சிகிச்சைக்கு வந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து வெளியிட்ட மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
மும்பை ஜோகேஸ்வரி பகுதியை சேர்ந்த 28 வயது இளம்பெண், மூல வியாதியால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக அருகில் கிளினிக் நடத்தி வந்த வன்ஸ்ராஜ் திவிவேதி (58) என்ற மருத்துவரை சந்தித்தார்.
அவர் அப்பெண்ணுக்கு சிகிச்சை அளித்து வந்தார். கடந்த 2015-ஆம் ஆண்டு, வலி அதிகமாக இருப்பதாகக் கூறி கிளினிக்கிற்கு சென்றுள்ளார், இளம்பெண். அப்போது அவருக்கு ஊசி போட்ட திவிவேதி, அங்கேயே சிறிது நேரம் தூங்குமாறு கூறியுள்ளார். அதன்படி தூங்கியவர் 45 நிமிடத்துக்குப் பிறகு எழுந்து,வீட்டுக்குச் சென்றார். சென்றதும் அவரது மொபைல் போனுக்கு ஒரு வீடியோ வந்தது.
மருத்துவர் அவரை பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ அது. அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண், மருத்துவரைச் சந்தித்து இது குறித்து கோபத்துடன் விசாரித்துள்ளார். இதுபற்றி யாரிடமும் சொன்னால், இந்த வீடியோவை பரப்பி விடுவேன் என்று எச்சரித்துள்ளார். இதையடுத்து அந்த வீடியோவை காட்டி மிரட்டியே, தொடர்ந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு மலாடு பகுதிக்கு கணவருடன் சென்றுவிட்டார் அந்தப் பெண். பிறகும் தொடர்ந்து தனது ஆசைக்கு இணங்கும்படி மிரட்டி வந்துரிக்கிறார். அந்த பெண்ணோ மறுத்துள்ளார். இதனால், வீடியோவை அந்தப் பெண்ணின் கணவருக்கு அனுப்பியுள்ளார் மருத்துவர்.
அதிர்ச்சி அடைந்த அவர் கணவர், இதுபற்றி மனைவியிடம் விசாரித்துள்ளார். அப்போது நடந்த கதைகளை கண்ணீரோடு தெரிவித்துள்ளார், அந்த பெண். இதையடுத்து மேக்வாடி காவல் நிலையத்தில் இருவரும் புகார் கொடுத்தனர். ஆதாரமாக அந்த வீடியோ காட்சியையும் கொடுத்துள்ளனர். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மருத்துவர் திவிவேதியை கைது செய்தனர்