திருவரங்கமும் திருஅயோத்தியும் 

srirangam and ayodhya - 2026
#image_title

அயோத்தியின் அரங்கன்!

பூலோக வைகுண்டம் என்றும், வைணவ சமயத்தின் தலைமைப் பீடம் என்றும்  போற்றப்படும் திருவரங்கம் ஆலயத்துக்கு ஏராளமான மகிமைகள் இருந்தாலும், முக்கியமானது, திருஅயோத்தியுடனான அதன் தொடர்பு!  அதென்ன, ஒரு வடநாட்டுத் தலத்துக்கு ‘திரு’எனும் அடைமொழி என்றால், நம் தமிழ்மறை தந்த ஆழ்வார்கள் அப்படித்தானே போற்றிக் கொண்டாடியுள்ளார்கள்!

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான மதுரகவியாழ்வார் வடக்கே அயோத்திக்குச் சென்று அங்கே தங்கியிருந்தார். ஒரு நாள் அவருக்கு தென்கோடியில் கீழை வானில் ஒளிக்கீற்று ஒன்று தென்பட்டது. வியப்பின் மேலீட்டால் அந்த ஒளியின் மூலத்தைத் தேடி அதன் போக்கிலேயே அயோத்தியில் இருந்து பயணப்பட்டார். அது  நிறைவாக, தாமிரபரணிக் கரையில் இருந்த திருக்குருகூர் எனும் திருநகரியில் ஒரு புளியமரப் பொந்தில் யோகக் கோலத்தில் அமர்ந்திருந்த சடகோபராகிய நம்மாழ்வாரிடம் முடிவுறக் கண்டு, அவரையே தன்குருவாக ஏற்றார். இது அயோத்திக்கும் ஆழ்வாருக்குமான தொடர்பைக் காட்டியது. 

ஆழ்வார்கள் தங்கள் பாசுரங்களில் பெருமான் உறையும் தலங்களுக்கு திரு எனும் அடைமொழி கொடுத்து சிறப்பித்தார்கள். அப்படித்தான், அவர்கள் வாக்கால் வெளிப்பட்ட திருஅயோத்தி குறித்து பாசுரங்கள் பல உள்ளன. அந்த வகையில் நூற்றெட்டு வைணவ திவ்யதேச வரிசையில் 96வது தலமாக வருகிறது அயோத்தி. நம்மாழ்வார், பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், திருமங்கை ஆழ்வார், இவர்கள் அயோத்தியில் உறையும் ஸ்ரீராமபிரானைப் போற்றிப் பாடினார்கள். 

அயோத்தி என்றால், ஆழ்வார்களின் மொழியில் சொல்லப் போனால்,  சக்கரவர்த்தித் திருமகனின் அவதாரத் தலம். அவன் ஆட்சி செய்த புண்ணிய பூமி. அந்த அயோத்திக்கு புராணச் சிறப்புகள் பலவுண்டு. நம் பாரத சம்பிரதாயத்தில், முக்தி அளிக்கும் ஏழு தலங்களாக அயோத்தி, காசி, மதுரா, மாயா (ஹரித்வார்), துவாரகை, காஞ்சி, அவந்தி (உஜ்ஜைனி) குறிக்கப்படுகிறது. இவற்றில் அயோத்தியே முதன்மையானது. காரணம் அயோத்தி வந்த விதம் குறித்து புராணங்கள், குறிப்பாக அதன் தல புராணம் சொல்வது: 

பிரம்மா பூவுலகைப் படைத்தபோது, மகாவிஷ்ணு தன் இருப்பிடமான வைகுண்டத்தில் இருந்து ஒரு பகுதியை எடுத்து அவருக்குக்  கொடுத்தார். பிரம்மா அதை உலகின் ஒரு பகுதியாக உருவாக்கி, தன் மகன் ஸ்வாயம்புவ மனுவுக்குக் கொடுத்தார். அதுதான் அயோத்தி. ஸ்வாயம்புவ மனுவின் புதல்வர் இக்ஷ்வாகு. இவர் வழியில் உருவான இக்ஷ்வாகு வம்சத்தில்தான், தசரதரின் மகனாக அவதரித்தார் ஸ்ரீராமர்.

தம்மை நினைந்து கடுந் தவமியற்றிய பிரமனுக்குக் காட்சி அளித்த மகாவிஷ்ணு, அவரின் பக்தியால் மனம் உருகிக்  கண்ணீர் சிந்தினார்.  அந்தக் கண்ணீரை ஒரு கமண்டலத்தில் ஏந்திய பிரம்மா, அதை பூமியில் விட, அது மானசரஸ் என்ற ஏரியானது. பிற்காலத்தில், இக்ஷ்வாகுவின் வேண்டுகோளை ஏற்று, வசிஷ்டர் மானசரஸ் நீரை அயோத்தியில் சரயுநதியாக ஓடச் செய்தார் என்கிறது அயோத்தியின் தலபுராணம்.

ஆழ்வார்கள் பொதுவாக ஒரு தலத்தின் பெருமானைப் பாடி வணங்குவார்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக ஒரு தலத்தையே பெருமைப் படுத்திப் பாடியவற்றில் ஒன்று திருஅயோத்தி. அதனால் ஒட்டுமொத்த அயோத்தி  மண்ணே நம் முன்னோர்க்குப் புனிதமானதாய்த் திகழ்ந்தது. அப்படி பாரத தேசத்தின் வடக்கே உள்ள அயோத்தியில் அவதரித்த ராமபிரான், வனவாசம் மேற்கொண்ட காலத்தில் தேசத்தின் தென்திசைக்கு நடந்து வந்து, இந்தக் கர்ம பூமியை புனிதப் படுத்தினார். அவர் நடந்த வழியெங்கும் இன்று ஆலயங்கள் பல எழுந்து, ராமபிரானின் அருளை அன்பர்களுக்கு அளித்துக் கொண்டிருக்கின்றன.

இவை எல்லாவற்றினும் தனிச்சிறப்பு வாய்ந்ததாய்த் திகழ்வதுதான் திருவரங்கம். எப்படி? 

ஸ்ரீராமபிரானின் பட்டாபிஷேகம் காண அயோத்தி சென்ற இலங்கை மன்னன் விபீஷணனுக்கு பரிசாக ஏதாவது கொடுக்க நினைத்தார் ஸ்ரீராமர். வீடணனோ, ராமபக்தியில், குறிப்பாக விஷ்ணு பக்தியில் மூழ்கித் திளைத்தான். அவன் பக்திக்கு ஊற்றம் கொடுப்பதென்றால் தம் ஆராதனை மூர்த்திபோல் ஒன்றைக் கொடுத்தாக வேண்டும். வீடணனும் அதையே நோக்கி நின்றான். ஏற்கெனவே தாம் கானகம் புகுந்தபோது, சகோதரன்  பரதனுக்கு தம்முடலுக்குக் காப்பாகிய பாத ரட்சையை அளித்தவர் தானே! இப்போது தாம் சகோதரனாய் ஏற்றுக் கொண்ட வீடணனுக்கு தம்முயிர்க் காப்பாகிய தம் குலதெய்வமான இக்ஷ்வாகு குல தனத்தையே பரிசாய்க் கொடுத்தார். 

அப்படிப் பெற்ற சயனப் பெருமாளின் பரவாசுதேவ விமானத்தைச் சுமந்து கொண்டு இலங்கை திரும்பிய விபீஷணன், ஒரு சந்தியா காலத்தில் தன் கடமை நிறைவேற்ற முனைந்த போது, உபய காவிரி நடுவே மணலில் நிலைகொண்டார் அந்தப் பெருமாள். வீடணனிடம், தாம் இங்கேயே கோயில் கொள்ளப் போவதாகவும், அங்கிருந்தபடியே அவனுக்கு அருள் புரிவதாகவும் சொல்லி தன்னிருப்பிடம் அரங்கம் என்று ஆக்கிக் கொண்டார்.  இப்படி மகாவிஷ்ணுவால் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து பிரம்மனுக்கு அளிக்கப்பட்டு, ஸ்வாயம்புவ மனுவால் அயோத்தியில் இருத்தப்பட்டு, இக்ஷ்வாகு குலதனமாக ஸ்ரீராமரின் முன்னோராலும் ஸ்ரீராமபிரானாலும் பூஜிக்கப்பட்டு, விபீஷணன் மூலமாக உபய காவிரி மத்தியில் நிலை கொண்டதால் தான், ஸ்ரீரங்கநாதரின் இருப்பிடம் பூலோக வைகுண்டமானது! 

இந்தத் தொடர்பைக் கொண்டே, தமிழ்மறை தந்த ஆழ்வார்கள் அனைவருமே திருவரங்கத்தைப் பாடினார்கள். அயோத்தியின் தொடர்பையும் பாடிவைத்தார்கள். 

ஸ்ரீராமர் மீதான பக்தியில் மூழ்கித்  திளைத்தவர் குலசேகர ஆழ்வார். அவர் இயற்றிய பெருமாள் திருமொழி, ராமனின் அயோத்தியை வெகுவாய்ப் புகழ்வது. ராமனின் ஆராதனை தெய்வமான ஸ்ரீரங்கநாதனுக்கு தன் மகள் சேரகுலவல்லியை மணம் முடித்துக் கொடுத்தார் குலசேகராழ்வார். 

நம்மாழ்வாரின் திருவாய் மொழி (ஏழாம் பத்து)ப் பாசுரம் மிகப் பிரபலமானது. 

கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ
புல் பா முதலா புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே
நல் பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நல் பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே? (3488)
– என்ற பாசுரம் அயோத்தி வந்த விதத்தைச் சிறப்பாய்ச் சொல்லும். 

நம் தமிழகத்தில் ராமபிரான் என்றால், கம்பனை அன்றி வேறெதுவும் உடனே நினைவுக்கு வருமோ?! கம்பனின் ராமன் அத்தனை புகழ்வாய்ந்தவன் அல்லவா! அந்தக் கம்பநாடன், ராமகாதையை இயற்றி, அதனை அரங்கேற்றச் சிறந்த இடம், அந்த ராமன் ஆராதித்த அரங்கப் பெருமாளே என்று நினைந்தார். அதனால்தான், திருவரங்கப் பெருமான் திருமுற்றத்தே ராமாயணத்தை அரங்கேற்றினார். தம்மை ஆராதித்த ராமனின் பெருமையைத் தம் காதாற் கேட்கத் திருவுளம் கொண்ட திருவரங்கநாதன், கம்பனின் ராமாயணத்தைத் திருச்செவியுற்றார் என்பது சிறப்பு. இன்றும் கம்பர் ராமாயணம் அரங்கேற்றிய மண்டபத்தை ஸ்ரீரங்கம் கோயிலில் தாயார் சந்நிதி எதிரே காணலாம்.

இப்படி நம் தமிழ் மறை தந்த ஆழ்வார்களால் பெரிதும் கொண்டாடப் பட்ட அயோத்தி ராமனுக்கு இப்போது ஆலயம் எழுந்து குடமுழுக்கும் காண உள்ளது. ஸ்ரீரங்கத்தை வைணவ தலைமை பீடமாக்கி பாரத தேசமெங்கும் தம் பக்தி நெறியைப் பரப்பிய ஸ்ரீராமானுஜாசார்யர் அயோத்தியை பெரிதும் ஆராதித்தார். அதனால் தென்னாட்டு வைணவ சம்பிரதாயப் படியே அயோத்தியிலும் ராமனின் ஆலயங்களில் பூஜைகள் நடப்பதை நாம் காண்கிறோம். திருவரங்கத்துக்கும் திருஅயோத்திக்குமான தொடர்புகளை நினைத்தபடி அயோத்தி ராமனின் ஆலய குடமுழுக்கில் நாமும் இணைவோம்! 


பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படும் துளசிதாசரின் ராமசரித மானஸ்

அயோத்தி ஸ்ரீராமர் ஆலயம் எண்ணற்ற தன்னார்வலர்களால், பக்தர்களால் அணு அணுவாக செதுக்கப்பட்டு வருகிறது. இந்தக் கைங்கரியத்தில், தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார் முன்னாள்  மத்திய உள்துறைச் செயலர் எஸ்.லக்ஷ்மி நாராயணன். அவருக்கு, பிரமாண்டமான இந்த ஆலயத்தில் எழுந்தருளப் போகும்  ராம்லல்லாவுக்கு மிகச் சிறந்ததை அர்ப்பணிக்க வேண்டும் எனும் உந்துதால் ஏற்பட,  அயோத்திக்குச் சென்ற அவர், ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளரான சம்பத் ராயிடம் அனுமதி கோரினார். ராமலல்லாவுக்கு அவர் அளிக்க விரும்பியது, ராமனைப் போற்றும் மகாகாவியத்தையே!

வடபாரதத்தில் கோஸ்வாமி துளசிதாசர் இயற்றிய ராமாயணமான ராமசரிதமானஸ் மிகப் புகழ்பெற்றது. அதையே ராமனுக்கு சமர்ப்பிக்க விரும்பி, தன் வாழ்நாள் சேமிப்பான ரூ.5 கோடியை அறக்கட்டளைக்கு அளித்தார். அதன் மூலம், 151 கிலோ எடையில், 10,902 பாக்களுள்ள ராமசரித மானஸ் நூலின் ஒவ்வொரு பக்கமும் 140 கிலோ எடை கொண்ட தாமிரத் தகடுகளில், 24 காரட் தங்கத்தில் தோய்க்கப்பட்ட பொன்னெழுத்துகளில், மரகதக் கற்கள் பதிக்கப்பட்டு, தயாராகிறது. மிக நுணுக்கமான தங்க, மரகத  வேலைபாடுகளுடன் ராமசரித மானஸ் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்பட்டு அயோத்தி ராம்லல்லாவின் முன்பு பூஜைக்காக வைக்கப்படவுள்ளது.

தில்லி பிர்லா மந்திரில் தன் தாய் வேண்டிக் கொண்டதால், தாம் பிறந்து அந்த தெய்வத்தின் பெயரே தமக்கு இடப்பட்டதாகக் கூறும் லக்ஷ்மி நாராயண், தெய்வம் தமக்கு அளித்த பொன்னான வாழ்வை, தெய்வமான ராமனின் சரிதத்தை பொன்னெழுத்துக்களில் பொறித்து வைப்பதில் அர்ப்பணிப்பதாகக் கூறுகிறார்!

  • Source: விஜயபாரதம் வார இதழ் (8.12.2023 இதழ்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

Entertainment News

Popular Categories