
தேவை சுய ஒழுக்கம்
எத்தனை சோதனை வரினும் வீழோம்! வென்றே காட்டுவோம்!…
ஆம் இது பாரத தேசத்திற்கான அடிப்படைப் பண்பு!
இது ஏதோ கொள்ளையர்கள் போகிற போக்கில் தங்கி போக உருவான நாடு அல்ல. ஒரு நாட்டில் உள்ள குற்றவாளிகளை நாடு கடத்தியதால் உருவான ஜனத்தொகையால் அடையாளப் படுத்தப்பட்ட நாடு அல்ல.. இதன் சரித்திரம் கூறுகிறது.. பல ஆயிரம் ஆண்டுகள் பெருமை கொண்டது இந்த நாடு என்று… சில இதிகாசத்தின் கால அளவு- சரித்திரம் கூறும் கால அளவையும் தாண்டிய, வரலாற்றினை பறைசாற்றுகிறது.
பாரத நாடு பழம்பெரும் நாடு என்கிறான் தேசியக் கவி. பாரதியர்கள் பூஜ்யத்தை உலகிற்கு அளித்ததால் தான் என்னை போன்றோர் சாதிக்க முடிந்தது என்கிறார் நோபல் பரிசு பெற்ற ஐன்ஸ்டீன்.
எண் கணிதம், வான சாஸ்திரம், சிற்பசாஸ்திரம், கட்டிடக்கலை, கணிதம் ,ரசாயனம், அறுவை சிகிச்சை இப்படி எல்லாத் துறைக்கும் உலகின் முன்னவர்கள் பாரதியர்களே என்கிறது உலக அரங்கம். பெருந்தன்மையில் இந்தியனை விஞ்சிய மனிதன் கிடையாது.

யாதும் ஊரே யாவரும் கேளிர் , வாசுதேவ குடும்பகம் எனவும் லோகா சமஸ்தா சுகினோ பவந்து (உலகம் வாழ் அனைத்து உயிரினமும் சுகமாக இருக்க வேண்டும் ) எனவும் சொன்ன பெருமக்களை கொண்ட நாடு இந்த நாடு.
..இடுக்கண் வருங்கால் நாம் யார்? நம் வலிமை என்ன? என்றும் அறிய வேண்டும் என்கிறது நமது பழங்கால வரலாறுகள். அதற்காகவே மேற்ச்சொன்ன நம் வலிமை பற்றிய பீடிகை. இவ்வளவு பெருமை வாய்ந்த நாம் சுய ஒழுக்கத்திற்கும் உலகின் முன்னோடியாக இருந்து இருக்கின்றோம் என்று இந்த பெருந்தொற்று காலத்தில் அறிவுறுத்த வேண்டிய கட்டாயத்தில் சிலவற்றைக் கூற விழைகிறேன்.
கூழானாலும் குளித்துக் குடி, கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்பது பழமொழி. இதையே கடைபிடித்து வந்தோம், வருகிறோம். வீட்டின் முன் புறம் சாணம் தெளித்து கோலமிட்டோம். உணவு உண்டு முடித்தவுடன் சாணம் தெளித்து எச்சிலிட்டோம். கடைத் திறக்கும் போது, விழா தொடக்கம், இப்படி அந்நிய மனிதர் கூடும் சமயங்களில் மஞ்சள் கலந்த நீர் தெளித்தோம். அம்மை நோயில் இருந்து பல பெரும் நோய்களுக்கு சுயமாய் மருத்துவரானோம், நோயை விரட்டினோம். ஆனால் இந்த நுண் கிருமிக்கு மட்டும் நாம் அரசை எதிர்பார்ப்பது ஏன்?
.
இந்த கொரோனா கிருமிக்கு இதுவரை நிரூபிக்கப்பட்ட மருந்து கண்டு பிடிக்கப் படவில்லை. இது கண்ணுக்கு தெரியாது. மிக சுலபமாக பரவும். நோய் வந்தவரின் உடலில் இது அதிகாரம் செலுத்துகிறது. பயம், அக்கறை இன்மை, அலட்சியம், ஏற்கனவே இருக்கும் வியாதியின் தீவிரம்.. இவற்றால் தொற்று உயிர் பலியில் முடிகிறது. முதல் அலையில் பிணம் விழும் காட்சி இங்கொன்றுமாய் அங்கொன்றுமாய் இருந்தது ..
இரண்டாம் அலையில் அதுக் கூடி பிணக்குவியல்கள் இப்போது கண் முன்னே. என்னக் கொடுமை! இன்னும் என்ன நடக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. காசை வாங்கி கொண்டு ஓட்டை போட்டு விட்டு, அரசியல் வாதிகள் உங்கள் பிரச்சினைகளை தீர்ப்பார்கள் என்று அலட்சியமாக இருப்பது இந்த தேசத்தின் வரலாற்று மாண்பிற்கு இழுக்காகும்.
அரசின் பங்கிற்கு பல விதமான தடுப்பூசிகள், நோய்க் கிருமித் தொற்றுத் தடுப்பு முறைகள், ஊரடங்குகள் என தன்னால் என்ன முடியுமோ அவற்றை செய்து கொண்டுதான் உள்ளது. பாரத நாட்டின் தீர்க தரிசிகளில் ஒருவராய் நம் பிரதமர்.. சுத்தம் மட்டுமே நல் வாழ்வுதரும் என்பதை கொரோனா வருமுன் ஐந்து வருடம் முன்பே நாட்டிற்கு பறைசாற்றி விட்டார். போதாக்குறைக்கு தூய்மை இந்தியா திட்டம் மூலமாக பல நல்ல விஷயங்களையும் நமக்கு அளித்துள்ளார். சுத்தம் சோறு போடும் என்பது நாம் அறிந்த சொலவடை… கூடவே சுய ஒழுக்கம் உயிர் காக்கும் என்பதை நாம் உணரவேண்டும்.
.
கொரோனாவிற்கு மருந்து இல்லை என்கிறார்கள் .. நான் சொல்வேன் உண்டென்று..!
ஒருவரின் அப்பாவிற்கு கொரோனா,.. இது ஒன்று போதும் அந்த தெருவெங்கும் கொரோனா பரவ.
ஆனால்.. என்ன செய்தான் மகன்?! முதலில் கட்டு கட்டாய் வாங்கினான் முகக்கவசம் எனும் முகமூடியை. அடுத்து அவன் வாங்கியது சில இயற்கை பொருட்களை . அவற்றில், மஞ்சள், கடுக்காய், வெற்றிலை, பழங்கள், கிராம்பு, இஞ்சி , துளசி இருந்தன..
தந்தையிடம் இருந்து அவன் குடும்பத்தில் இருந்த அனைவரும் தூர இருந்தனர்… ஆனாலும் தந்தை சௌகரியமாக கவனித்து கொள்ளப்பட்டார் . 3 வேளை ஆவி பிடித்தார். சத்தான உணவு சாப்பிட்டார் .. மருத்துவர் ஆலோசனையுடன் மருந்துகளும் உண்டார். தெருவில் இருந்த யாருடனும் இவர்கள் முகக்கவசம் இன்றி பேசவில்லை. அனாவசியமாக வீட்டில் உள்ளவர்கள் வெளியே போகவில்லை. எங்கு சென்றாலும் கை கழுவுதல் , சமூக இடைவெளிக் காத்தல் என்று எல்லாவற்றையும் கடைபிடித்தனர்.
இந்த அனுபவத்தை தெருவில் இருந்த அனைவருக்கும் சொல்லி புரிய வைத்தனர். என்ன ஆச்சரியம் அந்த ஒட்டு மொத்தத் தெருவிலும் ஒருவருக்கு மட்டுமே கொரோனா.. அவரும் உயிர் பிழைத்தார். அந்த தெருவில் கட்டை கட்டவில்லை. போலிஸ் வர வில்லை ஆம்புலன்ஸ் வரவில்லை. ஒரு தெருவில் இது சாத்தியம் என்றால் ஒரு கிராமத்தில் இது சாத்தியம் இல்லாமலா போகும், ஒரு கிராமத்தில் இது சாத்தியம் என்றால் , ஒரு பெரும் நகரத்தில் இது சாத்தியம் இல்லாமலா போகும்.
இங்கு கொரோனா என்ற மிருகம் தனித்து விடப்பட்டது , அது உருவாக்க நினைத்த கொரோனா சங்கிலி அறுத்து எறியப்பட்டது. எதனால்? சுய ஒழுக்கத்தால்?
ஆகையால் சுய ஒழுக்கமே பெருந்தொற்றிற்கு மருந்தாகும்!

நாம் செய்யும் தவறுதான் என்ன ?
- கொரோனாவிற்கு SMS – Sanitize, Mask, Social distance அதாவது சுத்தம், முகக்கவசம், சமூக இடைவெளி என்ற சுமுச என்ற மூன்று எழுத்து மந்திரத்தை கடைபிடிக்க மறப்பது.
- அரசு கண்டு பிடித்த தடுப்பூசி ஆபத்தானது என்ற வதந்தியை பரப்பியது.
- ஆங்கில மருந்துடன் நம் பாரம்பரிய மருந்துகள் மீதும் நம்பிக்கை வைக்க தவறியது.
- ரெம்டேவிசிர் ஏதோ மாயம் செய்யும் மருந்து என்று அனாவசிய பீதியை கிளப்பியது.
- அரசுடன் ஒத்துழைக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டது
- தவறான ஊடகங்களை ஊக்குவித்து இன்று அவை சொல்லும் இழவு செய்திகளை மட்டும் நம்புவது.
இவையெல்லாம் விடுத்து. ஒரு மாதம் சுயக் கட்டுப்பாட்டோடு இருப்போம்! அரசு சொல்லும் கட்டுப்பாடுகளுக்கு ஒத்துழைப்போம். தடுப்பூசி போட்டுக் கொள்வோம்.. முகமூடி இல்லாமல் வெளியே தைரியமாக வரலாம் என்ற நிலைக்கு கொரோனாவை துரத்தி விடுவோம்.
பாரதம் உலகிற்கு வழிகாட்டியாக … இது மீண்டும் ஒரு வாய்ப்பு. தவற விட வேண்டாம்.
பாரில் எல்லா தேசங்களில் எங்கள் தேசம் உயர் தேசம் என்கிறது ஒரு தேச பக்தி பாடல். சுய ஒழுக்கம் கடைபிடிப்போம் ! பாடலில் சொன்ன வரிகளை உண்மையாக்குவோம்!!
- ஞா.சூரிய நாராயணன்,B.Sc.B.Ed.,PGDCA
(சமூக ஆர்வலர், தலைவர், விழுப்புரம் தெய்வத் தமிழ்ச் சங்கம்)