இந்தியாவில் மத்திய அரசின் சார்பில், துாய்மை இந்தியா, யோகா தினம், டிஜிட்டல் இந்தியா, ஸ்கில் இந்தியா என, பல்வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், தனி மனிதா்கள் ஒவ்வொருவரும் தங்களது உடல் திறனை வளர்த்து கொள்ளவும், உடல் உறுதியை பேணும் வகையிலும், உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு போன்றவற்றை பின்பற்ற வேண்டி பிட் இந்தியா திட்டம் என்ற புதிய திட்டத்தை பிரதம மந்திரி மோடி இன்று துவக்கி வைத்துள்ளார்.
இதற்கான விழா டெல்லியில் நடைபெற்றது. விழாவில், பிரதமர் மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி கூறுகையில், “ நமது கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக எப்போதுமே பிட்னஸ் இருந்து வந்துள்ளது.
ஆனால், இப்போது உடற்பயிற்சி செய்வதில் அலட்சியமும், ஆர்வமின்மையும் உள்ளது.
பல தசாப்தங்களுக்கு முன்பு, சராசரி மனிதன், ஒருநாளைக்கு சுமார் 8 முதல் 10 கி.மீட்டர் வரை நடந்தான். எனவே, நடைபயிற்சி, மறறும் ஓட்டபயிற்சி, அல்லது சைக்கிளிங் செய்யுங்கள்.
நம்மில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியால் தனிமனித உடல் செயல்பாடுகள் குறைந்து வருகிறது.
நாம் குறைந்த அளவு துாரங்களே தற்போது நடக்கிறோம். அதேவேளையில், நாம் குறைவாக நடப்பதாக அதே தொழில்நுட்பம் நம்மிடம் கூறுகிறது” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவும் கலந்து கொண்டார். கிரண் ரிஜிஜூ பேசுகையில், “ சக குடிமக்களின் ஒத்துழைப்போடு பிட் இந்தியா இயக்கத்தை நாம் புதிய உச்சத்துக்கு எடுத்துச்செல்வோம்.
ஹாக்கி வீரர் மேஜர் தயான் சந்த் பிறந்த நாளில் இந்த இயக்கம் துவங்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சியை தருகிறது” என்றார்.