தமிழக அளவில் தற்போது 27 மாவட்டங்களில் இரண்டு தேதிகளில், இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் மட்டுமில்லாது, ஒன்றியக்குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் என்று 4 பதவிகளுக்கும் தேர்தல் மிகுந்த அளவில் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இதில் 2 பதவிகள் அதாவது ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவியும், மாவட்ட கவுன்சிலர் பதவியும் கட்சி சார்புடையது. ஆகவே தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு உள்ளாட்சி தேர்தலில் வேலை பார்த்தது.
ஆனால்., தமிழக அளவில் அதிமுக.,வினை விட ஓரளவு அதிக இடங்களை தி.மு.க பிடித்த நிலையில் அ.தி.மு.க கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஒ.பி.எஸ் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியும் சற்றே கோபத்துடன் இந்தப் பின்னடைவுக்கு காரணத்தைத் தேடுங்கள் என்றனர்.
இது ஒரு புறம் இருக்க, சத்தமே இல்லாமல், கரூர் மாவட்டத்தினை அ.தி.மு.க வின் கோட்டையாக மீண்டும் மாற்றியவர், தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அ.தி.மு.க கழக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
இதில் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பதவியில் 115 இடங்களில் அ.தி.மு.க 66 இடங்களும், பா.ஜ.க 3 இடங்களும் என மொத்தம் 69 இடங்களை கைப்பற்றியது.
சுயேட்சை 9 இடங்களை கைப்பற்றினர். இதில் தி.மு.க 33 இடங்களும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 3, கம்யூனீஸ்ட் மார்க்சிஸ்ட் ஒரு இடமும் ஆக மொத்தம் சேர்த்து தி.மு.க கூட்டணி மொத்தம் 37 இடங்களை மட்டுமே வென்றது.
சுயேட்சைகள் 9 பேரும் அதிமுக வில் இணைய உள்ளதால், மொத்தம் 115 இடங்களுக்கு அ.தி.மு.க மட்டுமே 78 இடங்கள் பிடித்துவிட்டன,
கரூர் மாவட்ட கவுன்சிலர் பதவியில் 12 பேரில் 9 பேர் அ.தி.மு.க.,வினர்! 3 பேர் மட்டுமே தி.மு.க என்பதால் தற்போது கேள்வியே, புதிதாக பொறுப்பேற்ற தி.மு.க மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி என்ன செய்து கொண்டுள்ளார் என்பது தானாம்!
ஏற்கெனவே, திருட்டு சாராயம் கடத்தி அதை டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்த புகாராக, முன்னர் தி.மு.க ஆட்சியில் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அ.தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றதும், இவர் அமைச்சரானார். இந்த நிலையில், ஆட்கடத்தல் புகார், வேலை வாங்கித் தருவதாக மோசடி என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த நிலையில், ஆட்சி மாற உள்ளது என்று நினைத்து அ.தி.மு.க.,வில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், பின்னர் தி.மு.க என்று கட்சி விட்டு கட்சி மாறிய அவருக்கு திடீரென்று மாவட்ட செயலாளர், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ என்று திடீர், திடீரென்று திருப்பமாக தி.மு.க வில் இருந்த நிலையில்., இவர் மாவட்ட செயலாளராக இருந்த போது ஏன் இவ்வாறு வாக்குகள் தி.மு.க வில் குறைந்தது என்று கேள்வி எழுந்துள்ளது.
இத்தனை வருடம் தி.மு.க வில் விசுவாசியாக இருந்த பிரமுகர்களை கட்சியை விட்டு நீக்கியது தான் மூலகாரணம் என்று அறிவாலயம் தரப்புக்கு சொல்லப் பட்டுள்ளது. உடனே ஷாக் ஆன, ஸ்டாலினோ, எந்த வித சலசலப்பும் தொண்டர்களிடம் காட்டாமல், அவரது மகன் உதயநிதி மூலம், மகேஷ் பொய்யாமொழி வகையறா சுட்டிக்காட்டுவது சென்றுள்ளதாம்,
அதே நேரம், ஒரே கட்சியில் இருந்துகொண்டு.. அதுவும் சாதாரண ஒன்றிய செயலாளர் என பதவியில் இருந்து… ஒன்றிய கவுன்சிலர் ஆகி, அ.தி.மு.கவை மட்டுமே இன்றுவரை நம்பிய எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு மாவட்ட செயலாளர் பதவியுடன், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் என பதவி கொடுத்து அழகு பார்த்தது அதிமுக.,! அந்தக் கட்சிக்கு தற்போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி தேடிக் கொடுத்துள்ளார் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்!
இவருக்கு அ.தி.மு.க தலைமை நிலையத்தில் இருந்து ஏராளமான பாராட்டுகள் குவிந்தன. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஒ.பி.எஸ்ஸும் வாழ்த்தியுள்ளனர். இதனால் உற்சாகம் அடைந்த விஜயபாஸ்கர், வரவிருக்கும் 2021 சட்டமன்றத் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க.,வை வெற்றி பெறச்செய்வேன் என்று சூளுரைத்துள்ளாராம்.
தற்போது கரூர் மாவட்டம், அ.தி.மு.க கோட்டையாக மாறியுள்ளது!