
எனதருமை நாட்டுமக்களே, இந்த உலகளாவிய பெருந்தொற்றுக்கு இடையே, உங்கள் குடும்பத்தில் ஒருவன் என்ற முறையில், சில விஷயங்களைச் சுட்டிக் காட்டுவது, ஆலோசனைகள் அளிப்பது ஆகியன என்னுடைய கடமையாகின்றது. நாட்டுமக்கள் அனைவரிடத்திலும் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்…..
எந்தக் காரணத்தை முன்னிட்டும் நாம் அதீத நம்பிக்கையில் சிக்கிக் கொள்ள வேண்டாம், நமது நகரத்தில், நமது கிராமத்தில், நமது தெருவில், நமது அலுவலகத்தில், இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை, இனியும் அது நம்மை அண்டாது என்றெல்லாம் தயவுசெய்து எண்ணங்களை உங்கள் மனதிலே வளர்த்துக் கொள்ள வேண்டாம்.
உலகம் சந்தித்திருக்கும் அனுபவங்கள் நமக்கு மிகப்பெரிய படிப்பினைகளை அளிக்கின்றன. கொஞ்சம் அசட்டையாக இருந்தாலும், அழிவுப்பாதை நிச்சயம் என்ற கருத்தை மனதில் தாங்கித் தான் நமது முன்னோர்கள் இந்த அனைத்து விஷயங்களிலும் மிகச் சிறப்பான வகையிலே வழிகாட்டிச் சென்றிருக்கிறார்கள்.
‘अग्नि: शेषम् ऋण: शेषम् , व्याधि: शेषम् तथैवच |
पुनः पुनः प्रवर्धेत, तस्मात् शेषम् न कारयेत ||
அக்நி: சேஷம் ருண: சேஷம், வ்யாதி: சேஷம் ததைவச.
புன:புன: ப்ரவர்தேத், தஸ்மாத் சேஷம் ந காரயேத்.
அதாவது, சிறிய அளவில் தானே இருக்கிறது என்று, நெருப்பு, கடன், நோய் ஆகியவற்றை இன்று நாம் லேசாக எடுத்துக் கொண்டோம் என்றால், இவையே வாய்ப்பு கிடைக்கும் போது அதிகமாகி ஆபத்தில் கொண்டு விடும். ஆகையால், இவற்றை முழுமையாக கருவறுப்பது மிக அவசியம். அதிக உற்சாகம் உந்த, உள்ளூர் மட்டத்தில், எந்த விதமான கவனக்குறைவும் இருக்கவே கூடாது. இதை நாம் எப்போதும், என்றைக்கும் மனதில் கொள்ள வேண்டும். நான் மேலும் ஒருமுறை கூறுகிறேன்.
இரண்டு மீட்டர் இடைவெளி காப்போம், நாம் உடல்நலத்தோடு இருப்போம். உங்கள் அனைவருக்கும் சிறப்பான உடல்நலம் வாய்க்கட்டும் என்ற பிரார்த்தனைகளோடு, என் உரையை நான் நிறைவு செய்கிறேன். அடுத்த மனதின் குரலில் நாம் சந்திக்கும் வேளையில், இந்த உலகளாவிய பெருந்தொற்றிலிருந்து விடுதலை அடைந்தோம் என்ற செய்தி உலகெங்கிலுமிருந்து கிடைக்கப்பெறட்டும்!! மனித சமுதாயம் இந்தச் சங்கடங்களிலிருந்து வெளியே வரட்டும்!!
இந்தப் பிரார்த்தனைகளுடன் உங்கள் அனைவருக்கும் பலப்பல நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதமர் மோடியின் மனதின் குரல்…11ஆவது பகுதியில் இருந்து…
ஒலிபரப்பு நாள்: 26.04.2020
தமிழாக்கம் , குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்


