பெஷாவர் எக்ஸ்பிரஸ் டெல்லியின் பிரதான ரெயில் நிலையத்திற்கு சனிக்கிழமை நண்பகலுக்கு வந்து சேர்ந்தது. கார்கரே ஒரு ‘டோங்கா ‘ வை ( குதிரை வண்டி ) வாடகைக்கு எடுத்துக் கொண்டு ஹிந்து மஹா சபா பவனுக்கு சென்றடைந்தார்.
ஆனால் அங்கே தங்குவதற்கு அறைகள் எதுவும் காலியாக இல்லை. அங்கிருந்து பிர்லா கோயிலின் ‘ செராய் ‘ க்கு ( விருந்தினர் விடுதி ) சென்றனர். அங்கும் தங்குவதற்கு இடம் கிடைக்கவில்லை.
அதன் பின்னர் சந்தினி செளக்கிற்கு சென்றனர்.அங்கே ’ ஷெரிஃப் ‘ என்ற ஓரு மலிவான ஹோட்டலில்,மூன்று படுக்கைகள் கொண்ட அறை ஒன்றை வாடகைக்கு எடுத்தனர்.
ஹோட்டல் ரிஜிஸ்டரில் கார்கரே தன் பெயரை M.பியாஸ் என்று எழுதினார். அவருக்குப் பிறகு பெயர் எழுதிய அங்சேகர், கார்கரே அப்படி எழுதியதை கவனிக்க வில்லை.
மதன்லால் தன்னுடைய உண்மையான பெயரை எழுதினார். கார்கரேக்கு டெல்லியில் செய்வதற்கு ஏராளமான வேலைகள் இருந்தபடியால் ,அவர் வெளியிலேயே திரிந்துக் கொண்டிருந்தார். ஹோட்டல் அறையில்,மதன்லால் பஹ்வா மற்றும் அங்சேகர் மட்டுமே இருந்தனர்.
இருவரும்,அகதி முகாம்களில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி விரிவாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஞாயிறன்று மதன்லால் அங்சேகரை தன் சொந்தக்காரர்களின் வீட்டிற்கெல்லாம் அழைத்துச் சென்றார். அங்கு பஹ்வாவிற்கு மணமுடிக்க, பல பெண்களை சொந்தக்காரர்கள் அழைத்து வந்து காட்டினார்கள்.
பின்னாளில்…. வழக்கின் போது… இது பற்றி கூறிய அங்சேகர் தாங்கள் சென்ற இடமெல்லாம்,தேனீர் வழங்கப்பட்டதாகவும்,பல பெண்கள் மதன்லாலை பார்க்க வந்திருந்ததாகவும் தெரிவித்தார். அன்றிரவு அதாவது ஞாயிறன்று இரவு,கார்கரே ஹோட்டல் அறைக்கு வரவில்லை.
அவருக்கு என்னாயிற்றோ ஏதாயிற்றோ என பஹ்வாவும்,அங்சேகரும் பயந்து போனார்கள். திங்கட்கிழமை காலையில்,அங்சேகர் தன் வேலை தொடர்பாக ரிஜிஸ்டர் செய்வதற்காக ‘ பணி இடமாற்ற ’அலுவலகத்திற்கு சென்று விட்டார்.
பிற்பகல் 3 மணியளவில் அங்சேகர் ஹோட்டல் அறைக்குத் திரும்பிய போது அங்கு கார்கரே திரும்ப வந்திருப்பதைக் கண்டார். அவரோடு இன்னொரு நபரும் வந்திருந்தார் ( அது கோபால் கோட்ஸே. அவரை அங்சேகருக்கு கார்கரே அறிமுகம் செய்து வைக்கவில்லை ). அங்சேகர் அறைக்கு வந்த போது, மதன்லால் பஹ்வா,கார்கரே,கோபால் கோட்ஸே ஆகியோர் எதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.
அங்சேகர் வந்தவுடன் சட்டென்று பேச்சை நிறுத்தி விட்டார்கள். ஒரு கணம் தாமதித்து,கார்கரே, அவர்கள் மூவரும் ‘ மதன்லாலின் திருமணத்திற்காக ‘ ஜலந்தர் கிளம்பி கொண்டிருப்பதால்,அறையை ஒரு மணி நேரத்தில் காலி செய்ய இருப்பதாக அங்சேகரிடம் கூறினார்.
அங்சேகரும் கிளம்ப வேண்டியிருக்கும் என அவருக்கு கார்கரே தெரிவித்தார். அங்சேகருக்கு டெல்லியில் வந்த வேலை முடிந்து விட்டபடியாலும்,மாலை ரயிலிலேயே பம்பாய் திரும்ப திட்டமிட்டிருந்ததாலும்,அவருக்கும் தங்க அவசியம் ஏற்படவில்லை. கார்கரே அவருக்கு உதவியமைக்காக நன்றியுடன் அவரைப் பார்த்த அங்சேகர்,கார்கரேயின் நிரந்தர( ஊர் ) விலாசத்தை கேட்டார். கார்கரே அங்சேகரிடம் முகத்திலடித்தாற் போல் கூறினார் : ‘’ அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை ‘’.
கார்கரே தான் வந்த வழித்தடத்தை மறைக்க முயற்சி மேற்கொள்ள இப்போது முயற்சிக்கிறார் என்றால் அதற்கான காலம் கடந்து விட்டது.
எப்படி டாக்ஸி டிரைவர் KOTIAN ஆப்தேயை சரியாக அடையாளம் காண்பாரோ,அது போல,அங்சேகருக்கு கார்கரேயையும்,மதன்லால் பஹ்வாவையும் அடையாளம் காண்பதும் சுலபமே. தங்களின் தவறுகளுக்காக,ஆப்தே,விஷ்ணு கார்கரே ஆகியோருக்கு கடுமையான விளைவுகள் எதிர்நோக்கி இருந்தன.
காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்ஸே தப்ப முயலவில்லை. குற்றத்தை ஒப்புக்கொண்டு விட்டார். மதன்லால் பஹ்வா கையும் களவுமாகப் பிடி பட்டு விட்டார்.
ஆனால் ஆப்தே மற்றும் கார்கரேயிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை அரசு தரப்பு உறுதியாக நிரூபித்திருக்க முடியாது. தேவையற்று அந்நியர்களிடம் தங்கள் அடையாளம் ஆழப்படியும்படி நடந்துக் கொண்டு விட்டார்கள் அவர்கள்.
வழிப்போக்கர்களாக போயிருக்க வேண்டியவர்கள் இப்போது வலுவான சாட்சிகளாக பூதாகர வடிவம் எடுத்து நின்றார்கள்.
( தொடரும் )
– எழுத்து: யா.சு.கண்ணன்