இளைஞர்கள் மோடியை பிரம்பால் அடிப்பார்கள் என்று ராகுல் பேசியதற்கு பதில் அளிக்கும் வகையில் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, ராகுலை ஒரு டியூப் லைட் என்று விமர்சித்தார்.
அண்மையில் மோடி சூரிய நமஸ்காரம் செய்யும் வீடியோவை பதிவிட்டு கிண்டல் செய்த ராகுல், தில்லியில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய போது, வேலைவாய்ப்பை வழங்காவிட்டால் இளைஞர்கள் மோடியை பிரம்பால் அடிப்பார்கள் என்று தாக்கிப் பேசி இருந்தார்.
நாடாளுமன்ற மக்களவையில் இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து உரையாற்றி மோடி, ராகுலுக்கு பதிலடி கொடுத்தார். 6 மாதங்களில் இளைஞர்கள் என்னை பிரம்பால் அடிப்பார்கள் என காங்கிரஸ் தலைவர்கள் பேசியது உண்மை தான். அதற்கு ஆட்களை சேர்ப்பது கடினம் ன். அதற்கு தயாராக 6 மாதம் தேவை. ஆட்களை சேர்ப்பதற்கு 6 மாதங்கள் சரியான நேரம். ஆனால் நானும் ஒன்றை முடிவு செய்து விட்டேன்! அடுத்த 6 மாதங்களில் எனது சூர்ய நமஸ்காரத்தின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளேன்! என்று பேசினார்.
கடந்த 20 ஆண்டுகளாக அவதூறு பேச்சுக்களை தாங்கும் வகையில் என்னை தயார்படுத்திக் கொண்டுள்ளேன். அவர்களின் அடியைத் தாங்கும் அளவுக்கு நானும் அதிக சூரிய நமஸ்காரங்களால் எனது முதுகையும் போதுமான அளவுக்கு வலிமையாக்கி வைத்துக் கொள்கிறேன். எனது உடற்பயிற்சியை அதிகரித்துக் கொள்ள எனக்கு 6 மாதம் கொடுத்ததற்கு நான்மகிழ்ச்சி அடைகிறேன் என்று பேசினார்.
அவரது பேச்சுக்கு அவையில் பலரும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். அப்போது எழுந்துநின்று குறுக்கிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல், அவையில் கடும் அமளி நிலவுவதால் நீங்கள் பேசியதை சரியாக கேட்க முடியவில்லை என்று கூறினார்.
அதற்கு பதிலளித்த மோடி, நான் 30 நிமிடங்களாக பேசி உள்ளேன். ஆனால் இப்போது தான் அங்கே கரன்ட் வந்துள்ளது. சில டியூப்லைட்கள் இப்படிதான் வேலை செய்கின்றன என்று கூறினார்.
இதற்கு அவையில் பலத்த சிரிப்பலை எழுந்தது. ராகுலைப் பார்த்து ஆளும் கட்சியினர் பலரும் சிரிக்க, காங்கிரஸ் காரர்களோ அமைதியாக வேடிக்கை பார்க்க, ராகுல் வேகமாக அமர்ந்து ஏதோ முணுமுணுத்தார்.