இந்தியாவில் கரோனாவால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் தினமும் 10 மணி நேரம் தூங்குவதாகப் பிரபல இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா கூறியுள்ளார்.
பிசிசிஐ சார்பாக வெளியிடப்பட்டுள்ள விடியோவில் அவர் கூறியதாவது:
இக்காலக்கட்டத்தில் நல்ல உடற்தகுதியுடன் இருப்பது முக்கியம். எனவே தொடர்ந்து பயிற்சிகளில் ஈடுபடுகிறேன். டிரெய்னருடன் தொடர்ந்து பேசி வருகிறேன். எல்லா வீராங்கனைகளும் என்னென்ன பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்பதையெல்லாம் அவர் கூறி வருகிறார்.
குடும்பத்துடன் என் நேரத்தைச் செலவழித்து வருகிறேன். என் அம்மாவின் சமையல் பணிகளில் உதவுகிறேன். பாத்திரங்களைக் கழுவித் தருவது என் தினசரி வேலைகளில் ஒன்றாகிவிட்டது. என் சகோதரனையும் விடாது தொந்தரவு செய்து வருகிறேன்.
எனக்குப் படங்கள் பார்க்கப் பிடிக்கும். ஒரு வாரத்துக்கு இரண்டு, மூன்று படங்கள் பார்த்து விடுகிறேன். அதேசமயம் நிறையப் படங்கள் பார்க்கவும் விரும்புவதில்லை. குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடவே விரும்புகிறேன்.
வீட்டில் இருக்கும்போது முக்கியமாக நான் செய்வது, நன்குத் தூங்குவது தான். ஒருநாளைக்கு 10 மணி நேரமாவது தூங்கி, நாள் முழுக்க என்னை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.