
வெளிநாட்டவர்கள் நம் தேசத்திற்கு வந்த போது சில நல்லுள்ளம் கொண்டவர்கள் மட்டும் நம் நாட்டின் சிறப்புகளைக் கண்டு வியந்து போனார்கள்.
அலெக்சாந்தரோடு தொடர்புடைய இஸ்ஸாஸ் என்ற கிரேக்க அறிஞர் நம் நாட்டில் பயணித்தபோது பாரத தேசத்தின் சாமுத்திரிகா சாஸ்திரத்தை பற்றி அறிந்து ஆச்சரியப்பட்டார்.
சாமுத்திரிகா சாஸ்திரம் என்றால் மனிதனின் அவயவங்களை பார்த்து, உடல் வடிவமைப்பை கொண்டு அவன் யார்? அவருடைய பிறவி எப்படிப்பட்டது? அவன் பின்னணி என்ன? அவன் எதிர்காலம் என்ன? ஆயுட்காலம் எவ்வளவு? அவன் ஆரோக்கியம் எப்படிப்பட்டது? அவனுடைய அந்தக்கரணம் எவ்வாறுள்ளது? போன்ற அனைத்தையும் தெரிவிக்கக்கூடிய விஞ்ஞானம்.
அதனை இஸ்ஸாஸ் என்ற கிரேக்க அறிஞர் கற்றுக்கொண்டு அதனைத் தன் மொழியில் எழுதி பேரரசர் அலெக்சாநத்தாருக்கு வெகுமதி அளித்தார் என்ற பதிவு நமக்கு கிடைகிறது. நம் நாட்டு சாமுத்திரிகா சாஸ்திரத்தை ஒரு விஞ்ஞான நூலாக அவர்கள் அங்கு கௌரவித்தார்கள். இந்த சாமுத்ரிகா சாத்திரம் நாளடைவில் சைனா, எகிப்து போன்ற நாடுகளுக்கும் பரவியது. சீன நாகரீகத்திற்கு முன்பாகவே பாரத தேசத்தில் சிறப்பான நாகரீகம் நிலவியது.
அதேபோல் வானவியல் விஞ்ஞானம், நட்சத்திரங்கள், கிரககோளங்கள் பற்றிய விஞ்ஞானம் நம் தேச சாஸ்திரத்தில் விரிவாக காணப்படுகிறது.
கீரோ என்ற கிரேக்க வானவியல் விஞ்ஞானி ஒரு அற்புதமான செய்தியைத் தெரிவிக்கிறார். “நான் பாரத தேசத்தில் பயணித்த போது ஓரிடத்தில் சங்க்யா சாஸ்திரம் அதாவது எண்களின் முக்கியத்துவத்தைப் பற்றி தெரிவிக்கும் நூலைப் பார்க்க நேர்ந்தது. அதன் மூலம் மனித வாழ்க்கையின் மீது எண்கள் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்து கொண்டேன்” என்று கூறியுள்ளார். அந்நூலினை அத்யயனம் செய்து ஆழமாகப் படித்தறிந்து அதனைப் பற்றிய அற்புதமான கருத்துக்களை பதிவிட்டுள்ளார். “அந்நூலில் உள்ள கருத்துக்களை ஆராய்ந்து பார்த்தேன். அவை அனைத்தும் உண்மையான சாஸ்திரங்களே என்ற முடிவுக்கு வந்தேன். அவற்றிலிருந்து நான் பல நல்ல விஷயங்களைக் கற்றறிந்தேன்” என்று கூறுகிறார்.
இது போன்ற செய்திகள் பதிவுகளாக நமக்குக் கிடைக்கின்றன. ஆனால் நாம் அவற்றைப் பற்றி அறிந்து கொள்ள முயல்வதில்லை. நம் பிள்ளைகளுக்கு வகுப்பு பாடங்களாக அவற்றைக் கற்றுத் தருவதும் இல்லை. வீட்டில் பெற்றோரும் அவை பற்றிய அறிதல் இன்றி இருக்கிறார்கள்.
அது மட்டுமின்றி ஊடகங்கள் கூட பாரத தேசத்தின் மீது கௌரவம் ஏற்படுத்தும் செய்திகளை வெளியிடுவதில்லை. காரணம் ஏனோ புரியவில்லை! ஒருவேளை நம் ஹிந்து மதத்திற்கு அதன் மூலம் பெரிய மதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற பிரமையில் உள்ளார்கள் போலுள்ளது. இது போன்ற செய்திகள் நாட்டின் உன்னதத்தை வெளிப்படுத்தும் என்பதை ஏனோ மறந்து விடுகிறார்கள். இது அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான அம்சம்.
இங்கு சாமுத்ரிகா சாஸ்த்திரம், எண் கணிதம் போன்றவை வெறும் சாஸ்திரங்களாகவே இருந்து விடாமல் அவற்றை மக்கள் அத்யயனம் செய்து படித்தறிதல் வேண்டும். அதன் மூலம் அவற்றை அபிவிருத்தி செய்து நாமும் பலன் பெற முடியும். அது போல் அத்யயனம் செய்யாமல் நிறுத்தி விடுவதால் என்ன நடக்கிறதென்றால் எண்களின் சாஸ்திரம், சாமுத்திரிகா சாஸ்திரம் போன்றவை சிலர் கைகளில் சிக்கி மக்களை வஞ்சிப்பதற்கு பயன்படும் நூல்களாக மாறிவிடுகின்றன.
தற்போது நியூமராலஜி என்ற பெயரிலும் சாமுத்திரிகா லட்சணம் என்ற பெயரிலும் சாமானிய மக்களின் பலவீனங்களைப் பயன்படுத்தி அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கும் கும்பல்களின் கைகளில் அவை சிக்கி உள்ளன. தற்போது அப்படிப்பட்ட அரைகுறை அறிவு கொண்ட கும்பல் பெருகி வருகிறது. ஆனால் அவற்றை சாஸ்திரம் கூறியுள்ளபடி அத்யயனம் செய்தால் அது போன்ற திருட்டுகளில் இருந்து சமுதாயத்தை காப்பாற்ற முடியும். அதன் மூலம் அவற்றில் உள்ள சரியான கருத்துக்களை அனைவரும் அறிந்து பயன்பெற முடியும்.
அதனால் நாம் புராதனமான வித்யைகளை வெறும் நம்பிக்கைகள் என்று ஒதுக்கி விடாமல் அவற்றுக்கு சாஸ்திர விஞ்ஞானம் இருப்பதால் சரியான முறையில் படித்துணர வேண்டிய தேவையும் கடமையும் நமக்கு உள்ளது.
அதேபோல் மந்திர சாஸ்திரத்தில் உள்ள அற்புதங்களை இன்றளவும் பார்க்க முடிகிறது. பல ஆலயங்களில் கும்பாபிஷேகம் செய்யும்போது சரியாக அதே நேரத்தில் கோபுரத்தின் மேல் கருடப் பறவைகள் கோபுரத்தை சுற்றி பிரதக்ஷிணம் செய்வதைக் காணமுடிகிறது. இது போன்ற செய்திகளை நாம் கேட்டு வருகிறோம். எதனால் இது நிகழ்கின்றது? மந்திரங்களுக்குள்ள சக்தி அபாரமானது.
மந்திரங்களை அனுசந்தானம் செய்து சாதனை செய்து வந்தால் பலவித நோய்கள் குணமாகின்றன என்பதற்கு நிரூபணங்கள் உள்ளன. ஆச்சரியமான விஷயங்கள் இவை! மகாத்மா காந்தி இது குறித்து விரிவாக எழுதியுள்ளார். “லோதா மகராஜ் என்பவருக்கு குஷ்ட வியாதி வந்தது. ஸ்ரீமத் ராமாயணத்தை நியமத்தோடு அவர் பாராயணம் செய்தார். இதை படிப்பதன் மூலம் என் வியாதி குணமாகும் என்ற நம்பிக்கையோடு படித்தார். உண்மையில் இராமாயணத்தைப் பாராயணம் செய்ததில் அவருடைய வியாதி குணமாகி விட்டதை நான் கண்களால் பார்த்தேன்” என்று காந்திஜி எழுதி இருக்கிறார்.
இது போன்றவற்றை கவனித்துப் பார்க்கையில் நாம் வெறும் நம்பிக்கைகள் என்று விலக்கி ஒதுக்கும் சாஸ்திர விஷயங்களின் பின்னுள்ள விஞ்ஞானத்தையும் அவற்றின் பிரபாவத்தையும் அறிய முடிகிறது,
நம் குழந்தைகளுக்கு ஆரம்பத்திலிருந்தே இதுபோன்றவற்றை எடுத்துக் கூறினால் அவர்களுக்கு நம் பாரத நாட்டு நூல்கள் மீதும், தர்மத்தின் மீதும், ரிஷிகளின் மீதும், சாஸ்திரங்களின் மீதும், முக்கியமாக தேசம் மீதும் கௌரவம் ஏற்படும். அவற்றின் மீது உள்ள வெறுப்பு மறையும். அவற்றைப் பாதுகாத்து கொள்ள வேண்டும் என்ற ஊக்கம் பிறக்கும். அவற்றை ஏற்படுத்திக் கொடுத்த மகரிஷிகளை மதிக்க வேண்டும் என்பதை உணர்வார்கள்.
அதனால் பெற்றோரும் பெரியோரும் பொறுப்பு எடுத்துக் கொண்டு இன்றைய இளைஞர்களுக்கிடையில் பாரத தேசத்தின் தர்ம விஞ்ஞானத்தைப் பரப்ப வேண்டும். அதனை நம் முதன்மையான கடமையாக உணர வேண்டும்.
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்


