கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிபட்டணம் அருகில் கோதாவரி நதியில் மூழ்கிய படகு விபத்தில் இதுவரை மூழ்கிய படகை மீட்க முடியாமல் அரசுத் தரப்பு திண்டாடி வருகிறது. 25 உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.
சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கோதாவரி நதியில் அதிகவேக சுழலில் சிக்கி கச்சலூரு அருகில் தலைகீழாக கவிழ்ந்தது. படகு மூழ்கியதால் பயணிகள் தூக்கி எறியப்பட்டனர். விபத்து நடந்தபோது 73 பேர் படகில் இருந்து உள்ளனர். அவர்களில் 27 பேர் உயிர் காக்கும் உபகரணம் மூலம் (லைஃப் ஜாக்கெட்) மற்றும் உள்ளூர் வாசிகள் மூலம் உயிர் பிழைத்தனர்.
மீதியுள்ளவர்களை கண்டுபிடிக்க முயற்சி நடக்கிறது. இந்த விபத்தில் 46 பேர் இறந்துள்ளதாக தெரிகிறது.
கோதாவரி நதியில் பாபிகொண்டலு எனப்படும் புகழ்பெற்ற மலைகளுக்கு இடையில் ஆன நதியில் படகுப் பயணம் சுற்றுலா பயணிகளின் உற்சாகமான இடம். ‘கண்டிபோச்சம்மா’ ஆலயத்திலிருந்து அந்தப் படகு கிளம்பி ஒரு மணி நேரத்தில் இந்த விபத்து நடந்துள்ளதாக தெரிகிறது.
அதிக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய போது படகு செலுத்தியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் 10 மீட்டர் வரை சுழல் உள்ளது. மிகப்பெரிய அளவில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. படகு மூழ்கிய இடத்தில் கோதாவரி நதியின் ஆழம் 330 அடி. எனவே அந்தப் படகை வெளியே எடுப்பது அசாத்தியம் என்கின்றனர் வல்லுநர்கள்.
60 அடி ஆழத்துக்கு மேல் கடல் உள் நீச்சலுக்குச் செல்பவர்கள் கூட செல்வது இயலாத காரியம் என்கின்றனர். நீரில் மூழ்கிய படகின் எடை 25 டன். நீரோட்டம் அங்கே அதி தீவிரமாக உள்ளது. செப்டம்பர் 15 அன்று இந்த விபத்து நடந்துள்ளது. இன்னும் தேடுதல் வேட்டையில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு உள்ளார்கள்.
இரு மலைகளுக்கிடையே வகுடு எடுத்தாற்போல் நதி செல்வதையே பாபிகொண்டலு என்பார்கள். பாபிடி என்றால் வகிடு என்று அர்த்தம். இது மிக முக்கியமான சுற்றுலாத்தலம். படகில் சென்று திரும்புவதே இதன் முக்கிய அம்சம்.
விபத்து ஏற்பட்ட படகுக்குச் சொந்தமானவர் விபத்து ஏற்பட்ட நிலையில் ஓடி ஒளிந்து விட்டார். அதிக அளவு பயணிகள் படகின் முதல் தளத்தில் ஏசி ரூமில் அடைபட்டுவிட்டதாக தெரிகிறது. அதனால் உடல்கள் வெளியே வரவில்லை எனக் கூறப் படுகிறது. நீரோட்டத்தின் கீழ்முகத்தில் வரலாம் என்ற யோசனையின் பேரில் அங்கு வலைகளை விரித்து தேடி வருகிறார்கள்.