spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைஇந்தி எதிர்ப்பா? இந்திய எதிர்ப்பா? கிறித்துவ தமிழ் பரப்பாளர்களே... பதில் சொல்லுங்கள்!

இந்தி எதிர்ப்பா? இந்திய எதிர்ப்பா? கிறித்துவ தமிழ் பரப்பாளர்களே… பதில் சொல்லுங்கள்!

- Advertisement -

hindutamilarkatchi1

புதிய தேசிய கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்று கடந்த 2017 ம் ஆண்டு இஸ்ரோவின் முன்னாள் சேர்மன் திரு கஸ்தூரிரங்கன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதனுடைய நோக்கம் கல்வியின் தரத்தை குழந்தைப் பருவத்திலேயே மாணவ மாணவிகளுக்கு மேம்படுத்த வேண்டும் என்பதாகும்.

ஏற்கனவே மேற்கு தொடர்ச்சி மலைகளை பாதுகாக்க வேண்டும் என்று இதே கஸ்தூரிரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட 11 பேர் கொண்ட குழுவினுடைய திறமையான அறிக்கையை முன்னிறுத்தியே, இந்த வாய்ப்பு கஸ்தூரிரங்கனுக்கு வழங்கப்பட்டது.

குழு அமைக்கப்பட்ட ஆண்டு2017. ஒருவேளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையில் ஆட்சி அமைந்து இருக்குமானாலும், கஸ்தூரிரங்கனின் புதிய தேசிய கல்விக் கொள்கை அமல் படுத்தப்பட்டுத்தான் இருக்கும். ஆக மத்தியில் யார் ஆள்கிறார்கள் என்பது முக்கியமில்லை, புதிய தேசிய கல்வி கொள்கை என்பது தான் முக்கியம், பிரதானம்.

நேற்று முன்தினம் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரும், உத்தரகாண்டின் முன்னாள் முதல்வரும், ஹரித்வாரின் நடப்பு எம்.பி.யுமான திரு ரமேஷ் பொக்கிரயால் அவர்களைச் சந்தித்த கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு, புதிய தேசிய கல்வி கொள்கை சம்பந்தமான தன்னுடைய அறிக்கையை அளித்தது.

இந்தப் புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து, மக்களும், கல்வியாளர்களும், அறிவியலாளர்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்க https://mhrd.gov.in என்கிற இணைய தளமும்,[email protected] என்கிற மின்னஞ்சல் முகவரியும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை நம்முடைய கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

பொதுமக்களின் கருத்துக்களின் அடிப்படையிலேயே, மும்மொழி கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட இருக்கிறது என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் திட்டவட்டமாக தெளிவுபடுத்தியிருக்கிறது.

ஏதோ பாரதிய ஜனதா கட்சியின் அரசாங்கம் வந்ததாலேயே, இந்தி நம்மீது திணிக்கப்படுவது போல ஒரு மாயையை இங்கு உண்டாக்கி விட்டு குளிர் காய்கிறது ஒரு கூட்டம்.

இந்தி மொழி தமிழகத்தின் மீது திணிக்கப்படுவதாக திராவிட இயக்கங்களும், பொதுவுடமை இயக்கங்களும், சமூக ஆர்வலர்களும் தேவையில்லாத பதட்டத்தை தமிழகத்தில் எழுப்பி, மக்களின் கவனத்தை திசைதிருப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

தேசியகல்விக் கொள்கை 1968 ஆம்ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தும், அதற்குப் பின்னால் அதே கல்விக் கொள்கை, 1986 மற்றும் 1992 ஆகிய ஆண்டுகளில் திருத்தப்பட்ட போதும்,,,

மும்மொழி பாடத்திட்டம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அமலில் இருந்தே வருகிறது. நமக்கு அருகாமையில் இருக்கும் கேரளாவில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்பட்டு ஆண்டுகள் பலவாகிறது. இன்றைக்கு பழைய ஆந்திரத்தில் இருந்து பிரிக்கப்பட்டு இருக்கும் தெலுங்கானாவிலும் இதே நிலைதான்.

என்னதான் இந்தி இந்தியாவின் ஆட்சிமொழியாக, அலுவல் மொழியாக இருந்தாலும், இன்னமும் 23 மொழிகள், அலுவல் மொழிகளாக இந்தியாவில் நீடிக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம்.

1960 களில் காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த, இந்தித் திணிப்பை போல, இப்போது யாரும் ஒரு மொழியை, இன்னொரு மாநிலத்தில் மீது திணித்து விட முடியாது.

மக்கள் விருப்பம், மாநில மற்றும் யூனியன் பிரதேச மனநிலையின் அடிப்படையிலுமே, மும்மொழித் திட்டம் தொடர இருக்கிறது என்பதை கவனமாக நாம் மறந்துவிட்டோம்.

இந்தி இன்றைக்கு ஆதிக்கம் செலுத்தும், வடக்கு மத்திய இந்தியாவில், இன்றைக்கும் சுமார் 50-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டே வருகிறது. அதை யாரும் அழித்து விட முடியவில்லை.

ஆந்திராவைத் தாண்டினாலே வட இந்தியா முழுவதும் ஆளுமை செலுத்தும் இந்தித் திரைப்படங்களுக்கு மத்தியில், இன்னமும் bhojpuri-போஜ்பூரி திரைப்படங்கள் வெற்றிகரமாக வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது.

இலக்கிய வளம் மிகுந்த மைதிலி மொழி தான் பீகாரின் செல்ல மொழி.

மைதிலியை அழித்துவிட்டுத்தான், இந்தியை பிஹாரில் வளர்க்க வேண்டும் என்று, மத்திய ஆட்சியாளர்கள் நினைத்தால், இந்திய வரைபடத்தில் இருந்து பீகார் காணாமல் போகக் கூடிய சூழல் உருவாகி இருக்கலாம். இதுதான் உண்மை.

இந்தித் திரைப்படங்களின் தலைநகரமாக விளங்கும் மும்பை மாநகரில்,,, இன்னமும் மராட்டி பேசக்கூடியவர்கள் எண்பது விழுக்காடுகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

1970 களில் அன்றைய பாம்பேயை மையப்படுத்தி வேகம்பிடித்த… சிவசேனாவின் இனத்துவேசம்கூட, தமிழர் மராட்டியர் என்ற அடிப்படையில் எழுப்பப்பட்டது தானே தவிர, தமிழர்- இந்திக்காரர்களுக்கிடையே நடந்த மோதல் அல்ல.

இசை ஆளுமை மிகுந்த பஞ்சாபி மொழியை பஞ்சாபில் இருந்து அகற்றி,,, இந்தியை ஆட்சி மொழியாக்க முடியுமா…? ஹிந்தி பேசக்கூடியவர்கள் இந்தியா முழுவதும் 40 விழுக்காடு இருக்கலாம் என்கிற கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து அல்ல.

குமரி மாவட்ட மக்களின் தமிழும் மலையாளமும் போல அவர்களின் நிலமை இருக்கலாம். பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தூய தமிழர். ஆனால் அவர் மலையாளத்திலும் எழுதுவார். அதற்காக மலையாளம் அவரை விழுங்கி விடவில்லை.
அவரது தாய்மொழி தமிழே. இதுதான் வட இந்தியாவில் பல இடங்களில் காணப்படும் நிலை.

இந்தியில் சரளமாக பேசுகிறார்கள் என்பதற்காக மராட்டியத்தின் சரத்பவாரையோ, உத்தவ் தாக்கரேவையோ நீங்கள் இந்திக்காரன் என்று சொல்ல முடியுமா…?
அப்படிச் சொன்னால் அவர்கள்தான் ஏற்றுக் கொள்வார்களா…?

இந்தி என்பது ஒரு மொழி அவ்வளவே. அது இந்தியாவின் தொடர்பு மொழியாக நீடிப்பதாலேயே அது கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற சிந்தனை பிறக்கிறது.

தாய்மொழி என்பது ரத்தத்தில் கலந்தது. ஒருவன் ஆயிரம் மொழிகளை கற்றாலும், சிந்தனைத்திறன் என்பதும், கற்பனை வளம் என்பது அவனுடைய தாய் மொழியிலேயே பிறக்கும் என்கிறார்கள் அறிஞர்கள்.

என்னதான் இந்தி மொழியை நீங்கள் வெறுத்தாலும், இந்தி மொழி கூடுதலாக புழக்கத்தில் உள்ள நாடாளுமன்றத்திற்கு சென்றுதான் ஆகவேண்டும். அங்கே பேசுகிறவர்களில் பெரும்பாலானோர் இந்தியையே பயன்படுத்துகிறார்கள்.
குறிப்பாக மலையாளிகள் ஆந்திரத்துக்கு காரர்கள் கன்னடத்து காரர்கள்.

தமிழகத்தில் இருந்து செல்பவர்கள் ஒன்று தமிழில் பேச வேண்டும் அல்லது ஆங்கிலத்தில் பேச வேண்டும். நம்முடைய வளர்ச்சியை, நம்முடைய இயலாமையை,
நம்முடைய தேவையை பெரும்பான்மையானோர் கற்றுக்கொண்டிருக்கும் இந்தியில் பேசினால், எளிதாக புரிந்து கொள்ளப்படும்.

மாறாக நீங்கள் ஆங்கிலத்தில் பேசினால் இந்தி பேசக்கூடிய மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதுவும் புரிவதில்லை என்கிறது நாடாளுமன்ற வரலாறு.

1937 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் முதல்வராக பொறுப்பேற்ற ராஜகோபாலாச்சாரி அவர்கள்,,, உயர்நிலைப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் படமாக்கிய போது,,, பெரும் போர் வெடித்தது தமிழகத்தில். அன்றைக்கு மக்களுடைய கருத்துக்கள் கேட்கப்படவில்லை. இந்தித் திணிப்பை திட்டமிட்டு செய்தது. ஆனால் இன்று அப்படி இல்லை நிலைமை.

ஹிந்தி பேசக்கூடிய மாநிலங்களில்கூட ஆங்கிலம் தவிர்த்து மூன்றாவது விருப்ப மொழியை கட்டாயமாக்குகிறது கஸ்தூரிரங்கன் கமிட்டி பரிந்துரைகள்.

1937 காலகட்டங்களிலும், இந்தியே இந்தியாவின் அலுவல் மொழியாக இருக்கும் என்கிற 1965 ம் ஆண்டு கால கட்டங்களிலும், தமிழகத்தில் அதற்கு எதிராக கிளர்ச்சியை நடாத்தியவர்கள் முழுக்க முழுக்க திராவிட இயக்கத்தவர்கள்.

இந்தி எதிர்ப்பையே பிரதானமாக்கி, தனது அதிகார வரம்பை உறுதிப்படுத்தி, தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது திராவிட முன்னேற்றக் கழகம்.1967ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் அரியணை ஏறுவதற்கு, பிரதான காரணம் இந்தி எதிர்ப்பு என்பதை யாரும் இங்கு மறந்துவிடவில்லை.

முன்னூறு ஆண்டு காலம் இந்த மண்ணின் வளங்களை எல்லாம் சுரண்டி, இங்கிலாந்துக்கு கொண்டு சென்ற வெள்ளையர்களின் தாய் மொழியான ஆங்கிலத்தை ஏற்றுக் கொள்வார்களாம்,,, ஆனால் இந்தியா என்ற ஒரு குடையின் கீழ் வரக்கூடிய மொழிகளுள் ஒன்றான இந்தியை ஏற்றுக் கொள்ள மாட்டார்களாம். கேட்பதற்கே விந்தையாக இருக்கிறது.

எப்படி தமிழகம் இந்தி என்றால் கொழுந்துவிட்டு எரிகிறதோ, அதுபோலதான் வங்காளமும். தமிழர்களைப் போலவே வங்காளிகளும் மொழிப்பற்று மிகுந்தவர்கள். ஆனால் இன்று படிப்படியாக வங்காளமும் இந்தியை கற்றுத் தேர்ந்து கொண்டிருக்கிறது… மறந்துவிட வேண்டாம்.

ஒரு மொழியை மையப்படுத்தி, போலியான நாடகத்தை நடத்த வங்காளிகள் தயாரில்லை என்று இதன் மூலம் விளங்க முடிகிறது.

ஆனால் தமிழகம் மட்டும் இந்தியை மையப்படுத்தி எத்தனையோ விதமான மாயாஜாலங்களை காட்டிக் கொண்டிருக்கிறது. இந்தி மொழிக்கு எதிராக சண்டமாருதம் முழங்கிய கருணாநிதி வீட்டு பிள்ளையான, தயாநிதி மாறன்தான் நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில், தெள்ளத்தெளிவாக இந்தி பேசியதாக அறியப்படுகிறார்.

முன்னொரு காலத்தில் கட்டப் பஞ்சாயத்துக் காரர்களாகவும்,,, ரவுடிகளாகவும் அறியப்பட்ட, திராவிட இயக்க கல்வித் தந்தைகள் நடத்தும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இந்தி ஒரு பாடமாகவே இன்று கற்பிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

அது ஜெகத்ரட்சகனாக இருந்தாலும் சரி,எ.வ.வேலுவாக இருந்தாலும் சரி,திராவிட இயக்க பெரும் போராளியாக அறியப்படும் துரை முருகனுடைய கல்வி நிலையங்களாக இருந்தாலும் சரி… இந்திக்கு அங்கே சிவப்புக் கம்பள வரவேற்புதான்.

என்னை அடிமைப்படுத்திய ஆங்கிலத்தை ஏற்பேன்… என்னை எப்போதும் அடிமைப்
படுத்தியிராத இந்தியை எதிர்ப்பேன்… காண்ட்ராக்டர் நேசமணியையும் விஞ்சிவிட்டார்கள் இந்த திராவிட இயக்க கல்வித் தந்தைகள்.

காக்கை குருவி எங்கள் ஜாதி… நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்று பாடிய பாரதிக்கு ஏழு மொழிகள் தெரியும். உலகத்தில் பெரும் இலக்கியவாதிகளாக அறியப்பட்டவர்கள் எல்லாம், தங்களுடைய தாய்மொழியிலேயே,,, சாகாவரம் பெற்ற இலக்கியங்களைப் படைத்திருக்கிறார்கள்.

அது மக்சீம் காரக்கியாக இருந்தாலும் சரி,,, வில்லியம் சேக்ஸ்பியராக இருந்தாலும் சரி. அவனவன் ரத்தத்தில் ஊறிய மொழி அவனது தாய் மொழி. அதில்தான் அவனுடைய சிந்தனைகள் பிரவாகமாய் ஊற்றெடுக்கும்.

இன்றைக்கு திராவிட இயக்கத்து கன்றுக்குட்டிகள் கல்வி பயிலும் கூடங்களில் எல்லாம்…  இந்தி நடைமுறையில் இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்ட நேரம் ஆகிவிடாது.

இன்னும் கூடுதலாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநில செயலாளர் தோழர் முத்தரசன் கூட, இந்தியை திணிக்க கூடாது என்று எதிர்ப்பதுதான் விந்தையிலும் விந்தை.

திராவிட இயக்க கூமுட்டை களோடு சேர்ந்து, தேர்தல் கூட்டணி வைத்தால் மட்டும் போதாது,,, மொழிப் பிரச்சனையிலும் தலையிடுவோம் என்று முத்தரசன் முழங்கினால்,,, அவருக்கு நாம் விடும் ஒரே ஒரு கேள்வி,,,உங்கள் கட்சியின் தேசியத் தலைவரான தோழர் சுதாகர் ரெட்டியிடம் நீங்கள் பேச பயன்படுத்தும் மொழி எது…?
பதில் இருக்கிறதா.

கூடுதலாக ஒரு மொழியை கற்பதால் என்ன கேடு வந்துவிடப்போகிறது. குடியா முழுகிப் போய்விடும். மதத்தை பிரதானமாக வைத்து பாகிஸ்தானோடு சேர்ந்த கிழக்கு வங்காளத்தின் மீது,,, பாகிஸ்தானியர்கள் திணித்த உருதால்,,, பங்களாதேஷ் பிறந்தது.

அன்றைக்கு பங்களாதேஷ் பிறப்பதற்கு காரணம் பாகிஸ்தானில் நிலவிய உருது மொழி வெறி. வங்க தேசியர்களின் தாய்மொழியான வங்காள மொழியையே நிர்மூலமாக்க கூடிய வேலையில் இறங்கியது பாகிஸ்தான்.

இன்றைக்கு இந்தியாவில் அந்த நிலை இல்லை. சமஸ்கிருதமா தமிழா எது செம்மொழி என்ற கேள்விக்கு…விடையை தெளிவாகவே வரையறுத்தார்கள் வட இந்திய வரலாற்று ஆசிரியர்கள், தமிழ்தான் செம்மொழி என்று.

இலக்கிய வளம் படைத்த மொழி, இலக்கண பலம் படைத்த மொழி, 20 ஆயிரம் ஆண்டு தொடர்ச்சி கொண்ட ஒரு மொழி, உலகில் 120 நாடுகளில் பேசப்படும் ஒரு மொழியான எம் தாய் தமிழ் மொழியான தமிழ், இன்னமும் முழுமையடையாத இந்தியால் நிர்மூலமாக்க படும் என்பதை கேட்பதற்கே அருவருப்பாக இருக்கிறது.

மொழியை எதிர்க்கிறோம் என்ற பெயரில், மோடி எதிர்ப்பே இவர்களுடைய பிரதானமாக இருக்கிறது என்பதை தமிழகத்து அப்பாவிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

இதை வைத்து இனக் கலகத்தை மூட்ட வேண்டும் என்று, இனிமேலும் திராவிட இயக்கங்கள் நினைத்தால்… சவுக்கடி கொடுத்து சண்டமாருதம் முழங்குவார்கள் எம் தமிழ் மக்கள்… இந்தியை ஒரு மொழியாக வரவேற்கிறேன்…அதுவே திணிப்பாக இருந்தால் எதிர்த்து களத்தில் நிற்போம். இதுவே இந்து தமிழர் கட்சியின் நிலைப்பாடு.

– இராம இரவிக்குமார் 

(கட்டுரையாளர்: நிறுவன தலைவர், இந்து தமிழர் கட்சி)

1 COMMENT

  1. கட்டுரையாளர் திரு ராம ரவிக்குமாரின் ஒவ்வொரு வரியும் நூற்றுக்கு நூறு உண்மை. அந்நிய பாஷை படிப்போம் சொந்த நாட்டின் பிரதானமான ஹிந்தியை புறக்கணிப்போம் என்று திராவிட காட்சிகள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் சொல்லி சொல்லியே மக்களை முட்டாளாக்கி விட்டனர். ஆனால் சென்னையில் தான் தக்ஷிண பாரத ஹிந்தி பிரச்சார சபை உருவானது. இன்னொரு மொழி தெரிந்தால் கூடுதல் பலமே ஒழிய வேறில்லை. சுயமாக முன்வந்து ஹிந்தி கற்பவர்கள் கண்டிப்பாக முன்னுக்கு வருவார்களே தவிர நாசமாகப் போய் விடமாட்டார்கள். வட இந்தியா சென்று வாழும் படிக்காத தமிழன் ஹிந்தி சரளமாக பேசுகிறான். ஆனால் படித்த தமிழன் இங்கேயே இருந்தால் ஹிந்தி தெரியாமல் வெட்கி தலை குனியும் நிலையில் இருக்கிறான் எனவே இந்தியர்கள் அனைவரும் ஹிந்தி கற்போம். ஆனால் நம்மீது திணிக்கப்பட்டால் கண்டிப்பாக அதனை எதிர்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe