ஆந்திராவில் 3 லிருந்து 17 வயதுள்ள குழந்தைகள் 40 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று வந்தவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்களே இவர்கள். தங்களுக்கு கொரோனா தொற்று உள்ளது என்று தெரியாமலேயே இவர்களுக்கு அந்த தொற்று பரவியுள்ளது.
மொத்தமுள்ள 475 பேரில் 124 பெண்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கும் தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று வந்த அவர்களை குடும்ப உறவினர்களாலேயே பரவியுள்ளது. மேலும் 60 வயதுக்கும் மேற்பட்டோர் 36 பேர்.
அதே போல் தெலுங்கானாவிலும் 25 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், குழந்தைகள் அனைவருக்கும் லேசான தொற்றே உள்ளதாகவும், விரைவில் குணமடைந்து விடுவர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை வெளியிட்டுள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில், இந்த செய்தியை உணர்த்த வெளியிட்டுள்ள புகைப்படம் தான் வியக்க வைக்கிறது. உண்மையை உரைக்கும் வகையில் செய்திக்கும், படத்திற்கும் தொடர்பே இல்லாத நிலை இது. நிலைமையின் தீவிரத்தை உணர்த்தும், செய்திகளை வெளியிட்டால் மட்டுமே மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும்.
அதை விடுத்து மதரீதியாக கருதி விடுவார்களோ என்ற அச்சத்தில் செயல்படுவது யாருக்கும் எந்த பலனையும் தராது. தப்லீக் மாநாட்டிற்கு சென்றவர்களை தனிமைப்படுத்துவது இது போன்ற செயல்கள் தான்.
தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று வந்து அதன் தொடர்புகள் மூலம் பலருக்கும் விரைவில் பரவும் நிலையினை வெளிப்படையாக உணர்த்துவதன் மூலமே இஸ்லாமிய சமூகம் இந்த தொற்றினால் பாதிக்கப்படாமல் இருக்கும் என்பது உறுதி. மாறாக, சில அடிப்படைவாத அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் மதசார்பின்மை என்ற முகமூடியோடு செயல்படுவது தீர்வாகாது. இந்த செய்தியை பொறுப்போடு உணர்த்த நினைத்திருந்தால் இந்த படம் இணைக்கப்பட்டிருக்காது.
இந்தியா மத சார்பற்ற நாடு தான். ஆனால், போலி மதச்சார்பின்மையுள்ள நாடு அல்ல. இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பண்பாடே பெரும்பான்மை மக்களின் பெருந்தன்மையான சகிப்பு தன்மை தான்.தப்லீக் ஜமாத் மாநாட்டினையோ, மாநாட்டிற்கு சென்றவர்களையோ யாரும் குறை கூறவில்லை.
ஆனால், சென்று வந்தவர்களிடம் தொற்று இருந்தால் மேலும் மேலும் அது அந்த சமூகத்தையே பெருமளவில் தாக்கும் என்பதையும் அதனால் பாதிக்கப்பட்டது, பாதிக்கப்படப்போவது இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் என்பதையும் மறைக்க முடியாது. மறக்க கூடாது. அரசியல் வாதிகளையும், அடிப்படைவாதிகளையும் புறக்கணித்து அரசுக்கு ஒத்துழைப்பதே தலையாய கடமை மற்றும் தேவை.
மூடி மூடி மறைப்பதால் பிரச்சினைகள் தீர்ந்து விடாது.
- நாராயணன் திருப்பதி,
செய்தி தொடர்பாளர், பாரதிய ஜனதா கட்சி.