காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், தனது பெற்றோர், அண்ணன்கள், சகோதரிகளுக்கு விஷம் கலந்து உணவைக் கொடுத்துவிட்டு தப்பிய இளம் பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் மாவட்டத்தில் உள்ள மைனாதர் காவல் நிலையத்துக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர், அதே பகுதியை சேர்ந்த அரவிந்த் குமார் என்பவரை காதலித்து வந்தார். அந்தப் பெண்ணுக்கு இன்னும் 18 வயது நிரம்பாத நிலையில், இவர்கள் காதலை பெற்றோர் கண்டித்தனர்.
கடந்த ஆண்டு, தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, அரவிந்த்குமார் மீது சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், இப்போது ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
அந்தச் சிறுமியின் வீட்டுக்குச் சென்ற அவர், தங்கள் காதலுக்கு யார் எதிர்ப்புத் தெரிவித்தாலும் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும் என்று மிரட்டியுள்ளார்.
இந்தப் பிரச்னைக்குப் பிறகும் அவர்கள் தங்கள் காதலை தொடர்ந்து வந்தனர். இந்நிலையில், காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அப்பா, அம்மா, அண்ணன்கள், 2 சகோதரிகள், பக்கத்துவீட்டுப் பெண் ஆகியோரை விஷம் வைத்து கொல்ல முடிவு செய்தார் அந்தச் சிறுமி.
இதற்காக ரகசியமாக விஷத்தை வாங்கி வைத்திருந்தார். உணவில் அதைக் கலக்கி வைத்துவிட்டடார். அவர் சமைத்த உணவை உண்ட அனைவரும் மயங்கிவிட, வீட்டில் இருந்து காதலருடன் ஓடிவிட்டார் சிறுமி.
இதையடுத்து தற்செயலாக அங்கு வந்த ஒருவர், இவர்கள் மயங்கிக் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர்..
அப்போது அவர்கள் விஷம் கலந்த உணவை உட்கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் 2 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி கொடுக்கப்பட்ட புகாரை அடுத்து காவல்துறையினர், அந்தச் சிறுமியையும் காதலனையும் தேடி வருகின்றனர்.