தெலங்காணா ஆர் டி சி தொழிலாளர்களுக்கு நம்பிக்கை அளித்தார் ஆளுநர் தமிழிசை.
தெலங்காணா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஆர் டி சி தொழிலாளர்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பது பற்றியும் வாடகை பஸ்களை எடுத்துக் கொள்ளும் விஷயத்தைப் பற்றியும் டிஆர்எஸ் அரசுடன் பேசுவதாக ஜேஏசி தலைவர்களிடம் தெரிவித்தார்.
ஆர்டிசி தொழிலாளர்கள் அவசரப்பட்டு தற்கொலை எதுவும் செய்து கொள்ளக் கூடாது என்றும், இந்த விஷயத்தில் அவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் ஆளுநர் அவர்களிடம் குறிப்பிட்டார். ஆர்டிசி ஜேஏசி தலைவர்கள் ஆர்டிசி தொழிலாளர்களுக்கு தைரியத்தை எடுத்துரைக்க வேண்டும் என்றும் அவர்களிடம் அறிவுறுத்தினார்.
நேற்று ஆளுநரை ஜேஏஸி ஒருங்கிணைப்பாளர் அஸ்வத்தாம ரெட்டி, இணை ஒருங்கிணைப்பாளர் ராஜா ரெட்டி, சுதா, விஎஸ் ராவ் மற்றும் தலைவர்கள் பலர் சந்தித்துப் பேசினர்.
அரசு தனக்கு நீதிமன்ற உத்தரவு கிடைக்கவில்லை என்று சாக்குப் போக்கு கூறி கால விரயம் செய்கிறது என்று ஆர்டிசி ஜேஏசி தலைவர்கள் ஆளுநரிடம் தெரிவித்தார்கள். உயர் நீதிமன்றம் அரசாங்கத்திடம் தொழிலாளர் சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் படியும் ஆர்டிசி தொழிலாளர்ளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினாலும் அரசு எதையும் கண்டு கொள்ளவில்லை என்று அவர்கள் ஆளுநரிடம் கூறினர்.
25 சதவிகிதத்திற்கு மேல் வாடகை பஸ்களை எடுத்துக் கொள்வதற்கு வழி இல்லை என்ற நிபந்தனைகள் இருப்பதாகவும் ஜேஏசி தலைவர்கள் ஆளுநரிடம் தெரிவித்தனர். வாடகை பஸ்களின் டெண்டர் வாங்கும் செயலை ரத்து செய்ய வேண்டும் என்று ஜேஏசி தலைவர்கள் ஆளுநர் தமிழிசையிடம் கோரிக்கை விடுத்தனர்.
போர்ட் ஆஃப் டைரக்டர்களின் அனுமதி இல்லாமலேயே ஆர்டிசி நிர்வாகமும் அரசும் ஒன்றாக சேர்ந்து 1035 வாடகை பஸ்களுக்கு டெண்டர் அனுப்பி விட்டதாகவும் கூறினர். அவர்கள் கூறியவற்றை பொறுமையுடன் கேட்டுக் கொண்ட ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், இந்தக் கோரிக்கைகள் குறித்து அரசுடன் பேசுவதாக வாக்களித்தார். அதனால் நம்பிக்கை பெற்ற ஆர்டிசி ஜேஏசி தலைவர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.