
கலைஞர் திமுக… கதிமுக., இதுதான் ஸ்டாலினுக்கு கட்டுக்காய் கொடுக்கப் போகும் அழகிரியின் அதிரடி. அடுத்த அதிர்ச்சி, ரஜினியுடன் கூட்டணி சேர்த்து களம் காணப் போவது! ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுக்க அழகிரி எடுத்துள்ள ஆயுதம் இதுதானாம்!
விஜயகாந்துக்கு கைகொடுத்த மதுரை மண்ணில் இருந்தே ரஜினியும் இந்த முறை தனது அரசியல் பயணத்தைத் தொடங்குவார் என்கின்றார்கள். ரஜினி தனது கட்சி மாநாட்டை இந்த ஆகஸ்டில் பிரமாண்டமாக மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதே நேரம், கலைஞர் திமுக., என்ற கட்சியை மு.க.அழகிரி அறிவிக்க வாய்ப்பு உண்டு என்கிறார்கள் அவரது விசுவாசிகள்!

கருணாநிதி இருந்த போதே, தனது மகன் ஸ்டாலினுக்காக, இன்னொரு மகன் அழகிரியை கழற்றி விட காலம் பார்த்துவந்த கருணாநிதி, கொல்ல சதி செய்வதாக அழகிரி மீதே பழியைப் போட்டு, கட்சியை விட்டு ஒதுக்கினார். அப்போது அதிர்ச்சியில் கட்சியை விட்டு ஒதுங்கி இருந்தாலும், தந்தையின் மறைவுக்கு பிறகு எப்படியாவது திமுகவில் இணைந்து விடலாம் என பலவகையில் முயற்சி செய்து வந்தார் அழகிரி.
மு.க.ஸ்டாலின் போட்ட முட்டுக்கட்டைகளால் அழகிரியின் ஆசை மட்டும் நிறைவேறவில்லை. மதுரையில் தனக்கென செல்வாக்கை வளர்த்து வந்த அழகிரிக்கு, தனது ஆதரவாளர்கள் நிர்கதியாக நிறுத்தப் பட்ட நிலை கண்டு மனம் ரொம்பவே தவித்துப் போனது. தனக்குத்தான் இடம் கிடைக்கவில்லை, தனது மகனுக்காவது ஏதாவது ஏற்பாடு செய்வோம் என்று எண்ணி, முரசொலி அறக்கட்டளையில் தனது மகனுக்கு பொறுப்பு கொடுக்குமாறு கேட்டுப் பார்த்தார். ஸ்டாலினோ, தனது மகனுக்கு இளைஞரணித் தலைவர் பதவியைக் கொடுத்து அழகு பார்த்தாரே ஒழிய, அழகிரியின் மகனை சட்டை செய்யவில்லை!

ஒட்டுமொத்தமாக தாம் ஓரங்கட்டப் பட்ட நிலையில், மனம் வெறுத்துப் போன அதிரடி அரசியல் அழகிரி, இதனால் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். ஆனால், அவர் 2021க்காகக் காத்திருக்கிறார் என்பது தற்போதைய அவரது அரசியல் நடவடிக்கைகளில் இருந்து வெளித் தெரியத் தொடங்கியுள்ளது. அண்மைக் காலமாக திமுகவுக்கு எதிராக கொஞ்சம் குரலை எழுப்பத் தொடங்கியுள்ளார்.
அழகிரிக்கும் ரஜினிக்கும் நெருக்கமான நட்பு உண்டு. எனவே, ரஜினியின் கட்சியில் அழகிரி இடம்பெற்று முக்கிய தலைமையாக வலம் வரக் கூடும் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். எனவே, ரஜினி கட்சியில் இணைந்து அவர் செயல்படக்கூடும் என எதிர்ப்பார்க்கப் பட்டது.

அதற்கு ஏற்ப, ரஜினியை சந்தித்து மு.க.அழகிரி அவ்வப்போது அரசியல் பேச்சுவார்த்தைகளையும் நடத்தி வந்தார். இருப்பினும், ரஜினியின் கட்சியில் இல்லாமல், தனிக்கட்சி தொடங்கி, ரஜினிக்கு ஆதரவாக செயல்படுவார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இருப்பினும், மு.க.அழகிரி குறித்து ஸ்டாலின் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் தான், தனிக் கட்சி தொடங்குவது, அந்தக் கட்சிக்கு கலைஞர் தி.மு.க என பெயர் சூட்டுவது என்கிற முடிவுக்கு அழகிரி வந்துள்ளதாகக் கூறப் படுகிறது. புதிய கட்சியைத் தொடங்கி, ரஜினி கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொளவது தான் திட்டம்.

தற்போதைய திமுக., தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் பழைய திமுக., தலைவர்களை கதிமுக.,வில் இணைத்து அவர்களுக்கு ஒரு தளத்தை ஏற்படுத்திக் கொடுக்க விரும்புகிறார் அழகிரி என்கிறார்கள். இந்தக் கருத்தோட்டத்தின் அடிப்படையில் தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார் அழகிரி.
அனேகமாக வரும் ஆகஸ்ட் மாதத்தில் 2021ஐ கணக்கு வைத்து, ரஜினி தனது கட்சி மாநாட்டை மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதே நேரம், தனது கலைஞர் திமுகவை மு.க.அழகிரி அறிவிக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்!


