கையெழுத்து நல்லா இருக்கறது, பொண்டாட்டி கிடைக்கற மாதிரி தனி யோகம்யா!

Published:

arlakshmanan
arlakshmanan

சற்று பின்நோக்கி பார்க்கின்றேன். 1978 – 79 ஆண்டுவாக்கில் என்னுடைய சீனியர் காந்தியின் வீடு அடையாறு காந்தி நகரில், 47 மூன்றாவது பிரதான சாலையில் அமைந்திருந்தது. நான் அங்கு தினமும் வழக்கறிஞர் பணிக்கு செல்வது வழக்கம். அதற்கு அடுத்த வீடு அன்றைக்கு வழக்கறிஞராக இருந்த
ஏஆர். லட்சுமணனின் வீடு. காந்தி வீட்டின் எதிர்புறம் வழக்கறிஞராக இருந்த எஸ். ஜெகதீசனின் வீடு இருந்தது. ஜெகதீசனும் லட்சுமணனும் பிற்காலத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஆனார்கள். ஏஆர். லட்சுமணன் டில்லி உச்சநீதிமன்றத்திலும் நீதிபதியாக இருந்தார்.

என்னுடைய சீனியர் ஆர்.காந்தி, ஏ. ஆர். லட்சுமணன், எஸ். ஜெகதீசன், நாவலர் நெடுஞ்செழியனின் மைத்துனர் குழந்தைவேலு. (கிரீன்வேஸ் சாலையில் இருந்த குழந்தைவேலு அவர்கள் குடியிருந்த வீட்டை தான் திரு. டி.ஜி.எஸ். தினகரன் அவர்கள் வாங்கி இயேசு அழைக்கிறார் தேவாலயத்தை நிறுவினார்.)இந்த நான்கு சீனியர்களோடு இரண்டு கார்களில் காலை 9.30 மணி அளவில் அடையாறு காந்தி நகரில்ருந்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எங்களை போன்ற ஜூனியர்களும் பயணிப்பது வாடிக்கை. இதில் நானும் மறைந்த எம். கந்தசாமியும் உயர்நீதிமன்ற நீதிபதி ஆகவில்லை. நீதிபதி கற்பக விநாயகம், பால் வசந்தகுமார், டி.எஸ். சிவஞானம், கே.பி.கே வாசுகி, எம்.ஜெயசந்திரன்,கே. ரவி சந்திர பாபு என்று நீதிபதிகளான பெரிய பட்டியலையேச் சொல்லலாம்.
ஏஆர். லட்சுமணன், காந்தி மற்றும் குழந்தைவேலு காரில் செல்லும்போது மிகுந்த நகைச்சுவையோடு பேசிக் கொண்டே வருவதை எஸ். ஜெகதீசன் கவனித்துக் கொண்டே மட்டும் அமைதியாக இருப்பார், எதுவும் பேசமாட்டார். எனது சீனியர் ஆர்.காந்தியும், குழந்தைவேலும் தமக்கு உயர் நீதி மன்ற நீதிபதி பதவி வேண்டாம் என்று மறுத்துவிட மற்ற இருவரும் நீதிபதிகளா இருந்து ஓய்வுப் பெற்றனர்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

ஏஆர். லட்சுமணன் இன்றைக்கு (27.08.2020) காலமாகி விட்டார்.

ஏஆர். லட்சுமணன் நல்ல பண்பாளர், பல விஷயங்களை பேசுவார். 1980-82 காலகட்டங்களில் சில சமயங்களில் காந்தி வீட்டில் பணிகளை முடித்துவிட்டு கிளம்பும்போது திடீரென்று “இங்க வாங்க” என்று என்னை அழைத்து அரசியல் விஷயங்கள் எல்லாம் பேசிக் கொண்டிருப்பார்.

ஒரு சமயம் வேலுப்பிள்ளை பிரபாகரனோடு நான் வெளியில் செல்ல வேண்டியிருந்தது. அப்போது என்னை அழைத்துச் செல்ல காந்தி வீட்டிற்கு வந்த பிரபாகரன் வாசலில் வாகனத்தில் காத்திருந்தார். நான் வெளியில் வந்து கிளம்பும் முன் பிரபாகரன் இருப்பதை அறிந்த ஏஆர். லட்சுமணன், “பிரபாகரனை வரச்சொல்லுங்க” என்று அழைத்தார். பிறகு பரஸ்பரம் ஒருவரையொருவர் நான் அறிமுகம் செய்து வைத்தவுடன் அவரை வீட்டிற்கு அழைத்து தேநீர் கொடுத்து சிறிது நேரம் பேசிவிட்டு வழியனுப்பினார். நதிநீர் பிரச்சினைகள் குறித்தி நான் போட்ட வழக்குகள் குறித்து எல்லாம் அன்றைக்கு ஆங்கில ஹிந்துவில் படித்து விட்டு “பரவாயில்ல தொழில் செய்றதோடு மட்டுமில்லாம இது மாதிரி விஷயங்களிலும் அக்கறை காட்டுறீங்க. நீங்க அரசியல்ல நல்லா முன்னேறனும், நல்லா வரணும்” என்றார். பிற்காலத்தில் பார்க்கும்பொழுதெல்லாம் நீதிபதி ரத்தினவேல் பாண்டியனிடம் , “இவருடைய பொதுநல பிரச்சினை குறித்தான வழக்குகள் பல என்னிடம் வந்துள்ளது” என்று என்னைப் பற்றிச் சொல்வார். சமீபத்தில் ரத்தினவேல் பாண்டியன் மறைவுக்கு அவரது இல்லத்திற்கு ஏஆர். லட்சுமணன் வந்தார். அப்போது அங்கு வைகோவும் இருந்தார். அப்போது, “நதிநீர் இணைப்புக்கு நீங்க பட்ட பாடு லேசுபட்ட பாடா?” என்று சொன்னதெல்லாம் நினைவுக்கு வருகிறது.

அவருடைய கையெழுத்து அற்புதமாக இருக்கும். காஸ்லிஸ்ட்டில் பிங்க் நிற மையினால் பின்பக்கம் எந்த வழக்கு எந்த நீதிமன்றத்திற்கு வருகிறது என்று தானே கைப்பட எழுதுவது பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும். ஜெகதீசனின் கையெழுத்தும் அழகாகவே இருக்கும். காந்தியின் கையெழுத்து கொஞ்சம் விட்டு விட்டு இருக்கும்.“கையெழுத்து நல்லா இருக்கறது, பொண்டாட்டி கிடைக்கற மாதிரி தனி யோகம்யா” என்பார் ஏஆர். லட்சுமணன்.

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அடையாறு காந்தி நகர் வீட்டை தனது மகனுக்கு கொடுத்து விட்டு கொட்டிவாக்கத்தில் வீடு கட்டி 10-15 ஆண்டுகளுக்கு முன் வந்து குடியேறினார். ஒருநாள் தொலைபேசியில் எனது நதிநீர் இணைப்பு வழக்கு குறித்து வெளிவந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு வேண்டும் என்று கேட்டதும் கொடுத்தனுப்பினேன். கதைசொல்லி இதழ் அவருக்கு தொடர்ந்து அனுப்புவது வாடிக்கை. சமீபத்திய இதழைக் கூட இரண்டு மூன்று நாட்களுக்கு முன் தான் அனுப்பினேன். இதழ் கிடைத்திருக்கும். திருச்சியில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருந்த காரணத்தால் படிக்க இயலாது போயிருக்கும். கடைசியாக அவர் என்னைத் தொடர்பு கொண்டபோது கேட்டது, “கதைசொல்லி எப்ப வரும்?” என்பது தான். இன்றைக்கு அவர் உயிருடன் இல்லை.

செட்டிநாடு பகுதிகளான காரைக்குடி, தேவக்கோட்டை போன்ற இடங்களிலிருந்து நிறைய சிவில் வழக்குகள் இவரிடத்தில் வரும். CRP, First Appeal (Appeal Suit), Second Appeal (SA) மாதிரி வழக்குகள் அதிகமாக இருக்கும். அதே மாதிரி ஒரிஜினல் சைடில் ஹைகோர்ட் சூட்டுகளும் அவர் அதிகமாக நடத்துவார். வரது இல்லத்தில் நடைபெற்றது.

ஏஆர்.லட்சுமணன், சட்ட ஆணையத் தலைவராகவும், முல்லைப் பெரியாறு ஆய்வுக் குழுவிலும் இடம்பெற்று ஆலோசனைகளை வழங்கி வந்தார். பொது இடத்தில் புகை பிடிக்கத் தடை உள்ளிட்ட பல்வேறு சிறப்புவாய்ந்த தீர்ப்புகளை வழங்கியவர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இவரது மனைவி மீனாட்சி ஆச்சி (76) உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

இந்த சூழலில் காந்தி, ஏஆர். லட்சுமணன், எஸ். ஜெகதீசன், குழந்தைவேலு ஆகிய நான்கு பேரும் கலந்துவிட்டாலே மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடும். அவ்வப்போது இவர்கள் நால்வரும் அனைத்து ஜுனியர்களும் அழைத்து சந்திப்புகள் நடத்தும்பொழுது விருந்து உபசாரங்கள் அற்புதமாக இருக்கும். பி.ஹெச். பாண்டியனும், நீதிபதி ரத்தினவேல் பாண்டியனும் சில நேரங்களில் கலந்துக் கொள்வார்கள்.

இப்படியான ஒரு நல்ல மனிதர் ஏஆர்எல். கிட்டத்தட்ட 41 ஆண்டுகள் அவரோடு பழகியதுண்டு. கடந்த 10 ஆண்டுகளாக அவரை அதிகம் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் அமையவில்லை. கதைசொல்லியை வெகுவாக பாராட்டுவார். எதேச்சையாக சில நேரங்களில் விமான நிலையங்களில் சந்திக்கும் பொழுது, “உங்களுக்கான இடம் சட்டமன்றத்துலயோ பாராளுமன்றத்துலயோ இன்னும் கிடைக்கலையோன்னும் நானும் காந்தியும் சந்திச்சு பேசும்போதெல்லாம் பேசிக்குவோம்” என்பார். செட்டிநாட்டு மக்கள் நன்மொழி பேசி நல் உபச்சாரம் செய்வார்கள் என்பதற்கு ஏஆர். லட்சுமணன் ஒரு இலக்கணமாக வாழ்ந்தவர். அவருடைய புதல்வர் சுந்தரேசனும் சென்னை உயர்
நீதி மன்றத்தில் இன்றைக்கு மூத்த வழக்கறிஞராக இருக்கிறார். பார் அசோஷியன் தலைவராகவும் இருக்கிறார்.
ஏஆர். லட்சுமணன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

  • வழக்கறிஞர் கே. எஸ். இராதாகிருஷ்ணன்
    (திமுக., செய்தி தொடர்பாளர்)

Related articles

Recent articles

spot_img