கற்றாழை வறட்சியான பகுதிகளில் வளர்ப்பதற்கு ஏற்ற ஒரு மருந்துச் செடி ஆகும். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு அழகுச் சாதனங்கள் மருந்துப் பொருட்கள் தயாரிப்பதற்கு கற்றாழை பெரிதும் பயன்படுகின்றது.
கற்றாழை இலையிலிருந்து எடுக்கப்படும் “ஜெல்” எனப்படும் “கூழ்” சருமத்தின் ஈரத்தன்மையை (Moisture) பாதுகாக்கப் பயன்படுகிறது. இதன் தேவைக்கு இயற்கை சூழ்நிலையிலிருந்து கற்றாழைச் செடிகள் சேகரிக்கப்பட்டு பக்குவப்படுத்தியபிறகு மருந்துப் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றது.
எளிதாக கிடைக்கக்கூடிய இந்த மூலிகை ஏராளமான மருத்துவக்குணங்களை கொண்டது. தீய சக்திகள், கண் திருஷ்டி இவைகளை அண்டவிடாது என்ற நம்பிக்கையின் காரணமாக வீட்டின் முன்புறம் வளர்க்கப்படுகிற அல்ல கட்டித் தொங்க விடப்படுகிற இந்த செடி மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணி பற்றாமலிருப்பதற்காகவும் தொங்க விடப்படுவது உண்டு.
கற்றாழையின் இரண்டு பாகங்களான சதை (ஜெல்) மற்றும் பாலில் இருந்து பல்வேறு பொருட்கள் தயாராகிறது. கற்றாழைப் பால் மஞ்சள் நிறத்தில் இருக்கும். கற்றாழையின் அடிப்புறத்தை உற்றுக் கவனித்தால் இதை அறியலாம். கற்றாழை தோலை நீக்கிவிட்டுப் பார்த்தால் கெட்டியான கூழ்போன்ற சதைப்பகுதி தெளிவாகத் தெரியும்.
கற்றாழையில் 240 வகைகள் உள்ளன. 4 கண்டங்களில் இவை காணப்படுகின்றன. ஆனால் இப்போது மக்கள் 4 வகை கற்றாழைகளையே அதிகமாக பயிரிடுகிறார்கள். ஆரோக்கியம் வழங்கும் மருந்து மற்றும் உணவுப்பொருளாக இவை பயன்படுகின்றன. ‘அலோ வேரா பார்படென்சிஸ்’ இனம்தான் அதிகமாக பயிரிடப்படும் கற்றாழை இனமாகும். இது வட ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்டது.
கற்றாழையின் ஜெல்லில் 96 சதவீதம் நீர் நிரம்பி இருக்கிறது. இதுவே வறண்ட சூழலில் அவை தாக்குப்பிடித்து வாழ காரணமாகவும் அமைகிறது.
கற்றாழை சதைப்பகுதியில் பல்வேறு வகை வைட்டமின்கள், அமினோ அமிலங்கள், தாதுப்பொருட்கள் உள்ளிட்ட 75 வகை பொருட்கள் அடங்கி உள்ளன. இவ்வளவு சத்துப்பொருட்கள் நிரம்பியிருப்பதுதான் அவற்றை மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த பொருளாக மாற்றியிருக்கிறது.
கற்றாழையின் சதைப்பகுதி நீரிழிவு, ஆஸ்துமா, வலிப்பு, வாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிறந்த நிவாரணம் தரும். பல்வேறு சரும பிரச்சினைகளுக்கும் இது தீர்வு தருகிறது.
கற்றாழைப் பொருட்கள் உடல்சூடு தணிக்கும். மலச்சிக்கலை தீர்க்கும். உடலின் நச்சுக் கழிவுகளை அகற்றும்.
கற்றாழையை ஜூஸ் செய்தும், மற்ற உணவுப்பொருட்கள் மற்றும் சுவையூட்டும் பொருட்களுடன் சேர்த்தும் சாப்பிடப்படுகிறது. அப்படியே தனித்துச் சாப்பிடுவதும் உண்டு. கசக்கும், பிடிக்காது என்று காரணம் காட்டி கற்றாழையை தவிர்ப்பது ஆரோக்கியமற்ற பழக்க வழக்கமாகும்.
மருத்துவ உலகில் பல்வேறு மருந்துகளிலும், சத்து பானங்களிலும் கற்றாழை சேர்க்கப்படுகிறது. பற்பசை, சருமப் பொருட்கள், வாசனைப் பொருட்கள் தயாரிப்பிலும் சேர்க்கப்படுகிறது.
எகிப்தியர்கள் கற்றாழையை புனிதமான தாவரமாக கருதினர். அவர்கள் மனிதர்களின் இறுதிச்சடங்கிலும் இதை பயன்படுத்தி உள்ளனர். வரலாற்றில் பேரழகியாக வர்ணிக்கப்படும் கிளியோபாட்ரா தனது சரும அழகுப் பொருளாக கற்றாழையை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
கற்றாழை, கடுமையான வறண்ட சூழலிலும் 100 ஆண்டுகளைத் தாண்டி வாழக்கூடியது. எனவே இதை பயன்படுத்துபவர்களும் ஆரோக்கியமாக நீண்ட ஆயுள் பெறுவார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அமெரிக்கர்கள், கற்றாழையை ‘சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் மந்திரத் தாவரம்’ என்று போற்றுகிறார்கள். பலவிதங்களில் அவர்கள் கற்றாழையை பயன்படுத்துகிறார்கள். தொட்டிச்செடியாக இந்த மருத்துவ தாவரத்தை வீடுகளிலேயே வளர்க்கலாம்.
- சோற்றுக் கற்றாழை ஜெல்லை முகத்தில் தொடர்ந்து பூசுவதன் மூலம் இளம் வயதில் உண்டாகும் தோல் சுருக்கம் மறைந்து அழகு கூடும். அதிக நேரம் வெயிலில் அலைபவர்கள், முகத்தில் பூசி வந்தால் கருமை, கரும் புள்ளி ஏற்படாமல் காக்கும்.
- கற்றாழையின் சோற்றைத் தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் குளிக்க தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு குணமாகும்.
- கற்றாழையைத் தினமும் எடுத்துக்கொண்டால் தேவையற்ற கொழுப்பு கரைந்து உடல் ஸ்லிம் ஆகும்.
- சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.
- மூட்டு வலி, கழுத்து வலியின்போது, வலி ஏற்பட்ட இடத்தில் கற்றாழையை நீளவாக்கில் வெட்டி, சூடு செய்து, பற்றுப் போடுவதன் மூலம் நிவாரணம் கிடைக்கும்.
- வாடிச் சருகான கற்றாழை மடலை தீயில் கருக்கி, தேங்காய் எண்ணெயோடு கலந்து தீப் புண்களில் மீது பூசி வர விரைவில் புண் ஆறும். கற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து இரண்டாக பிளந்து சோற்றுப் பகுதியை தீயில் வாட்டி உடல் பொறுக்கும் சூட்டில் அடிப்பட்ட இடத்தில் இதை வைத்து ஒத்தடம் கொடுக்க வலி, வீக்கம் மட்டுமல்ல இரத்தக் கட்டும் மாறும்.
- இச் செடியின் மடலில் உள்ள சோற்றை எடுத்து தண்ணீரில் நன்கு அலசி அதை சாப்பிட்டு வர குடல் புண், மூல நோய் மாறும். மலச் சிக்கல் தீரும்.
- தழும்புகள், வெயில் பாதிப்புகள், உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.
- மஞ்சள்காமாலை நோய்க்கும் சோற்றுக்கற்றாழை மருந்தாக பயன்படுகிறது. தவிர கூந்தல் தைலம், அழகு சாதனப் பொருள்களில் இது சேர்க்கப்படுவதால் பொருளின் தரமும், வீரியமும் மட்டுமல்ல மருத்துவதன்மையும் அதிகரிக்கிறது.
- கற்றாழை சோறை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு செழித்து வளரும். எண்ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும்.
- தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் தோல் நீக்கிய கற்றாழை தண்டுகளை நன்கு அரைத்து, முகம் முழுவதும் பூசி கால் மணிநேரம் அல்லது அரைமணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகத்தில் இருக்கும் எண்ணெய் தன்மை நீங்கி முகம் பொலிவு பெறும். முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், வடுக்கள் மறையும்
- பற்கள் மற்றும் ஈறுகள் நமது உடலில் மற்ற உறுப்புகளை போலவே மிகவும் முக்கியமான உறுப்புக்கள் பற்கள் மற்றும் ஈறுகள். ஈறுகள் மற்றும் பற்கள் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பது அவசியமாகும். தோல் நீக்கிய கற்றாழை தண்டுகளை சிறிதளவு மென்று சாப்பிட்டு வந்தால் ஈறுகள் பலம் பெறும். பற்களில் சொத்தை ஏற்படுத்தும் கிருமிகளை அழிப்பதிலும் கற்றாழை உதவுகிறது.
- மலச்சிக்கல் தினசரி மலம் கழிப்பவர்களுக்கு உடலில் நோய்கள் ஏதும் ஏற்படாது. ஆனால் இன்று பலருக்கும் தவறான உணவு முறைகள் மற்றும் வாழ்கை முறைகளால் மலச்சிக்கல் ஏற்பட்டு அவர்களை பாடாய்படுத்துகிறது. தினமும் காலையில் சிறிதளவு தோல் நீக்கிய கற்றாழையை ஜூஸ் போட்டோ அல்லது அப்படியே மென்று சாப்பிட்டு வந்தாலோ மலச்சிக்கல் நீங்கும். வயிறு, குடல்கள் போன்ற ஜீரண உறுப்புகளில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
- நச்சுநீக்கி கற்றாழை பல்லாண்டுகளாகவே சிறந்த மருத்துவ மூலிகையாக நமது சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. கற்றாழையில் இருக்கும் சில வேதிப்பொருட்கள் நச்சுத்தன்மை நிறைந்த ரசாயனங்களை செயலிழக்கச் செய்யும் தன்மை கொண்டதாகும். கற்றாழையை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளில் தேங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி உடல்நலத்தை மேம்படுத்துகிறது.
- நோய் எதிர்ப்பு சக்தி குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆகிய இரண்டு தரப்பினரும் உடலில் நோயெதிர்ப்பு ஆற்றல் குறைந்த அளவில் பெற்றவர்கள் ஆகின்றனர். கற்றாழை இருக்கும் சத்துக்கள் உடலில் நைட்ரிக் ஆக்சைட், சைட்டோகைனின் போன்ற வேதிப்பொருட்களின் உற்பத்தியை நமது உடலில் அதிகரித்து நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. குழந்தைகள், முதியவர்கள் சரியான விகிதத்தில் கற்றாழை பயன்படுத்துவது அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
- உடல் குளிர்ச்சி கோடைகாலங்களில் பலருக்கும் உடலில் வெப்பம் அதிகரித்து அவர்களுக்கு உடல் அசதியை ஏற்படுத்துகிறது. கற்றாழை தண்டுகளை தோல் நீக்கி, மிக்சியில் போட்டு நன்கு அடித்து கற்றாழை ஜீஸ் தயாரித்து, அதில் சிறிதளவு நாட்டு சர்க்கரை கலந்து சாப்பிடுவதால் உடல் வெப்பம் தணியும். சிலருக்கு கோடைகாலங்களில் ஏற்படும் நீர்சுருக்கு அல்லது மூத்திரசுருக்கு போன்ற பிரச்சனைகளும் நீங்கும். உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.
- நீரிழிவு நோய் அமெரிக்க நாட்டில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வுகளின் படி கற்றாழை தண்டுகளை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவ்வப்போது சாப்பிட்டு வந்ததில் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கணிசமாக குறைந்திருப்பதாக கண்டறிந்துள்ளனர். நம் நாட்டில் நெடுங்காலமாகவே நீரிழிவு நோயாளிகளுக்கு கற்றாழை சாறு மருந்தாக உட்கொள்ள நமது பாரம்பரிய மருத்துவத்தில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
- புற்று நோய் கற்றாழை நச்சுத்தன்மைகளை எதிர்த்து போராடி அவற்றை அழிப்பதில் சிறப்பாக செயலாற்றுகிறது என்பதை நாம் ஏற்கனவே அறிந்து கொண்டோம். மனிதர்களுக்கு பல காரணங்களால் அவர்களின் உடலில் உண்டாகும் புற்று நோய் செல்கள் மீண்டும், மீண்டும் வளரக்கூடியவை. இத்தகைய தீமையான செல்களை அழித்து, ஆரோக்கியமான செல்களை உடலில் வளர்ச்சி பெற செய்யும் ஆற்றல் கற்றாழைக்கு உண்டு. எனவே புற்று நோய் ஏற்படாமல் தடுக்க நினைப்பவர்களும், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களும் கற்றாழையை மருத்துவ உணவாக பயன்படுத்துவது நல்லது