தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சி ஒன்று, இந்தியாவின் முன்னணி கார்ப்பரேட் அரசியல் வியூக நிறுவனத்துடன் உடன்பாட்டை எட்டியுள்ளது. இதற்காக அந்த கட்சி செலுத்தியுள்ள கட்டணம் ரூ. 360 கோடி முதல் ரூ. 450 கோடி வரை என்கிறார்கள். இவர்கள் முன்னெடுக்கப் போகும் வெறுப்பு அரசியல் வியூகம் என்பது நாகரீகமான தமிழச் சமூகத்தை – பெரும் சமூக மோதல்கள் நடக்கும் காட்டுமிராண்டி கூட்டமாக மாற்றப்போகும் ஆபத்து உள்ளது!
இரட்டை வியூகம்: வெறுப்பும் இலவசமும்!
கார்ப்பரேட் அரசியல் அமைப்பு பல மாநிலங்களில் நடத்தியுள்ள பிரச்சாரங்களையும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்துள்ள Cambridge Analytica முன்மாதிரியையும் கொண்டு பார்க்கும் போது – இவர்கள் தமிழ்நாட்டில் வெறுப்பு பிரச்சாரத்தையும் இலவச அரசியலையும் மிகப்பெரிய அளவில் நடத்துவார்கள்.
(ஒரு மாதத்திற்கு 40 கோடி ரூபாயை செலவிடும் பலமும், சமூக ஊடகத்தில் பிரச்சாரம் செய்ய மட்டும் மாதம் 25 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் 350 பேர் நியமிக்கப்பட்டிருப்பதும் இவர்களது பலத்தை உணர்த்தும்)
வெறுப்பு பிரச்சாரம்: சமூக ரீதியாக “நாங்கள் X அவர்கள்” என மக்களை இருபிளவாக வகைப்படுத்தி, ஒரு தரப்பினை குறிவைத்து வெறுப்பு பிரச்சாரத்தை நடத்துவது இவர்களது முதலாவது இலக்காக இருக்கக் கூடும். ஒவ்வொரு சமூகத்தையும் குறிவைத்து, அவர்களுக்கு எதிரானதாக கருதப்படும் சமூகம் குறித்த வெறுப்பினை திட்டமிட்டு வளர்ப்பார்கள். இது மிகப்பெரிய கலவரங்களுக்கு வழிவகுக்கும்.
இலவச அரசியல்: பலவிதமான இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள். ஒவ்வொரு மக்கள் பிரிவினருக்கும் ஒரு கவர்ச்சிகரமான இலவசத்தை காட்டுவார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அள்ளி வீசப்பட்ட போலி வாக்குறுதிகளை போல, பல மடங்கு பொய்யான, சாத்தியமே இல்லாத வெற்று இலவச திட்டங்களை மிகப்பெரிய அளவில், மக்களை நம்பவைக்கும் அளவுக்கு பிரச்சாரம் செய்வார்கள்.
உண்மையில், Cambridge Analytica வகை அரசியல் பிரச்சாரம் என்பது அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தண்டனைக்குரிய குற்றம் ஆக்கப்பட்டுள்ளது. Cambridge Analytica நிறுவனத்தின் மீது அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் கிரிமினல் வழக்குகள் நடந்துவருகின்றன. ஆனால், அதே தேர்தல் பிரச்சார நுட்பம் இந்தியாவில் தங்குதடையின்றி செயலாக்கப்படுகிறது.
மொத்தத்தில், நல்லாட்சி (Good Governance), அனைவருக்குமான நீடித்த வளர்ச்சி (Sustainable Development), அனைத்து சமூகங்களும் ஒற்றுமையாக வாழும் நல்லிணக்க சூழல் (Peaceful Coexistence) ஆகியன இனி தமிழ்நாட்டில் இல்லாமல் போகும். அத்தகைய ஒரு ஆபத்தான சூழல் கார்ப்பரேட் அரசியல் அமைப்பினால் உருவாகியுள்ளது. இதனை தமிழக மக்கள் எவ்வாறு எதிர்க்கொள்ளப் போகிறார்கள் என்பது இனிவரும் பல தலைமுறைகளை பாதிக்கப்போகும் கேள்வி ஆகும்.
- இர.அருள்