நந்தியா வட்டைஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இதன் பூவும் இலையும் மருத்துவக் பயன்கள் உடையன. சங்ககால மகளிர் குவித்து விளையாடியதாகச் சொல்லப்பட்டுள்ள 99 மலர்களில் ‘நந்தி’ என்னும் பெயரால் நந்தியாவட்டை மலர் சுட்டப்பட்டுள்ளது.
பசுமையாய் கண்களுக்கு குளிர்ச்சியைத்தரும் இந்தச் செடி சுமார் 1.8 – 2.4 மீட்டர் உயரம் வளரும். இலையை காம்புடன் கிள்ளினால் பால் வரும். பூக்கள் வெண்மை நிறத்துடன், வாசனையுடன் கூடியவை. வேர், பூக்கள், மற்றும் அதிலிருந்து வடியும் பால் இவை அனைத்தும் மருத்துவ பயன் நிறைந்தவை.
வேர் கசப்பான சுவைகொண்டது. சிறிது துவர்ப்புச் சுவையும் இதிலுண்டு. உடல் சூட்டைக் கிளப்பி சீராக்கும், வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும். பல் வியாதியிலும், மங்கலாக பார்வை உள்ளவர்களுக்கும் சிறந்தது வேர். பக்கவாதம், சிறுநீர்க் குழாயில் ஏற்படும் சுருக்கம், வாயு தோஷத்தின் சீற்றம், பூட்டுகளில் ஏற்படும் வலி போன்றவைகளில் வேர் சிறந்தது பூக்கள் குளிர்ச்சியானவை, வாசனையுடன் கூடியவை, கண் எரிச்சல், கண் சம்பந்தப்பட்ட நோய்களிலும், தோல் வியாதிகளிலும் பூ சிறந்தது. பால் குளிர்ச்சியும், புண்களில் ஏற்படும் நீர்க்கசிவுகளிலும் பயன்படுத்த உகந்தது.
வேரின் தோல் துவர்பபு கசப்புச்சுவை உடையது. வெந்நீர் விட்டரைத்து வெறும் வயிற்றில் இருவேளை நக்கிச் சாப்பிட அனாவசியமாக அடைந்து கிடக்கும் குடல் அழுக்குகளை அகற்றி- விடும். மலத்தைக் கட்டும். கல்லீரல் மற்றும் மண்ணீரல் வியாதிகளிலும், சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் தடையையும், பூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலிகளிலும் வேர்தோல் மிகுந்த பயன்களை அளிக்கக் கூடியது.
சூடான புளித்த மோரில் வேர்த்தோலை அரைத்த பூட்டுகளில் ஏற்படும் வலி வீக்கங்களில் பற்று இடலாம். வெந்நீரில் அரைத்து உள்ளுக்கும் சாப்பிடலாம். அதுபோல் வாய் மற்றும் பற்கள் சம்பந்தப்பட்ட நோய்களில் வெந்நீரில் அரைத்து கரைத்த வேர்த்தோலை வாய் கொப்பளிப்பதால் (வாய் மற்றும் பல் உபாதைகள் நீங்கிவிடுகின்றன.
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் உதிரப் பெருக்கத்தில் ஏற்படும் துர்நாற்றம், ரத்தம் கட்டி கட்டியாக வெளியேறுதல் போன்ற நிலைமையில் வேர்த்தோலை நன்னாரி, கடுக்காய், சுக்கு கஷாயத்தில் ஒரு இரவு ஊற வைத்து மறுநாள் காலை விழுதுபோல் அரைத்து வெந்நீருடன் பருக நல்ல பலனைத் தரும்.
நந்தியார்வட்டைச் செடி இருவகைகளில் காணப்படுகின்றன. இருவகையும் பித்த சூட்டைக் குறைக்கும் தன்மையுடையவை. புண்களை சுத்தப்படுத்தி ஆற வைக்கும். பூக்களை இரவில் கண்களில் கட்டி, மறு நாள்காலை எடுத்து விடுதலின் கண்கள் குளிர்ச்சியடைகின்றன.
பூக்களை சுத்தமான தண்ணீரில் இடித்து சாறு பிழிந்து கண்களில் விடுவதால் கண்நோய்கள் நீங்கி கண்பார்வையும் நன்றாக இருக்கும்.
இரவு நேரங்களில் ஒரு பாத்திரத்தில் 10 பூக்களை தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். அதை காலையில் எழுந்தவுடன் இந்த தண்ணீரில் கண்களை அலச வேண்டும். தண்ணீரை கண்களுக்கு அருகில் வைத்து, அதில் மூடியும் முழித்துப் பார்க்கலாம். அப்படி செய்து வந்தால், கண் உஷ்ணம் குறைந்து கண் பார்வை தெளிவடையும்.
இரவில் அதேபோல் இந்த பூக்கள் சிலவற்றை எடுத்து, அதை வெள்ளைநிற காட்டன் துணியில் கட்டி, கண்ணின் மேல் வைத்துக்கொண்டு தூங்கினாலும் கண்ணில் உள்ள சூடு, கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும்.
நந்தியாவட்ட செடியின் வேர்ப்பகுதியை சிறிதளவு எடுத்து, நன்கு வாயில் மென்று இந்த அந்த சாறு பல்லின் வேர்க்கால்களில் இறங்கினால் பல் வலி உடனடியாக குணமடையும் ஆற்றல் கொண்டது.
அடிபட்ட காயங்களுக்கு மிகச்சிறந்த மருந்தாக காணப்படுகிறது. நம்முடைய உடலில் எங்காவது காயங்கள் ஏற்பட்டிருந்தால், அதில் தண்ணீர் பட்டால் ஒரு சில நாட்களில் சீழ் பிடித்துவிடும். அதனால் இந்த செடியின் கிளையை ஒடித்தால், வெள்ளை நிறத்தில் பால் வடியும். அந்த பாலை புண்களில் தடவினால், புண்ணும் விரைவில் ஆறும். சீழ் பிடித்துவிடும் என்ற பயமும் கிடையாது.
ரத்த அழுத்தம் தற்காலத்தில் பெரும்பாலும் நிறைய பேருக்கு இருக்கிறது. குறிப்பாக, உயர் ரத்த அழுத்தம். அப்படி ரத்த அழுத்தம் அதிகமானால் அது இதயப் பிரச்சினைகளைக் கொண்டு வந்துவிடும். அதை போக்குவதற்கு மிகச்சிறந்த மருந்தாக இந்த நந்தியாவட்டம் பயன்படுகிறது.
இந்த நந்தியாவட்ட இலைகள் சிலவற்றைப் பறித்து, அதை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை வடிகட்டி குடித்து வந்தால் உயர் ரத்த அழுத்தம் சரியாகும்.
ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த செடியின் பட்டையையும் பல்வேறு கூட்டு மருந்துகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த பட்டையும் கண் மற்றும் சருமப் பிரச்சினைகளுக்கு லேகியங்கள் மற்றும் சூரணங்கள் செய்யும்போது, கூட்டு மருந்துகளில் ஒன்றாகப் பயன்படுகிறது.
நந்தியாவட்டப் பூக்களை நிழலில் உலர்த்தி, அதை மூலிகை பல்பொடியில் சேர்க்கப் படுகிறது. பற்களின் வேர்கள் உறுதியாகும். சொத்தைப்பல் வராமல் பார்த்துக் கொள்ளும்.
பல் வலி, ஈறுகளில் ரத்தம் வடிதல் போன்றவற்றையும் சரிசெய்யும் ஆற்றல் கொண்டது.
இந்த செடியின் காய்ந்த குச்சிகளை எரித்து, அந்த சாம்பலைக் கூட, பயன்படுத்தி பல் துலக்கி வரலாம். பல் வலி குணமடையும்.
நந்தியாவட்டை பூ இதழ்களிலிருந்து சாறு எடுத்து சம அளவு தாய்ப் பாலுடன் கலந்து 2 துளிகள் கண்ணில் விட கண் சிவப்பு குணமாகும்.
நந்தியாவட்டை பூவால் ஒற்றடம் கொடுக்க வேண்டும். அல்லது 2 துளி பூச்சாற்றை கண்ணில் விட கண் எரிச்சல் குணமாகும்.
பல்வலி குணமாக ஒரு துண்டு வேரை வாயிலிட்டு 10 நிமிடங்கள் நன்கு மெல்ல வேண்டும். பிறகு துப்பி விடலாம்.
நந்தியாவட்டை வேர் ஒரு துண்டை நன்கு நசுக்கி ஒரு டம்ளர் நீரில் போட்டு ½ டம்ளர் அளவாக காய்ச்சி இரவில் மட்டும் ஒரு வேளை குடிக்க வயிற்றுப் புழுக்கள் வெளியாகும்.