
திருப்புகழ்க் கதைகள் 155
~ முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ~
அவனிதனிலே பிறந்து – பழநி
ஆகமங்கள் தொடர்பாக இனி செய்ய வேண்டியது என்ன?
திருப்புகழ்க் கதைகள் தலைப்பின் கீழ் ஆகமங்கள் பற்றி ஏன் இத்தனை பெரிய கட்டுரைகள்? இதற்குக் காரணம் தமிழக அரசின் ‘அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்’ முடிவுதான். ஆகமங்களில் இத்தனை செய்திகள் இருக்கின்றன என்பது இந்துக்களில் பலருக்குத் தெரியாது. பல காரணங்கள் காரணமாக இவற்றைப் பற்றி தமிழர்களுக்கும் இந்தியர்களுக்கும் தெரியாமல் போனது.
ஆகமங்கள் பற்றிய கட்டுரைகள் எழுத நான் பெரும்பாலும் shivam.org என்ற வலைத்தளத்தையும், புதுச்சேரி திரு T. கணேசன் அவர்களின் கட்டுரைகளையும் பயன்படுத்தியிருக்கிறேன். இனி ஆகமங்கள் தொடர்பாக செய்ய வேண்டியது என்ன எனப் பார்க்கும்போது – சைவ ஆகமங்களை நாகரிலிபியில் அச்சிடுவதே மிக முக்கியமான பணியாகும். ஹிந்தி மொழி தெரியாமல், சமஸ்கிருத மொழி புரியாமல், கிரந்த லிபியும் தெரியாமல் நாம் இவ்வகை ஆகமங்களை இழந்து கொண்டிருக்கிறோம். முதலில் இவை பற்றி தெரிந்து கொண்டால்தான் நமது கலாச்சாரம் பற்றித் தெரிந்துகொள்ள முடியும். சென்னை போன்ற நகரங்களில் புதுப் புது ஆலயங்கள் தோன்றி வித விதமான பூஜைகள் நடக்கின்றன.
வெளிநாட்டவர்களும் தற்காலத்தில் அதிகமாகச் சைவத்தில் ஆராய்ச்சி செய்வதால் அவர்களுக்கும் அது பேருதவியாயிருக்கும். நமது நாட்டிலும் நாடு முழுவதும் நான்காம் ஐந்தாம் நூற்றாண்டுகளில் தொடங்கி 14ஆம் நூற்றாண்டுவரை பெரிதும் பரவி விரிந்திருந்த சைவசித்தாந்தத்தைப் பற்றியும் எல்லோரும் அறிந்து கொள்வதற்குப் பேருதவியாயிருக்கும்.

அடுத்து, இனி பதிப்பிக்கப்படும் சைவ ஆகமங்களும், ஏற்கெனவே அச்சிடப்பட்ட காமிகம் முதலான ஆகமங்களும் ஓலைச் சுவடி மற்றும் கையெழுத்துப் பிரதிகளின் துணைகொண்டு பாடபேதங்களை ஒப்புநோக்கித் திருந்திய பதிப்பாக மட்டுமே வெளியிடப்படவேண்டும். வீராகாமம், ஸ்வாயம்புவாகமம், ஸஹஸ்ராகமம், யோகஜாகமம், அசிந்த்யவிச்வசாதாக்யாகமம், முதலிய பெரிய ஆகமங்களும், ஞானசம்பு சிவாசாரியார் இயற்றிய மிகப் பெரிய பத்ததி நூலான ஞானரத்னாவளி, முதலான பத்ததி நூல்களும் பதிப்பிக்கப்படவேண்டும். அதற்கு இன்றியமையாத உதவியாயிருப்பது புதுச்சேரி பிரெஞ்ச் இந்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் சுவடிப்புலம். இவற்றுடன் இந்நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்பு, ஆங்கில மொழிபெயர்ப்பு ஆகியனவும் கூடவே நடைபெறவேண்டும்.
சைவசித்தாந்த நூல்கள்
சைவசித்தாந்தம் என்ற உடனே பலர் அது தமிழ் மொழியில் மட்டுமே அமைந்த ஒரு சாத்திரம் என்று நினைப்பர். ஆனால் ஸம்ஸ்கிருத மொழியில் 12ஆம் நூற்றாண்டு தொடங்கி ஒவ்வொரு நூற்றாண்டிலும் தமிழகத்தில் பல நூல்கள் இயற்றப்பட்டுள்ளன என்பதை மிகச் சிலரே அறிவர். அவற்றுள் மிகுதியும் இன்னும் வெளியாகவில்லை என்பது நாம் மனதில் கொள்ளவேண்டிய செய்தி.
அடுத்து, இக்காலத்தில் வேதாந்தம், சைவம், வைணவம், காவியம், வியாகரணம் முதலான பல சாத்திரங்களில் பல அறிஞர்கள் பல்வகையான நூல்களை யாத்துள்ளனர். அவற்றுள், மிகுதியாக நாம் காண்பது ஸம்ஸ்கிருத மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள். அவற்றுளும் குறிப்பாகச் சைவ சாத்திரங்களும், ஆகமங்களும், ஆகமத் தொகுப்பு நூல்களும் ஏராளம் என்பதை நாம் பெருமையுடன் நினைவு கூறவேண்டும். இச்செய்தியும் நம்மில் பலர்க்குப் புதிதாய்த் தோன்றலாம்.
ஆனால் உண்மை யாதெனில் அக்காலத்தில் வாழ்ந்த பல சைவ ஆசாரியர்கள் இருமொழியிலும் ஆழ்ந்த புலமையும் நூல்கள் இயற்றும் வண்மையும் கொண்டிருந்தனர். தில்லையில் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகச் சிறப்புமிக்க சைவ ஆசாரியர்களுள் மறைஞானசம்பந்தரும் அவருடைஅ முதன்மைச் சீடர் மறைஞானதேசிகர் என்றழைக்கப்பட்ட நிகமஞானதேசிகருமாவர். இவர்கள் கிரியை, சரியை, யோகம், ஞானம் ஆகிய நான்குபாதப் பொருள்களையும் விளக்குவதற்காகத் தனித்தனியே நூல்கள் இயற்றியுள்ளனர். இவர்கள் இயற்றிய பல சைவநூல்களுள் சிலவற்றைத் தவிர மற்றவை சைவமக்களால் அறியப்படவில்லை. சிவதருமோத்தரம், சைவசமயநெறி, மற்றும் சில தமிழ் நூல்களே சைவ அறிஞர்கள் மத்தியில் கற்றுணரப்பட்டு வந்துள்ளன. நிகமஞானதேசிகரின் ஆத்மார்த்தபூஜாபத்ததி, தீக்ஷைதர்சம் ஆசௌசதீபிகை, சிவஞானசித்தியார் சுபக்கத்திற்கு விளக்கமாய் அமைந்த சிவஞான சித்திஸ்வபக்ஷ திருஷ்டாந்தம், சைவசமயநெறி என்னும் நூலுக்கு விளக்கமான சைவசமயநெறிதிருஷ்டாந்தம் முதலிய பல நூல்கள் அச்சிடப்படவேண்டும்.

சிவாக்ரயோகிகளின் சிவஞானபோதப்ருஹத்பாஷ்யம், சாலிவாடி ஞானபிரகாசரின் பௌஷ்கராகமபாஷ்யம், பிரமாணலக்ஷணம் முதலான நூல்கள், சிவதர்மம், சிவதர்மோத்தரம் எனப் பல சைவநூல்கள் இன்னும் பதிப்பிக்கப்படாமல் உள்ளன. அவை எல்லாம் கூடிய விரைவில் அச்சேறினால் சைவசித்தாந்த சாத்திரத்தில் நூற்றாண்டுதோறும் நிகழ்ந்த வளர்ச்சியும், கருத்துக்களும் நன்கு கற்றுணரப்படும். இறுதியாக ஸகலாகமஸங்க்ரஹமென்னும் பெயரில் பல தலைப்புகளில் அவ்வப்போது தொகுக்கப்பட்ட பல தொகுப்பு நூல்கள். இவ்வகை நூல்கள் சைவ ஆகமங்களின் விரிவுக்கும் பரப்புக்கும் எடுத்துக்காட்டாய் விளங்குபவை. இவையும் பதிப்பிக்கப்படவேண்டியவை.
மேற்கூறிய சிறு கண்ணோட்டத்தின் மூலம் சைவ ஆகமம் மற்றும் சைவசித்தாந்த சாத்திர நூற்கடலின் ஒரு சிறுபகுதியை நாம் சற்று ஆராய்ந்தோம். எதிர்காலத்தில் அந்நூற்சுவடிகளைப் பாதுகாக்கவும், அச்சுவடிகளிலிருந்து நூற்பொக்கிஷங்கள் சைவ அறிஞர் பெருமக்களால் பதிப்பிக்கப்பட்டு உலகெங்கும் அவை பரவுவதற்கும் நமக்கு அருள்மிகு ஆறுமுகப் பெருமானின் திருவருள் கைகூடும் என உறுதியாக நம்புகிறேன்.