ஏப்.7ல் திட்டமிட்டபடி தென்காசி கோயில் கும்பாபிஷேகம்! நீதிமன்ற தடை நீக்கம்!

Published:

tenkasi temple kumbabishekam - 2026

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் திட்டமிட்ட படி ஏப்.7ம் தேதி திங்கள் அன்று நடைபெறுகிறது. இந்த கும்பாபிஷேகம் நடத்த நேற்று தடை விதித்திருந்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, இன்று மீண்டும் விசாரணை செய்து தடையை நீக்கிக் கொண்டது. இதை அடுத்து கும்பாபிஷேகம் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.

தென்காசியில் உள்ள புகழ்பெற்ற கோயிலான ஸ்ரீ காசிவிஸ்வநாதர் உலகம்மன் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஏப்.7ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால் கும்பாபிஷேகப் பணிகளில் நடைபெற்ற ஊழல்கள், முறைகேடுகள் மற்றும் நிறைவுபெறாத மராமத்துப் பணிகள் ஆகியவற்றைக் காரணம் காட்டி, திருப்பணி வேலைகள் நிறைவு பெற்ற பின்னரே கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்று தென்காசி ரயில் நகரைச் சேர்ந்த நம்பிராஜன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது…

தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் 14-ம் நூற்றாண்டில் பராக்கிரம பாண்டிய மன்னனால் கட்டப்பட்டது. இதற்காக புண்ணிய தலமான காசியில் இருந்து புனித நீர் வரவழைக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. இந்திய தொல்லியல்துறை மேற்பார்வையில் இந்த கோவில் உள்ளது.

இந்தநிலையில் கோவிலின் செயல் அலுவலரின் வாய்மொழி உத்தரவின் பேரில் கோவில் பகுதியில் இருந்து 100 டிராக்டர்களில் மண் அள்ளப்பட்டது. இதனால் கோவிலின் கட்டிடம் உறுதியிழந்து உள்ளது. காசி விஸ்வநாதர் கோவிலின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 2023-ம் ஆண்டு ஆலோசனை நடத்தப்பட்டு, கோவிலை மறுசீரமைப்பு செய்வதற்காக அரசு நிதி ஒதுக்கியது. ஆனால் அந்த நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

குறிப்பாக, கோவிலின் தூண்களை சீரமைக்கவில்லை. ராஜகோபுரத்தில் மழைநீர் கசிவு சரிசெய்யப்படவில்லை. இதனால் பழமையான கோவிலை இழக்கும் நிலையும், பக்தர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலையும் உள்ளது.

கோவிலை புனரமைக்க ஒதுக்கிய நிதி முறைகேடு செய்யப்பட்டது விசாரணையில் உறுதியாகி உள்ளது. இதற்கிடையே வருகிற 7-ந்தேதி அங்கு கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் தீவிரம் அடைந்து உள்ளன. புனரமைப்பு பணிகள் முழுமையாக முடிக்கும் வரை கும்பாபிஷேகம் நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும். புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்ய வக்கீல் கமிஷனர் நியமிக்க வேண்டும். அரசு நிதியை மோசடி செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். – இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை நேற்று நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு விசாரணை செய்தது. அப்போது, புனரமைப்புப் பணிகளை ஆய்வு செய்ய வக்கீல் கமிஷனர், ஐ.ஐ.டி. குழுவினரை நியமித்தும், அதுவரை கும்பாபிஷேகம் நடத்த தடை விதித்தும் உத்தரவிட்டது. தொடர்ந்து வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி... அழைக்கிறார் மோதிஜி!

இந்நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜரானார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான டி எஸ் ஆர். வேங்கட ரமணாவும் இந்த வழக்கில் ஆஜரானார்.

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் புனரமைப்பு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு விட்டன. கோவில் புனரமைப்புக்கான நிதி முறையாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. கும்பாபிஷேகத்துக்கான பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு உள்ளன. எனவே இதில் ஆய்வு செய்ய தேவையில்லை. குடமுழுக்கு முடிந்த பின்னர் ஐ.ஐ.டி. குழுவினரை கொண்டு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யலாம். கும்பாபிஷேகத்துக்கான கணபதி ஹோமம் முடிந்த பின்னர் குடமுழுக்கை நிறுத்துவது ஏற்கத்தக்கதல்ல. எனவே கும்பாபிஷேகத்துக்கு விதித்த தடையை நீக்க வேண்டும்” என கோரினார்.

இதை அடுத்து, நீதிபதிகள், தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டனர். மேலும், ஐஐடி குழு அறிக்கையும் வழக்கறிஞர் குழு அறிக்கையும் சமர்ப்பிக்கவும் உத்தரவு பிறப்பித்தனர்.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

Related articles

Recent articles

spot_img