விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 35)

Published:

manakkulavinayakar

விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 35)

விளக்கம்: முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

நிறைவு செய்வதற்கு முன் 3

      “ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத் – அங்ஙனமாக, மானுடா, நீ ஏன் வீணாகப் பொறுப்பைச் சுமக்கிறாய்? பொறுப்பைத் தொப்பென்று கீழே போட்டுவிட்டுச் சந்தோஷமாக உன்னால் இயன்ற தொழிலைச் செய்துகொண்டிரு. எது எப்படியானால் உனக்கென்ன? நீயா இவ்வுலகைப் படைத்தாய்? நீயா இதை நடத்துகின்றாய்? உன்னைக் கேட்டா நட்சத்திரங்கள் நடக்கின்றன? உன்னைக் கேட்டா நீ பிறந்தாய்?” எல்லாச் செயல்களும் கடவுளின் செயலாக நிற்கும் உலகத்தில் எவனும் கவலைப்படுதலும் துயர்ப்படுதலும் அறியாமையன்றோ?” என்பது பகவத் கீதையின் முன்னுரையில் பாரதியார் சொல்லும் கருத்து. இதனை

அச்ச மில்லை அமுங்குத லில்லை

நடுங்குதலில்லை நாணுதலில்லை

பாவமில்லை பதுங்குத லில்லை

ஏது நேரினும் இடர்ப்பட மாட்டோம்

அண்டஞ் சிதறினால் அஞ்ச மாட்டோம்

கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம்

என்றும்

ALSO READ:  மதமாற்ற விவாதம் ... மீண்டும்!

மூட நெஞ்சே! முப்பது கோடி

முறையுனக் குரைத்தேன், இன்னும் உரைப்பேன்

தலையில் இடிவிழுந்தால் சஞ்சலப்படாதே

ஏது நிகழினும் நமக்கேன்? என்றிரு,

பாராசக்தி உளத்தின் படியுலகம் நிகழும்

நமக்கேன் பொறுப்பு?

என்றும் குறிப்பிடுவார்.

      “கற்புடைய மனைவியுடன் காதலுடன் அறம் பிழையாமல் வாழ்தலே இவ்வுலகத்தில் சுவர்க்க வாழ்க்கையை ஒத்ததாகும். வீட்டிலிருந்து பந்துக்களுக்கும் உலகத்தாருக்கும் உபகாரம் செய்துகொண்டு, மனுஷ்ய இன்பங்களையெல்லாம் தானும் புசித்துக்கொண்டு, கடவுளை நிரந்தரமாக உபாசனை செய்து, அதனால் மனிதத் துன்பங்களின்றும் விடுபட்டு ஜீவன் முக்தராய் வாழ்தல் மேலான வழி” என்பது பாரதியார் பகவத் கீதையின் முன்னுரையில் சுட்டிக்காட்டும் கருத்து. விநாயகர் நான்மணி மாலையிலோ

துறந்தார் திறமை பெரிது அதனினும் பெரிதாகும் இங்குக்

குறைந்தாரைக் காத்து எளியார்க்கு உணவீந்து குலமகளும்

அறந்தாங்கு மக்களும் நீடூழி வாழ்கென அண்டமெலாம்

சிறந்தாலும் நாதனைப் போற்றிடும் தொண்டர் செயுந்தவமே.

என்று இதே கருத்தினை எளிதாகச் சொல்லுவார்.

      மேலே காட்டப்பட்ட ஒப்புமைப் பகுதிகள் சிலவே. பாரதி தாம் விவரித்த பகவத் கீதை உட்பொருளை விளக்கிக் காட்டும் இலக்கியமாகத்தான் விநாயகர் நான்மணி மாலை படைத்தார் என்பது மேலே உள்ள இருநூல்களின் மேற்கோள்களாலும் இனிதே விளங்கும். ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியே விளக்கிச் சொன்னால் மிகப்பெரிய நூலை உருவாக்கலாம்.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

      பாரதி இந்தப் பாடலில் சமத்துவத்தையும் பகவத் கீதையையும் இணைத்திருக்கின்றார். எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன் என்ற கீதை வாசகம் இங்கே நினைவூட்டப்பட்டிருக்கிறது. எல்லாம் கடவுள் மயம் என்பதிலிருந்துதான் பாரதி அன்பை, விடுதலையை, சமத்துவத்துவத்தைக் கட்டமைக்கிறார். பாரதி கூறும் அமரநிலை என்பது சமத்துவ சமூகமே. அதுவே கிருத யுகம். பாரதி ஆன்மீகத்தின் தனித்தன்மையும் இதுவே.

      விநாயகர் நான்மணி மாலை பாடலும் விளக்கமும் இனிதே முடிவுற்றது. விநாயகப் பெருமான் அருள் அனைவருக்கும் சித்திக்கட்டும். கிருதயுகம் மீண்டும் தோன்றட்டும்.

(உங்கள் கருத்துகளை தெரிவிக்க…: முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன், kvbmanian@yahoo.com)

Related articles

Recent articles

spot_img