தென்காசிக்கு வந்து… வீடுகளில் தங்கி… மலேசியா செல்லும் முன் பிடிபட்ட ‘தப்ளிக்’ நபர்கள்!

Published:

tabliqjamat2 - 2026

டெல்லி மாநாட்டிற்கு வந்துவிட்டு, மலேசியாவுக்கு தப்பி செல்ல முயன்ற 10 பேர் சென்னை விமான நிலையத்தில் சிக்கினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் பீதி காரணமாக சர்வதேச விமானங்கள் உட்பட அனைத்து விமான சேவையும் ரத்து செய்யப்பட்டதால் ஏராளமான மலேசிய நாட்டினர் தமிழ்நாட்டில் சிக்கி தவித்தனர். மலேசிய அரசு இந்திய அரசிடம் பேசி அவர்களை சிறப்பு விமானங்கள் மூலம் தங்களது நாட்டிற்கு திரும்ப அழைத்துக் கொண்டிருக்கிறது.

இதுவரையில் 8 சிறப்பு விமானங்களில் சுமார் 1500க்கும் மேற்பட்ட மலேசியர்கள் சென்னையில் இருந்து மலேசியா சென்றுள்ளனர். இந்நிலையில், நேற்று காலை 10.50 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு பாடிக் ஏர்லைன்ஸ் என்ற சிறப்பு தனி விமானம் புறப்பட தயாரானது. அதில் தமிழகத்தில் தங்கியிருந்த 137 மலேசியர்கள் செல்ல இருந்தனர்.

இவர்களில் 127 பேரை மலேசிய தூதரக அதிகாரிகள் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை, சுங்கச்சோதனை, குடியுரிமை சோதனை நடத்தப்பட்டது.

மீதமுள்ள 10 மலேசியர்கள், டெல்லியில் நடந்த ஒரு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மலேசியாவில் இருந்து சுற்றுலா பயணிகள் விசாவில் டெல்லிக்கு வந்தது தெரியவந்தது. இவர்கள் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு விட்டு, விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்துள்ளனர். பின்பு அங்கிருந்து தென்காசிக்கு சென்று உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

அப்போது அவர்கள் மலேசிய அரசு, சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து செல்வதை கேள்விப்பட்டு சென்னையில் உள்ள மலேசிய துணை தூதரகத்தை தொடர்பு கொண்டுள்ளனர். இவர்கள் டெல்லி மாநாட்டுக்காக வந்ததை தூதரக அதிகாரிகளிடம் மறைத்துவிட்டனர்.

ஆனால் குடியுரிமை அதிகாரிகள் 10 பேரிடம் நடத்திய சோதனையில் டெல்லி மாநாட்டிற்கு வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் அந்த 10 பேரின் மலேசிய பயணத்தை ரத்து செய்தனர்.

மீதமிருந்த 127 பயனிகளுடன் சிறப்பு தனி விமானம் நேற்று பகல் 11.30 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. மத்திய, மாநில அரசுகளின் சுகாதாரத்துறை பலமுறை வேண்டுகோள் விடுத்தும் டெல்லி மாநாட்டில் பங்கேற்ற இவர்கள் 10 பேரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படாமல் மலேசியாவுக்கு தப்பிச்செல்ல முயன்றுள்ளனர்.

எனவே அவர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசிடம் ஒப்படைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். மேலும் இதுகுறித்து சுகாதாரத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த 10 பேரும் தென்காசியில் யார் யாரை சந்தித்தனர். எங்கு தங்கியிருந்தனர் என விமான நிலைய மருத்துவக் குழுவினர் தென்காசி மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விசாரணை நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

Related articles

Recent articles

spot_img