
பாரதியாரின் கண்ணன் பாட்டு
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
பகுதி – 8, கண்ணன் – என் தந்தை
இந்தப் பாடலும் நொண்டிச் சிந்து பாணியில் அமைந்துள்ளது. இதன் பிரதான ரஸம் அற்புதம் என பாரதியார் குறிப்பிடுகிறார். முதலில் பாடலைக் காண்போம்.
பூமிக் கெனைய னுப்பி னான்; – அந்தப்
பதமண்ட லத்திலென் தம்பிக ளுண்டு;
நேமித்த நெறிப்படி யே – இந்த
நெடுவெளி யெங்கணும் நித்தம் உருண்டே
போமித் தரைகளி லெல்லாம் – மனம்
போலவிருந் தாளுபவர் எங்க ளினத்தார்.
சாமி இவற்றினுக் கெல்லாம் – எங்கள்
தந்தையவன் சரிதைகள் சிறி துரைப்பேன். 1
செவ்வத்திற்கோர் குறைவில்லை; – எந்தை
சேமித்து வைத்த பொன்னுக் களவொன் றில்லை;
கல்வியில் மிகச் சிறந்தோன் – அவன்
கவிதையின் இனிமையோர் கணக்கி லில்லை;
பல்வகை மாண்பி னிடையே – கொஞ்சம்
பயித்தியம் அடிக்கடி தோன்றுவ துண்டு;
நல்வழி செல்லு பவரை – மனம்
நையும்வரை சோதனை செய் நடத்தை யுண்டு. 2

நாவு துணிகுவ தில்லை – உண்மை
நாமத்தை வெளிப்பட உரைப்பதற்கே;
யாவருந் தெரிந்திட வே – எங்கள்
ஈசனென்றும் கண்ணனென்றும் சொல்லுவதுண்டு;
மூவகைப் பெயர் புனைந்தே – அவன்
முகமறி யாதவர் சண்டைகள் செய்வார்;
தேவர் குலத்தவன் என்றே – அவன்
செய்திதெரி யாதவர் சிலருரைப்பார். 3
பிறந்தது மறக் குலத்தில் – அவன்
பேதமற வளர்ந்ததும் இடைக்குலத்தில்;
சிறந்தது பார்ப்பன ருள்ளே; – சில
செட்டிமக்க ளொடுமிகப் பழக்க முண்டு;
நிறந்தனிற் கருமை கொண்டான்; – அவன்
நேயமுறக் களிப்பது பொன்னிறப் பெண்கள்!
துறந்த நடைக ளுடையான் – உங்கள்
சூனியப்பொய்ச் சாத்திரங்கள் கண்டு நகைப்பான். 4
ஏழைகளைத் தோழமை கொள்வான்; – செல்வம்
ஏறியார் தமைக்கண்டு சீறி விழுவான்;
தாழவருந் துன்ப மதிலும் – நெஞ்சத்
தளர்ச்சிகொள் ளாதவர்க்குச் செல்வ மளிப்பான்;
நாழிகைக்கொர் புத்தி யுடையான்; – ஒரு
நாளிருந்த படிமற்றொர் நாளினி லில்லை.
பாழிடத்தை நாடி யிருப்பான்; – பல
பாட்டினிலும் கதையிலும் நேரமழிப் பான். 5
இன்பத்தை இனிதென வும் – துன்பம்
இனிதில்லை யென்றுமவன் எண்ணுவ தில்லை;
அன்பு மிகவு முடையான்; – தெளிந்
தறிவினில் உயிர்க்குலம் எற்ற முறவே,
வன்புகள் பல புரிவான்; – ஒரு
மந்திரியுண் டெந்தைக்கு விதியென்பவன்;
முன்பு விதித்த தனையே – பின்பு
முறைப்படி அறிந்துண்ண மூட்டி விடுவான். 6
வேதங்கள் கோத்து வைத்தான் -அந்த
வேதங்கள் மனிதர்தம் மொழியி லில்லை;
வேதங்க ளென்று புவியோர்- சொல்லும்
வெறுங்கதைத் திரளிலவ் வேதமில்லை;
வேதங்க ளென்றவற் றுள்ளே – அவன்
வேதத்திற் சிலசில கலந்ததுண்டு
வேதங்க ளன்றி யொன்றில்லை – இந்த
மேதினி மாந்தர் சொலும் வார்த்தைக ளெல்லாம். 7
நாலு குலங்கள் அமைத்தான்; – அதை
நாசமுறப் புரிந்தனர் மூட மனிதர்,
சீலம் அறிவு கருமம் – இவை
சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்;
மேலவர் கீழவரென்றே – வெறும்
வேடத்திற் பிறப்பினில் விதிப்பன வாம்
போலிச் சுவடியை யெல்லாம் – இன்று
பொசுக்கிவிட்டாலெவர்க்கும் நன்மையுண்டென்பான். 8
வயது முதிர்ந்து விடினும் – எந்தை
வாலிபக் களையென்றும் மாறுவதில்லை
துயரில்லை; மூப்பு மில்லை – என்றும்
சோர்வில்லை; நோயொன்றும் தொடுவ தில்லை;
பயமில்லை, பரிவொன்றில்லை, – எவர்
பக்கமும்நின் றெதிர்ப்பக்கம் வாட்டுவ தில்லை
நயமிகத் தெரிந்தவன் காண்; – தனி
நடுநின்று விதிச்செயல் கண்டு மகிழ்பான். 9
துன்பத்தில் நொந்து வருவோர் – தம்மைத்
தூவென் றிகழ்ந்து சொல்லி அன்பு கனிவான்;
அன்பினைக் கைக் கொள் என்பான்; – துன்பம்
அத்தனையும் அப்பொழுது தீர்ந்திடும் என்பான்
என்புடை பட்ட பொழுதும் – நெஞ்சில்
ஏக்கமுறப் பொறுப்பவர் தம்மை உகப்பான;
இன்பத்தை எண்ணு பவர்க்கே – என்றும்
இன்பமிகத் தருவதில் இன்ப முடையான். 10