகள் பற்றிய விளக்கங்களை வழங்கினர், பின்னர் முதல் செய்தியாளர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் விளக்கங்களை அளித்தனர்.
நியூஸ் நேஷனின் பத்திரிகையாளர் மதுரேந்திரா கேட்டார்: “பத்திரிகையாளர் சந்திப்பைத் தொடங்குவதற்கு முன், ராஷ்டிரகவி ராம்தாரி சிங் தின்கரின் வரிகளைப் பின்னணியில் பயன்படுத்திய ஒரு வீடியோவை இராணுவம் இயக்கியது. நேற்றைய வீடியோவில் சிவ தாண்டவ ஸ்தோத்திரம் இருந்தது. இதன் மூலம், எதிரிக்கு நீங்கள் என்ன செய்தியைச் சொல்ல முயற்சித்தீர்கள்?” – என்பது அந்தக் கேள்வி.
சொல்லப் போனால், நேற்று முன் தினம் முதல் செய்தியாளர் சந்திப்பு நடந்த போது, ராணுவத்தின் தரப்பில் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விளக்கப் படத்தில் தொடக்கத்தில் பின்னணி இசையாக வந்தது சிவ தாண்டவ தோத்திரத்தின் இசைதான்! ஏற்கெனவே சிந்தூர் என்பதில் குங்குமம் சிதறியிருக்கும் காட்சியைப் புலப்படுத்தியதற்கு இந்திய நாட்டின் எதிர்க்கட்சிகள் சில இது மதத்தை பின்புலப் படுத்துவதாகக் குரல் கொடுத்திருந்தன. இந்நிலையில் ராணுவத்தின் விளக்கப் பட வீடியோவில் சிவதாண்டவ ஸ்தோத்திர இசை இருந்தால், இவர்கள் இம்சிக்க மாட்டார்களா என்ன?!
எனினும் அந்தப் பத்திரிகையாளரின் இந்தக் கேள்வியால் ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி வெளிப்படையாக மகிழ்ச்சியடைந்தார். பத்திரிகையாளரின் பெயர் மற்றும் நிறுவனம் அதைக் குறித்துக் கொள்ளுமாறு அவர் மீண்டும் கேட்டார்.
பத்திரிகையாளர் குறிப்பிட்ட வரிகள் ராஷ்டிரகவி (தேசியக் கவி) ராம்தாரி சிங் தின்கரின் பிரபலமான காவியமான “ராஷ்மிரதி”யிலிருந்து வந்தவை, குறிப்பாக ‘கிருஷ்ணா கி சேதவானி’ (கிருஷ்ணாவின் எச்சரிக்கை) பகுதியிலிருந்து.
வரிகள் பின்வருமாறு:
துர்யோதன வஹ பீ தே நா சகா,
ஆஷிஷ் சமாஜ் கி லே ந சகா,
உலடே, ஹரி கோ பாந்தனே சலா,
ஜோ தா அசாத்ய, சாதனே சலா.
(துரியோதனனால் அதைக் கூட கொடுக்க முடியவில்லை.
சமுதாயத்தின் ஆசீர்வாதங்களை அவரால் பெற முடியவில்லை.
மாறாக, அவர் ஹரியை (கிருஷ்ணனை) பிணைக்க முயன்றார்.
சாத்தியமற்ற முயற்சி.)
ஜப் நாஷ் மனுஜ் பர் ஜாதா ஹை, பஹலே
விவேக் மர் ஹாதா ஹை|
ஹரி நே பீஷண் ஹுங்கார் கியா, அபனா
ஸ்வரூப விஸ்தார் கியா|
டகமக்-டகமக் திக்கஜ் டோலே, பகவான்
குபித் ஹோ கர் போலே|
ஜஞ்ஜீர் பத்தா அப் சாத் முஜே, ஹான்-ஹான் துர்யோதனன்! பாந்த முஜே|
(ஒரு மனிதனை அழிவு சூழ்ந்தால், முதலில் இறப்பது ஞானம்.
ஹரி கடுமையாக கர்ஜித்து தனது தெய்வீக வடிவத்தை விரிவுபடுத்தினார்.
பெரிய வீரர்கள் நடுங்கி தடுமாறினர். பகவான், கோபமடைந்து, கூறினார்:
உன் சங்கிலியை இப்போது நீட்டு, அதால் என்னைக் கட்டு! ஆம், துரியோதனா! என்னைக் கட்ட முயற்சி செய்!)
இந்தக் காட்சி, துரியோதனன் அவையில் சமாதானம் பேசச் சென்ற, அதாவது பாண்டவர்களின் சார்பில் தூது சென்ற ஸ்ரீ கிருஷ்ணனை துரியோதனன் அவமரியாதை செய்தபோது எழுந்த கவிதை வரிகள். அவன் ஸ்ரீ கிருஷ்ணனின் நல்ல நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல், அதற்கு மரியாதை கொடுத்து செவிகொடுத்துக் கேளாமல், தன் துர்புத்தியால் அவரைப் பிணைத்துக் கட்டிவைக்க முயன்றான். அதன் பின் துரியோதனன் அழிந்தது வரலாறு. இதே போன்ற சூழல் தான் இப்போது ஆபரேஷன் சிந்தூர் விஷயத்திலும் ஒப்புமையாகப் போனது.
ஆனால், செய்தியாளரின் இந்தக் கேள்விக்கு, சூழலைப் புரிந்து கொண்டு பதிலளித்த ஏ.கே. பாரதி ராமசரித மானஸ் வசனங்கள் மூலம் பதிலளித்தார். எதையும் நோக்காமல், சுற்றுமுற்றும் பார்க்காமல், தன் மனத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்த தன் கருத்தை அவர் சரளமாகத் தெரிவித்தார்.
பினய ந மானத் ஜலதி ஜட
கயே தீனி தின் பீதி|
போலே ராம சகோப் தப
பய பினு ஹோயி ந ப்ரீதி |
(தாழ்மையான வேண்டுகோள்களுக்கு கடல் அசையாமல் இருந்தது; மூன்று நாட்கள் கடந்துவிட்டன. பின்னர், கோபம் பொங்கி எழுந்த ராமர், “பயம் இல்லாமல், அன்பு இருக்க முடியாது” என்று அறிவித்தார்.)
கடலரசனான வருண தேவன் இலங்கைக்குச் செல்ல வழி கொடுக்கும் வரை காத்திருந்த ராமர், மூன்று நாட்களுக்குப் பிறகு பொறுமை இழந்து கோபமடைந்தார். பயம் இல்லாமல் அன்பு இல்லை என்று அவர் அறிவித்தார், மேலும் தனது வில்லை உயர்த்தினார். அப்போதுதான் கடற்கடவுள் அவர் முன் தோன்றி உதவிக்கரம் நீட்டினார்.
பொதுவாக, ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், பத்திரிகையாளர்கள் விருந்தினர்கள் வரும்போது ஆரவாரம் செய்யவோ, கைத்தட்டவோ, எழுந்து நிற்கவோ மாட்டார்கள் – தேசிய கீதம் அல்லது மாநிலத்தின் பண் பாடப்படும் போது தவிர மற்ற நேரங்களில் அமர்ந்தே இருப்பார்கள். குறிப்பாக ஒரு தீவிரமான ராணுவ பத்திரிகையாளர் சந்திப்பில், இதுபோன்ற பதில்கள் அரிதானவை.
ஆனால் ஏ.கே. பாரதியின் தன்னிச்சையான மற்றும் உணர்ச்சிவசப்பட்ட வார்த்தைகளைக் கேட்ட பிறகு, பத்திரிகையாளர்கள் கை தட்டாமல் இருக்க முடியவில்லை. கரகோஷம் முழங்க, ஏ.கே. பாரதியின் கவிதை வரிகளுடனான பதிலுக்கு தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர். ஏர் மார்ஷல் பாரதியின் அருகில் அமர்ந்திருந்த கடற்படையின் வைஸ் அட்மிரல் ஏ.என். பிரமோத் கூட மென்மையான புன்னகையை வெளிப்படுத்தினார்.
இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பை முடிப்பதற்கு முன், பிரமோத் குறிப்பிட்டார்: “ஷாம் நோ வருணா” – “வருணா (கடல்களின் கடவுள்) நமக்கு மங்களகரமானவராக இருக்கட்டும்” என்று பொருள்படும் வேதப் பிரார்த்தனையை முன்மொழிந்தார்.
இது ஒரு புறம் இருக்க, இன்னொன்றையும் நாம் இந்தப் பத்த்ரிகையாளர் சந்திப்பின் போது தவறவிடாமல் கவனித்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.
இந்திய பாகிஸ்தான் இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையே ஆயுதங்களால் பேசிக் கொண்டிருந்த இக்கட்டான நேரத்தில், அது பற்றி டிவி.க்களில் தோன்றி பேசி வந்த பாகிஸ்தான் நாட்டு ராணுவ அதிகாரிகள் நெருக்கடி நிலைக்கு ஆட்பட்டதைப் போன்ற பரபரப்புடன் தாங்கள் வெற்றி அடைந்ததாகவும், எதிரிகளை வீழ்த்தி விட்டதாகவும் ஜம்பம் அடித்துக் கொண்டிருக்க, நம் பாரத ராணுவ தளபதிகளோ, எந்த வித நெருக்கடியும், பரபரப்பும் இன்றி, வெகு இயல்பாக, அமைதியாக, சிரித்துப் பேசியபடி, முகத்தில் புன்னகை தவழ, செய்தியாளர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.
நேற்று காலை இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது டெஸ்ட் போட்டிகளுக்கான ஓய்வு முடிவுகளை அறிவித்த நேரத்தில், அது பற்றிக் குறிப்பிட்ட டிஜிஎம்ஓ., இங்கிலாந்து ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் பற்றியும் குறிப்பிட்டு, அதனுடன் ஒப்புமைப் படுத்தியிருந்தார்.
ஆக, இது புதிய இந்தியா! எழுச்சியுற்ற பாரதத்தின் அடையாளங்கள்! அது ஒரு தலைவனால் சாத்தியமாகியிருக்கிறது. தலைவன் சரியாக இருந்தால், தளபதிகளும் தொண்டர்களும் மிகச் சரியானவர்களாகவே இருப்பார்கள்!




