உலகில் நேற்று ஒரே நாளில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; 6 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகில் கடந்த 24 மணி நேரத்தில், 1,03,878 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; 6,069 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 1,96,986 ஆகவும், மொத்த பாதிப்பு 28,27,047 ஆகவும் அதிகரித்துள்ளது. இதுவரை 7,98,295 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 1,863 பேர் உயிரிழந்ததை அடுத்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 52,097 ஆக உயர்ந்தது. புதிதாக 37,370 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதையடுத்து மொத்த பாதிப்பும் 9,23,812 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,10,400 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
இந்தியாவில் 24,506 பேருக்கு கொரோனா வைரஸ் கிருமி தொற்று உறுதி செய்யப் பட்டிருக்கிறது. இந்தியாவில் இதுவரை 775 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்று பரவுவதற்கு முன்னதாகவே, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தும், முன்னதாகவே ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப் படுத்தியும் கூட, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,506ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து இந்தியாவில் உயிரிழப்பு 775ஆக அதிகரித்துள்ளது.
1,429 பேருக்கு கொரோனா பாதிப்பு புதிதாக உறுதிசெய்யப் பட்டது. இருப்பினும், நேற்று 314 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,062ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்று நேற்று மாலை வெளியான அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருந்தது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒருநாளில் மட்டும் 114 பேர் குணமடைந்தனர்.
தமிழகத்தில் மேலும் 72பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,755 ஆக உயர்ந்தது.