திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறக்கூடிய அஷ்டதள பாத பத்ம ஆராதனை சேவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை குடும்பத்தினருடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
அவரை தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு துணை செயல் அலுவலர் பாலாஜி ஆகியோர் வரவேற்று சுவாமி தரிசனம் செய்து வைத்தனர். ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்தப் பிரசாதங்களை வழங்கி வேத பண்டிதர்கள் வேத ஆசிர்வாதம் செய்து வைத்தனர்.
பின்னர் கோவிலுக்கு எதிரே உள்ள அகிலாண்டம் அருகே தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டார்.
இதை அடுத்து ஆஞ்சநேய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு சென்னை புறப்பட்டுச் சென்றார்.
தமிழக சட்டப் பேரவையில் 117 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சியை தக்க வைக்க இயலும் என்ற நிலையில், தற்போது நடைபெற்ற இடைத் தேர்தலில் அதிமுக 9 இடத்தில் வெற்றி பெற்றது. இதனால் சட்டப்பேரவையில் தற்போது அதிமுகவிற்கு 122 இடங்களுடன் பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அரசுக்கு இருந்த பெரும்பான்மை குறைவுக்கான சிக்கல் இடைத்தேர்தல் முடிவால் தீர்ந்ததை அடுத்து, ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து ஆசி பெற வந்ததாக உடன் இருந்தவர்கள் கூறினர்.