சம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் – பகுதி 5
தெலுங்கில்- பி.எஸ் சர்மா
தமிழில்- ராஜி ரகுநாதன்
“சூசி கடாஹ ந்யாய:” – ஊசி கங்காள நியாயம்.
சூசி –என்றால் ஊசி, கடாஹ- என்றால் கங்காளம்.
பாத்திரங்களை தயார் செய்யும் கொல்லனிடம் ஒருவன் வந்து ஒரு கங்காளம் செய்து தரும்படி கேட்டான். கொல்லன் அந்த வேலையை தொடங்கினான். அதற்குள் இன்னொருவன் வந்து ஒரு ஊசி தயார் செய்து தரும்படி கொல்லனைக் கேட்டான். மிகக் குறைந்த நேரத்தில் கொல்லனால் ஒரு ஊசியைத் தயாரித்து அளிக்க முடியும். அதனால் கையில் இருந்த கங்காளம் செய்யும் வேலையை நிறுத்தி விட்டு பின்னால் வந்தவன் கேட்ட ஊசியை செய்து அனுப்பினான். அதன் பின் பெரிய வேலையை எடுத்துக் கொண்டான். இதுதான் புத்திசாலித்தனம். இதுவே ‘ஊசி கங்காள நியாயம்’.
நாம் ஒரு நெருப்புப் பெட்டி வாங்குவதற்கு கடைக்குச் செல்கிறோம். அந்த நேரத்தில் கடைக்காரர் அதற்கு முன் வந்த மற்றொருவர் கேட்ட சாமான்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். கடைக்காரர் புத்திசாலியாக இருந்தால் அந்த பெரிய பேரத்தை ஒரு நிமிடம் நிறுத்தி வைத்து விட்டு நமக்கு நெருப்புப் பெட்டி கொடுத்து அனுப்புவார். அது வியாபார இயல்பு.
ஊசி-கங்காளம் நியாயத்தில் ‘காமர்ஸ்-சயின்ஸ்’ மற்றும் ‘காமன்-சென்ஸ்’ இரண்டும் உள்ளன.
பைக்கிற்கு பிரேக் முடுக்கும் வேலைக்காக ஒரு ஸ்கூட்டர் மெக்கானிக்கிடம் செல்கிறோம். ஒரு ஸ்கூட்டரைப் பிரித்து வைத்து ரிப்பேர் செய்து கொண்டிருந்த மெக்கானிக் அந்த பெரிய வேலையை நிறுத்தி வைத்து ஒரு சில நிமிடங்களில் பிரேக் சரிசெய்து நம்மை அனுப்புகிறார். அது வியாபார இயல்பு.
இவ்விதமாக குறைந்த நேரத்தில் செய்யக் கூடிய வேலையை முதலில் முடித்துக் கொடுப்பது வியாபார வழிமுறை.
ஒரு பச்சைக் கொத்தமல்லி கட்டுக்காக சென்ற நம்மை மணிகணக்காக நிறுத்தி வைத்தால் எரிச்சல் வந்து வேறொரு கடைக்குச் சென்று விடுவோம் அல்லவா?
ஏதாவது பெரிய வேலை தம் முன்னால் இருக்கும் போது வேறு எதிலும் ஈடுபடாதவர் சிலரையும் நாம் பார்க்கிறோம். அவர்களுக்கு செய்தி அளிக்கிறது ஊசி-கங்காளம் நியாயம். மல்டி டாஸ்கராக இருக்கச் சொல்லி தூண்டுகிறது இந்த நீதி சூத்திரம்.
எந்தச் சிறிய வேலை செய்யச் சொன்னாலும், ஆறு மாதத்திற்குப் பின் வரும் மகளின் திருமணத்தை சாக்கு சொல்லி தட்டிக் கழிப்பவருக்கு ‘கண் திறப்பு’ இந்த நியாயம்.
நினைத்த வேலையை நடுவில் நிறுத்துவது அல்ல இது. வேலைகளை ஒரு முறைப்படி செய் என்று கூறும் அற்புதமான செய்தி இந்த ஊசி-கங்காளம் நியாயத்தில் உள்ளது. பிறருடைய நேரத்திற்கும் மதிப்பு அளிக்கச் சொல்லும் அறிவுரை இதில் மறைந்துள்ளது.
விவேகத்தோடு, நேரத்தை வீணாக்காமல், பிறருடைய நேரத்திற்கும் மதிப்பு அளித்து நடந்து கொள்பவரே அறிஞர் என்று மகாபாரதம் விதுரநீதி அறிவுறுத்துகிறது.
யதாசக்தி சிகீர்ஷந்தி யதாசக்தி ச குர்யதே |
ந கிஞ்சிதவமன்யந்தே நரா: பண்டிதபுத்தய” ||
(மகாபாரதம்- உத்தியோக பர்வம்- 33/21)
பொருள்: விவேகம் நிரம்பிய அறிஞர் தம் சக்திக்கு ஏற்ப பணி புரிய நினைப்பார். தம் சக்திக்குத் தகுந்தபடி செயலைச் செய்து முடிப்பார். எந்த வேலையையும் இகழ மாட்டார்.
ஒரே வேலையை இழுத்தடிக்காமல், செய்ய நினைத்த வேலையை நடுவில் நிறுத்தாமல், நேரத்தை வீணடிக்காமல் பணி புரியும்படி இந்த சுலோகம் அறிவுறுத்துகிறது.
நிஸ்சித்ய ய: ப்ரக்ரமதே நாந்தர்வசதி கர்மண:|
அவந்த்ய காலோ வஸ்யாத்மா ஸ வை பண்டித உச்யதே ||
(மகாபாரதம், உத்தியோக பர்வம் -33/24)