இன்று நடைபெறுவதாக இருந்த இண்டி கூட்டணி கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது
நடந்து முடிந்த நான்கு மாநில தேர்தல்களில், காங்கிரஸ் கட்சி இண்டி கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளைப் புறக்கணித்து, அதிக இடங்களில் வென்று தனியாக ஆட்சி அமைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், தனியாக போட்டியிட்டு தோல்வியடைந்தது. இதனால், காங்கிரஸ் கட்சி மீது இண்டி கூட்டணிக் கட்சிகள் கடும் அதிருப்தியில் உள்ளன.
காங்கிரஸ் கட்சியை தாங்கள் தான் தோளில் சுமந்து செல்கிறோம், காங்கிரஸ் கட்சி தனது சுயநலனுக்காக தங்களை கூலியாட்களைப் போல் கையாள்கிறது என்ற அதிருப்தி இண்டி கூட்டணி கட்சிகளிடம் ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான் சட்டீஸ்கர் மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் தோல்வி அடைந்த பின்னர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வரும் டிசம்பர் 6ஆம் தேதி இண்டி கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தார். ஆனால் அவரது அழைப்பை கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜக., வெற்றி பெற்றதற்கு காங்கிரசின் பேராசையே காரணம் என்றும், இண்டியா கூட்டணிகளுடன் கூட்டணி வைக்காமல் தனியாக போட்டியிட்டதால் காங்கிரசுக்கு இந்த தோல்வி என்றும் கூறி, இந்தக் கூட்டணிக்கு எதிராக கூட்டணி கட்சிகளே குற்றம் சாட்டின.
எனவே, மம்தா பானர்ஜி, நிதீஷ் குமார், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருடன் மு.க. ஸ்டாலினும் இந்த கூட்டத்தில் சென்று கலந்து கொள்வதற்கு தயாராக இல்லை.
இவ்வாறு, ஒரு தோல்விக்குப் பின் காங்கிரஸ் கட்சி அழைத்துள்ள ஆலோசனைக் கூட்டத்திற்கு முக்கியத் தலைவர்கள் பங்கேற்காமல் பின்வாங்கினர். திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா, இக்கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்தார். பீஹார் முதல்வர் நிதிஷ்குமாரும் தங்கள் கட்சியின் மூத்த தலைவர்கள் ராஜிவ் ரஞ்சன் மற்றும் சஞ்சய் ஜா ஆகியோரை அனுப்ப உள்ளதாக தெரிவித்தார். சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், தங்கள் கட்சியின் எம்.பி., ராம்கோபால் யாதவை அனுப்புவதாகக் கூறப்பட்டது.
ஸ்டாலின் சென்னை வெள்ளத்தை காரணம் காட்டி, தங்கள் கட்சியின் சார்பாக டி ஆர் பாலு கலந்து கொள்வார் என்று தெரிவித்திருந்தார். அதுபோல் மற்ற கட்சியினரும் தங்கள் கட்சியின் சார்பில் பிரதிநிதிகளை கலந்து கொள்ள செய்வதாக தெரிவித்திருந்தனர்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்களில் இண்டி கூட்டணி கட்சிகளை காங்கிரஸ் புறக்கணித்து தனித்துப் போட்டியிட்டதால், கூட்டணியின் மற்ற கட்சிகளும் அந்தந்த மாநிலங்களில் தனித்து போட்டியிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதனால் காங்கிரஸ் மூன்று மாநிலங்களிலும் இரண்டாம் இடத்தைப் பெற்று ஓரளவு கணிசமான எம்எல்ஏக்களை பெற்றாலும் கூட, கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகள் நோட்டாவை விட குறைவாக குறிப்பாக ஒரு சதவீதத்தை விட மிக மிகக் குறைவாக வாக்குகள் பெற்று அந்தக் கட்சிகளின் சுய பலத்தை வெளிக்காட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் காங்கிரஸ் மீது இக்கட்சிகள் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால் காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்த இண்டி கூட்டணியின் கூட்டத்தை டிசம்பர் 3வது வாரத்திற்கு ஒத்திவைப்பதாக அது அறிவித்துள்ளது.