
ஹிந்துக்களின் புனிதமான மலைக் கோயிலான பழனி கோயிலில் ‘இந்துக்கள் மட்டும் அனுமதிக்கப் படுவார்கள்’ என்ற பாரம்பரியமான நடைமுறையைத் தெரிவித்து வைக்கப்பட்ட அறிவிப்புப் பலகை விவகாரத்தில் இப்போது பிரச்னை எழுந்துள்ளது. அறநிலையத்துறை அதிகாரிகளின் போக்குக்கு இந்து அமைப்புகளும் பக்தர்களும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். தமிழக அரசின் நிர்வாகத்தில் உள்ள துறையான இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் இந்தக் கோயில் நிர்வகிக்கப் பட்டு வந்தது.
இந்தக் கோயிலிலும் மற்ற ஹிந்து ஆலயங்களில் உள்ளது போல் இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்தப் பலகைகள் சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகத் திருப்பணிகள் நடைபெற்ற போது, பணிகளுக்காக அகற்றப்பட்டன. எனினும் கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் அவற்றை மீண்டும் முன்பிருந்த இடங்களில் வைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனிடையே பழனி பேருந்து நிலையம் அருகில் பழக்கடை வைத்துள்ள சாகுல் ஹமீது என்பவர் உறவினர்களை அழைத்து வந்து, மலைக் கோயிலில் ஏறுவதற்கு டிக்கெட் பெற்றுள்ளார். டிக்கெட் அளித்த பின்னர் தான், அவரது உறவினர்கள் புர்கா அணிந்துள்ளதைப் பார்த்த கோயில் நிர்வாகிகள், இங்கு தரிசனத்துக்கு வேற்று மதத்தினர் அனுமதிக்கப் படுவதில்லை எனக் கூறி, வழங்கிய டிக்கெட்டை திரும்ப பெற்றுள்ளனர்.
இதை அடுத்து சாகுல் ஹமீது அவரது உறவினர்களுடன், மின் இழுவை ரயில் கண்காணிப்பாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர், இது ஒரு சுற்றுலா தலம், நீங்கள் கோயில் என்றும் இந்துக்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப் படுவார்கள் என்று பலகைகள் வைத்திருந்தால் நாங்கள் ஏன் உள்ளே வரப் போகிறோம் என்றும் கேள்வியை எழுப்பியுள்ளார்.
இதையடுத்து அங்கு வந்த பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் கோவிலுக்குள் செல்ல வேண்டும் என்றால் அங்கே கொடுக்கப்படும் பிரசாதம் வாங்கி சாப்பிட வேண்டும். இறைவனை தரிசிக்க வேண்டும். மேலும் இது சுற்றுலாத் தலம் அல்ல, இந்து ஆன்மிக வழிபாட்டுத் தலம் எனக் கூறினர். இதனால் வாக்குவாதம் முற்றியது.
பின்னர், இந்து அமைப்பினரை காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மேலும் மலைக் கோயிலுக்குச் செல்ல வந்த வேற்று மதத்தினரை கோயிலுக்குள் செல்ல அனுமதிக்க முடியாது என போலீஸார் தெரிவித்தனர்.
இத்தனை களேபரங்களுக்குப் பின்னர் பழனி கோயில் நிர்வாகம் சார்பில் இந்துக்கள் அல்லாதவர் உள்ளே வரக் கூடாது என்ற அறிவிப்பு வைக்கப்பட்டது. ஆனால், இந்தச் சம்பவத்துக்கும் அறிவிப்புக்கும் ஒரு தரப்பில் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து அறிவிப்பு பலகை அங்கிருந்து மீண்டும் அகற்றப்பட்டது.
இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தனது சமூகத் தளப் பதிவுகளில் இது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.
அதில், “பழனி முருகன் கோயில் இந்துக்களின் வழிபாட்டு தலமாகும். இது ஒன்றும் சுற்றுலா தலம் அல்ல. கடந்த நான்கு நாட்களாக முஸ்லிம்கள் கோயிலுக்குள் செல்ல எத்தனிக்கிறார்கள். உடனே அறநிலையத்துறை இந்துக்கள் அல்லாதவர்கள் கோயிலுக்குள் பிரவேசிக்க அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பலகையைவைத்து பின் மிரட்டலுக்கு பயந்து அகற்றியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது போன்ற அறிவிப்பு பலகை எல்லா கோவில்களிலும் வழக்கமான ஒன்றுதான். பழனியை போர்க்களமாக்க முயற்சிக்கும் சேகர் பாபுவின் இத்திட்டத்தை அனுமதிக்கமாட்டோம்” எனத் தெரிவித்திருந்தார்” எனத் தெரிவித்திருந்தார்.
ஏற்கெனவே இந்துக்களின் கோயில்களில் பல்வேறு பிரச்னைகளையும்குழப்பங்களையும் ஏற்படுத்தி வரும் வேற்று மதத்தினரும் அவர்களுக்குத் துணை போகும் நாத்திக திமுக., அரசும் அரசுத் துறைகளும் இப்போது தமிழகத்தில் அதிகம் பேர் வரக்கூடிய பழனி கோயில் மீது கண் வைத்திருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாத்திக திமுக., அரசால் நிர்வகிக்கப் படும் அறநிலையத்துறையை கவனித்து வரும் அமைச்சர் சேகர்பாபுவுக்கு கடும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.