
தெலுங்கில்: பிஎஸ் சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
Dressing of Indians is uncultured – பாரதியர்களின் உடை அநாரகரீகமானது.
ஆங்கிலேயர்களின் இந்த பிரச்சாரம் நம் தேசத்தில் வேரூன்றிப்போனது.
ஆங்கில மொழியோடு கூட உடன் வந்த ஆங்கிலேய காலசாரம் நம் தேச மக்களின் பழக்க வழக்கங்களை மாற்றியது. வந்தேறி ஆட்சியாளர்கள் பாரதிய உடையலங்காரம் அநாகரிகமானது என்று பிரச்சாரம் செய்தார்கள். ஃபேஷன் டிசைன் தொடர்பான பாட நூல்களில் அவர்களின் கூற்று இவ்விதம் உள்ளது…
“பாரதியர்களுக்கு உடை அணிவது பற்றி சற்றும் புரிதல் இல்லை. வேஷ்டி, புடவை இவற்றைச் சுற்றிக் கொள்வதைத் தவிர மேல்துணி பற்றி அவர்களுக்குத் தெரியாது. பிரிட்டிஷாரிடமிருந்துதான் பாவாடையும் ரவிக்கையும் பாரத தேசத்தில் பிரவேசம் செய்தது. ஆங்கிலேயர்களுக்கு உடை அணிவது பற்றி மிகச் சிறந்த புரிதல் உள்ளது. எவ்வாறு ஆடை அணிய வேண்டும்? எவ்வாறு அணியக் கூடாது? என்று குறிப்பிடும் நூல்கள் ஆங்கில மொழியில் பல உள்ளன. பாரத தேசத்தில் அப்படிப்பட்ட நூல்களே இல்லை. ஆங்கிலேயர்களின் கௌனில் இருந்து ரவிக்கை உற்பத்தியானது. தைத்த துணிகளை அணிவது பற்றி தடை இருந்ததால் பெண்களுக்கும் ஆண்களுக்கும் மார்பில் மறைப்பு இருக்கவில்லை. பாரதியப் பெண்கள் மேல்நாட்டுப் பெண்களைப் பார்த்து ரவிக்கை அணிய கற்றுக் கொண்டார்கள். அதற்குமுன் தலைமுடியாலும் கழுத்தணிகளாலும் பெண்கள் மார்பை மறைத்துக் கொண்டார்கள்” என்று பிரச்சாரம் செய்தார்கள்.
அகண்ட பாரத தேசம் பல்வேறு தட்பவெப்பச் சூழலோடு கூடிய மிகப் பெரும் பிரதேசமாதலால் அந்தந்த இடங்களுக்குத் தக்கபடி வேறுபட்ட உடை அணிதல் இருந்தது. ஆங்கில உடை அணிதல் நம் தேசத்தின் வானிலைக்கு உகந்தது அல்ல.
நாற்பது டிகிரி எரிக்கும் வெயிலில் சூட், நீண்ட கையுள்ள அங்கி, டை, பூட்ஸ் அணிந்துகொண்டு பணி புரியும் சில சேல்ஸ் மேன்கள் வீடு வீடாகச் செல்வதைப் பார்க்கும் போது வருத்தம் உண்டாகிறது. மெடிகல் ரெப் சிலர் டாக்டர்களிடமோ மருத்துவமனைகளுக்கோ அலைவதைப் பார்க்கையில் அவர்களின் உடை அலங்காரம் மனிதத்தன்மையற்ற செயலாகத் தோன்றும். குருட்டுத்தனமாக பிறரைப் பின்பற்றுவது கூடாது என்பதையே இது குறிக்கிறது.
விடுதலைக்குப் பின் நம் நடை உடை பாவனையில் ஆங்கிலத் தன்மை அதிகம் புகுந்து கொண்டது. நம் வீடுகளில் பழைய குரூப் போட்டோக்களை ஒப்பிட்டுப் பார்த்தால் தெரியும். அல்லது விடுதலைக்கு முன்பு ஏதாவது ஒரு நகரத்தின் கூட்டம் நிறைந்த இடத்தின் சித்திரத்தை இன்றைய படங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் புரியும். சுதேசி உடைகள் என்ன? இன்று நாம் அணியும் விதேசி உடைகள் என்ன? வெளிநாட்டு உடை அலங்காரத்தை காப்பியடிப்பது எத்தனை வேகமாகப் பெருகி வருகிறது என்பது தெளிவாகப் புரியும்.
இத்தனை நாட்கள் பாரதிய தேசியத் தன்மைக்கு அனுகூலமாக உடை அணிந்த பெண்களின் ஆடை அணியும் விதம் அதி வேகமாக மாறிவருகிறது. இனியும் வருங்காலத்தில் என்ன நடக்குமோ?
“பெண்கள் பேண்ட் அணிவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். இறுக்கமாக உடையணியக் கூடாதென்று வைத்திய சாஸ்திரம் எச்சரிக்கிறது. ஆடை அணிவதே அறியாதவர்கள் நமக்கு ஆடை அணிவது பற்றி கற்றுத் தருகிறார்கள். மேல்நாட்டு விகாரங்கள் நம் தேசத்தில் நுழைந்தபின் துவைக்காத இறுக்கமான ஆடைகளை அணிந்து இளைஞர்கள் தோல் நோய்க்கு ஆளாகிறார்கள்” என்கிறார் பிரபல தோல் மருத்துவர் டாக்டர் பூமேஷ்.
இந்த விகாரமான விதைகள் எப்போது விழுந்தன நம் நிலத்தில்? நம் வேஷம் ஆங்கிலத்தனமாக ஏன் மாறியது? பார்ப்போம்:-
“பாரத தேச நாகரிகம் மிக உயர்ந்த இடத்தில் இருந்த போது மேல் நாட்டவருக்கு ஆடை அணிவது கூடத் தெரிந்திருக்கவில்லை. (TThe Western Society is painted in blue)” என்றார் சுவாமி விவேகானந்தர்.
துணி உற்பத்தியில் பாரத தேசம் உயர்ந்த சிகரங்களை எட்டியது. கைத்தறித் நெசவிலும் பல வண்ணத் துணிகள் தயாரிப்பிலும் உலகை கவரும் தரத்தோடு கூடியதாக இருந்தது. வரலாற்றுக்கு எட்டாத புராண காலத்திலிருந்து மொகஞ்சோதாரா அகழ்வாராய்ச்சியில் கிடைத்த கைத்தறியின் சரித்திரம் வரை பிரிட்டிஷாருக்கு பெரிய அதிர்ச்சியையே அளித்தது.
விலங்குகளின் உரோமம், தோல் இவற்றில் தயாரித்த ஆடைகளை அணிபவருக்கு பாரதிய நூலாடைகள் வேனிற்காலத்தில் மிகவும் சௌகரியமாக இருந்தன. அதனால் பராதிய கைத்தறித் துணிகளுக்கு ஏகப்பட்ட கிராக்கி இருந்தது. அதன் பலனாக அந்த தேசத்து கம்பளி வியாபாரம் பெரிதும் வீழ்ச்சியடைந்தது. லண்டன் நெசவாளிகள் நம் கைத்தறித் துணிகளைக் கண்டு பொறாமை கொண்டு அவற்றுக்குத் தடை விதித்தனர். நம் தேசத்து கைத்தறி நெசவாளர்களின் விரல்களை வெட்டி எறிந்தார்கள்.
1700ம் ஆண்டு இங்கிலாந்தில் பாரதிய நூலாடைகள் மீது தடை விதிக்கப்பட்டது. கையேடுகள் மூலம் பாரதீய நூலாடைகளை வாங்க வேண்டாம் என்று பிரச்சாரம் செய்ததோடு கிடைத்த வஸ்திரங்களை அழிப்பது, இறக்குமதி செய்த சரக்குகளை பாரத தேசத்திற்கு திருப்பி அனுப்புவது போன்ற விபரீத செயல்களில் ஈடுபட்டார்கள். 1721ல் மற்றுமொரு அடி முன் பாய்ந்து பாரதிய நூலாடைகளை அணிந்தவர்களுக்கு மிகப் பெரிய அளவில் அபராதம் விதித்தார்கள்.
பாரதிய துணிகள் மீது அதிக வரி விதித்ததாலும், நம் துணிகளின் ஏற்றுமதிக்கு தடை விதித்ததாலும், திறமை மிக்க பாரதிய தொழிலாளர்களை தண்டித்ததன் வாயிலாகவும் தேசிய கைத்தறித் தொழிலை ஆழமான நலிவுக்கு உள்ளாக்கினார்கள்.

1735ல் துணிகள் நெய்யும் பவர் மில்கள் வந்தன. பிரிட்டிஷ் வியாபாரிகள் தயார் செய்த துணிகளின் மீது வரியில் தள்ளுபடி அளித்து மில் துணிகளை பாரதிய கைத்தறித் துணிகளுக்கு போட்டியாக கொண்டு வந்தார்கள்.
1830ல் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு அவர்களின் தலைமை, பாரதிய உடைகளை அணியக்கூடாதென்று எச்சரிகை விடுத்தது. சூட் கோட் பூட்ஸ் அணிந்தவர்கள் மட்டுமே கோர்ட் மற்றும் இதர அரசாங்க அலுவலங்களில் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டனர். டல்ஹௌசி காலத்தில் பூட்ஸ் அணிவது மற்றும் பாரதிய உடைகளின் மேல் மிகவும் கடினமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. பிரிட்டிஷ் அதிகாரிகள் பணிபுரியும் அலுவலகங்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் பாரதியர்கள் ஷூ அணிந்து செல்லக் கூடாது. அந்த நிலைமை அண்மைக் காலம் வரை நீடித்தது.

ஈஸ்வரசந்திர வித்யாசாகர் கல்வித் துறை அதிகாரியாக ஒரு அரசாங்க அலுவலகத்திற்கு விருந்தினராகச் சென்றபோது பாரதிய உடையில் இருந்ததால் அவரை கேட்டருகில் தடுத்து நிறுத்தினர். ஆங்கிலேய வேஷத்தில் சென்ற போது வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாரதிய பெண்களின் நடை உடை பாவனை பாரதிய பண்பாட்டிற்கு ஏற்ப இங்குள்ள தட்பவெப நிலைக்கு அனுகூலமாக இருந்தது. பாரதிய உடை அநாகரிகாமானது என்று பிரச்சாரம் செய்ததால் வெளிநாட்டருக்கு நூலாடைகளை ஏற்றுமதி செய்த நம் தேசம் வெளிநாட்டுத் துணிகளை இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டது.
பிரிட்டிஷார் வருவதற்கு முன்னர் உலகப் பொருளாதார அமைப்பில் பாரதிய உற்பத்திகள் 23 சதவிகிதத்திற்கு மேலாக இருந்தது. அவர்கள் வந்துவிட்டுச் சென்ற பின் அது நான்கு சதவிகிதத்திற்குக் கீழே விழுந்து விட்டது.
நெருப்பு பெட்டியில் கூட மடித்து வைக்கும் அளவுக்கு பட்டுப் புடவைகளை நெய்யும் திறமை மிகுந்த கைத்தறி நெசவாளர்களின் கை விரல்கள் நறுக்கப்பட்டன. கைத்தறி தொழிலை ஆதாரமாகக் கொண்ட ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வருமானமின்றி தவித்தன. கிராமிய பொருளாதார அமைப்பு சின்னாபின்னமாயிற்று.
1795 -1850 இங்கிலாந்தில் இருந்து பாரதத்திற்கு செய்யும் வஸ்திரங்களின் ஏற்றுமதி
1300 சதவிகிதம் அதிகரித்தது. 1858ல் ஈஸ்ட் இந்தியா ஆட்சி நீக்கப்பட்டு பிரிட்டிஷ் ஆட்சி நேரடியாக வந்த பின் அந்த ஏற்றுமதிகள் மேலும் அதிகரித்தன. பிரிட்டிஷாரிடம் பணி புரியும் தொழிலாளர்களும், பணியாளர்களும் பிரிட்டிஷ் உடை அணியும் வழிமுறையை மகிழ்ச்சியாக அனுசரித்தார்கள்.

தேசிய உடைகள் அணிபவர்களை சமுதாயத்திலும் திரைப்படங்களிலும் குறைவாக மதிப்பிடுவது விடுதலைக்கு முன் அதிகமாக இருந்தது. வேஷ்டி கட்டுவதை அவமானமாகக் கருதியதை நாமறிவோம்.
(தேசிய உணர்வு கொண்ட சில பிரதேசங்களில் பாரதிய நடை உடை பாவனைக்கு மிகவும் முக்கியத்துவம் இருந்தது. இது சுதந்திரத்திற்குப் பிறது குறையத் தொடங்கியது. பேராசிரியர் எஸ்வி சேஷகிரிராவு 1960ல் கரக்பூரில் கல்வி கற்றார். “அங்கு பாடம் கற்றுத் தருபவர், கற்றுக் கொள்ளும் மாணவர் அனைவரும் வேஷ்டி கட்டி வருவார்கள். அதுவரை பேன்ட் அணிவது என்பது பெங்காலில் தென்பட்டதே இல்லை” என்றார்.)
சுதந்திரம் வந்த பின் மேலும் வேகமாக வெளிநாட்டு மோகமும் ஆங்கிலேயர்களிடம் கீழ்படிதலும் நம் தேசத்தில் பெருகின. இதற்கு விதை எப்போதோ விதைக்கப்பட்டு விட்டது. அவை விஷ விருட்சங்களாகி நம் தேசியத் தன்மையை நாசமாக்குகின்றன.
பாரதிய உடை அணிவதை மாற்றுவதற்கு வெளிநாட்டு வந்தேறி ஆட்சியர் பல தந்திரங்களை கையாண்டனர். கான்வென்ட்டுகள் மூலம் ஆங்கிலேய உடை அலங்காலத்தை சிறு வயது முதல் கற்றுத்தந்தனர். முழங்காலுக்கு மேல் அணியும் ஸ்கர்ட் மூலம் சிறுமிகள் மனதிலிருந்து வெட்கத்தை நீக்கினர். நம் தேச வானிலைக்குச் சரிவராத ஆடை அணிதலின் மேல் மோகம் பெருகியது. வேஷ்டி கட்டுபவர்களையும் தலைப்பாகை அணிபவர்களையும் கண்டால் தாழ்வாக மதிப்பிடும் இயல்பு உருவானது.
சில அலுவலகங்களுக்கும் கிளப்புகளுக்கும் ஆங்கில உடை அலங்காரம் இருந்தால்தான் நுழைவு உண்டு. பல் கிளப்புகளின் முன் பிரிடிஷார் அகந்தையோடு போர்டுகளில், “நாய்களுக்கும் பாரதியர்களுக்கும் அனுமதி இல்லை” என்று எழுதி வைத்தார்கள்.

வறுத்தெடுக்கும் வெயில் காலத்திலும் கோட், பூட்ஸ், டை சகிதம் அணிந்து கொள்ளவேண்டிய கீழ்நிலையை சில ஊழியர்களுக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் கட்டாயப்படுத்தியது.
நூல், சணல், பட்டுத் துணிகள் போன்ற இயற்கையாகக் கிடைக்கும் கைத்தறித் துணிகளை விட்டு விட்டு 1941 ல் வாங்கிய வெளிநாட்டு பாலியஸ்டர் ஆடைகளை அணிந்ததால் தோல் நோய்கள் அதிகரித்தன என்றனர் வைத்திய சாஸ்திர நிபுணர்கள். தலயின் மீது வெள்ளை நிறத் தலைப்பாகை, அல்லது தொப்பி நம் தட்ப வெப்பத்திற்கு உகந்த உடை. பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் அணிந்து கொள்ளும் கவுன்கள் பிரிடிஷார் ஆட்சியின் போது தொடங்கியவையே. சுதந்திரம் வந்த பின்னும் கூட அதே முறையை கடைபிடிப்பது அடிமைத் தனத்தின் சின்னமே. இப்போது தான் இவற்றை மாற்றும் முயற்சி நடக்கிறது.
திருமணம், விழாக்கள், பூஜைகள் போன்ற நிகழ்வுகளில் மக்கள் நம் தேசிய உடை அணிவதைக் காண்பது மன நிறைவு அளிக்கிறது. காஞ்சீபுரம், தர்மாவரம், போச்சம்பல்லி, வெங்கடகிரி, கத்வால், உப்பாடா முதலான இடங்களில் புடவை உற்பத்தி செய்யும் திறமை மிகுந்த நெசவாளர்களின் கலையையும் அவர்களின் குடும்பங்களையும் இந்த நம் கலாசாரம் காப்பாற்றும். எந்த தேசத்திலும் இல்லாத அற்புதமான இந்த சிறப்பான நெசவுத் தொழிலை காப்பாற்றிக் கொள்வது தேச பக்தர்களின் கடமை.
- source: ருஷிபீடம் ஆன்மீக மாத இதழ், ஆகஸ்ட் 2018




