நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது ‘டி-20’ போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை முழுமையாகக் கைப்பற்றி, நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது.
நியூசிலாந்தில் இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளில் இந்திய அணி அசத்தலாக வென்று, 4-0 என முன்னிலை பெற்றது. ஏற்கெனவே போட்டித் தொடரைக் கைப்பற்றிய நிலையில், இன்று ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி நடைபெற்றது.
விராட் கோலிக்கு ஓய்வு தரப்பட்டு, இந்திய அணி கேப்டன் பொறுப்பை ரோகித் சர்மா ஏற்று விளையாடினார். ‘டாஸ்’ வென்ற ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். லோகேஷ் ராகுல் உடன் சாம்சன் தொடக்க வீரராகக் களம் இறங்கினார். கேப்டன் பொறுப்பேற்றிருந்த ரோகித் தனக்கு பதிலாக சாம்சனை தொடக்க வீரராகக் களம் இறக்கியும் கிடைத்த வாய்ப்பை சாம்சன் 2 ரன்னில் ஆட்டம் இழந்து தவறவிட்டார்.
ராகுலுடன் இணைந்து கேப்டன் ரோகித்தும் அதிரடி ஆட்டம் காட்ட, இரண்டாவது விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்த நிலையில், ராகுல் (45) அரை சத வாய்ப்பை இழந்தார். ரோகித் அரை சதம் கடந்து 60 ரன் எடுத்த நிலையில், கால் தசைபிடிப்பு காரணமாக ‘ரிட்டயர்டு ஹர்ட்’ முறையில் திரும்பினார்.
பின்னர் ஷிவம் துபே (5) ஆட்டம் இழந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் (33), மணிஷ் பாண்டே(11) அதிரடி காட்ட, இந்திய அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 163 ரன் எடுத்தது.
பின்னர் விளையாடத் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு குப்டில் (2), மன்ரோ (15) விரைவில் திரும்பினர். புருஸ், டக் அவுட் ஆனார். செய்பெர்ட், ராஸ் டெய்லர் இணை நன்கு அடித்து அரை சதம் அடித்து அணியின் ரன்னை உயர்த்தி வெற்றியை நோக்கி நடைபோட்டனர். இருப்பினும், கடைசிக் கட்டத்தில் விக்கெட் விழ, அணி தடுமாறியது. இதனால் நியூசிலாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 156 ரன் மட்டும் 7 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதை அடுத்து, ‘டி-20’ தொடரை 5-0 என முழுமையாக வென்று நியூஸி அணியை ஒயிட்வாஷ் செய்தது.
5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா ஒயிட்வாஷ் செய்த அணிகள்!
ஒருநாள் கிரிக்கெட்:
2008 vs இங்கிலாந்து
2010 vs நியூஸிலாந்து
2011 vs இங்கிலாந்து
2014 vs இலங்கை
2017 vs இலங்கை
டி20 கிரிக்கெட்:
2008 vs நியூஸிலாந்து