குஜராத் அரசுக்குச் சொந்தமான 120 கணினிகளில் ரான்சம்வேர் வைரஸ் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் கணினியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தகவல்கள் அழிந்துபோனதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாதிப்புக்குள்ளான கணினிகளில் இருந்த தகவல்கள் அனைத்தும் அழிந்துவிட்டன. எனினும் அந்த கணினிகளில் முக்கியமான தகவல் ஏதும் இல்லை என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் செயலாளர் தனஞ்ஜெய் திவேதி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து கணினிகளும் அணைக்கப்பட்டன. ஆட்சியர் அலுவலக பணிகளும் முடக்கிவைக்கப்பட்டது என்று குஜராத்தின் மெஹ்சானா மாவட்ட ஆட்சியர் அலோக் பாண்டே கூறியுள்ளார்.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (NIA) உருவாக்கிய இணையவழி தாக்குதல் கருவிகளை பயன்படுத்தி உலகின் சுமார் 150 நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கணினிகளில் ‘ரான்சம்வேர்’ வைரஸ் மூலம் இணைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க அந்தந்த நாட்டு அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
வைரஸ் தாக்குதல் ஏற்படும் கணினிகளில் சேமித்து வைத்திருக்கும் தகவல்கள் அனைத்தும் அழிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் வான்னகிரை (Wannacry) என்ற பெயருடன் வருவதால், இந்தப் பெயரில் வரும் எந்தவிதமான தகவலையும் திறக்கவோ, படிக்க முயற்சிக்க வேண்டாம். இந்த பெயருடைய கோப்புகளை திறக்கும் போது, நமது தகவல்கள் அனைத்தையும் அந்த வைரஸ் அழித்து விடும் என்று எச்சரிக்கப் பட்டுள்ளது.