அமெரிக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, இந்தியாவில் தூய்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதற்காக, பில் அண்ட் மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளை ‘குளோபல் கோல்கீப்பர்’ விருது வழங்கி கௌரவித்துள்ளது.
நாட்டு மக்களின் ஆரோக்கியம் மற்றும் நாட்டின் சுகாதார மேன்மைக்காக ‛துாய்மை இந்தியா’ திட்டத்தை தாம் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் ஆண்டான கடந்த 2014ஆம் ஆண்டே பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி விட்டார். இதன் மூலம், அனைத்து மக்களுக்கும் கழிப்பிட வசதி செய்து கொடுப்பது, கிராமங்கள் மற்றும் நகரங்களை துாய்மையாக பராமரிப்பது ஆகியவை செயல்படுத்தப் படுகின்றன.
இவ்வாறு, ‛துாய்மை இந்தியா’ திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதற்காக பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப் படும், குளோபல் கோல்கீப்பர் விருது வழங்கப்பட்டது.
பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிபரும், உலகின் செல்வந்தர்களில் ஒருவருமான பில்கேட்ஸின் ‘பில் – மெலின்டா கேட்ஸ்’ தொண்டு நிறுவனம் சார்பில் இந்த ‘குளோபல் கோல்கீப்பர்’ விருது வழங்கப் பட்டது. இந்த விருதினை மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸிடமிருந்து பிரதமர் மோடி பெற்றுக் கொண்டார்.
இது குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்த போது…. ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை நிறைவேற்றி, அதனை தங்களது அன்றாட வாழ்வின் ஒருபகுதியாக மாற்றிய கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். கடந்த 5 ஆண்டுகளில் 11 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இத்திட்டத்தால் ஏழை மக்களும் பெண்களும் அதிக பலன் பெற்றனர். திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றிக் காட்டுவோம்.
துப்புரவு இலக்கை அடைவது மட்டுமல்லாமல், ‘பிட் இந்தியா’ மூலம் உடலுறுதி மற்றும் உடல்நலனை பேணிக்காக்கவும் ஊக்கப்படுத்தி வருகிறோம் என்றார்!