
ராமபிரானின் குழந்தைகள் லவ, குசன் குறித்து, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சப்தகிரி தெலுங்கு மாத பத்திரிகையில் வெளிவந்த கதை விமர்சனத்திற்கு ஆளானது. ராமாயணத்தை மையமாகக் கொண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி, ஆந்திரத்தில் செய்தியாக எதிரொலித்தது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சப்தகிரி தெலுங்கு மாதப் பத்திரிகையில் பிரசுரமான ராமாயணத்தில் உள்ள லவகுசா கதை இப்போது விவாதமாக மாறியது. அதில் சீதாவுக்கு லவன் ஒருவன் மட்டுமே மகன் என்றும் குசன் தர்ப்பையால் செய்த பொம்மை என்றும் பிரசுரித்திருந்தார்கள்.
இந்த கதையை திருப்பதியைச் சேர்ந்த ஒரு மாணவர் எழுதியதாகத் தெரிகிறது.
இது குறித்து பாஜக., தலைவர்கள் கோதண்டராமர் ஆலயத்தின் முன் போராட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த விஷயம் திதிதே விஜிலன்ஸ் துறைக்கு சென்றது. சப்தகிரி பத்திரிக்கை எடிட்டர் ராதா ரமணா மற்றும் பணியில் உள்ள எடிடர்களையும், சப் எடிட்டர்களையும் விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
இந்த விவகாரம் குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் பரிபாலக மண்டலியின் முன்னாள் உறுப்பினர் மற்றும் பிஜேபி தலைவருமான பானு பிரகாஷ் ரெட்டி பேசுகையில் எந்த நூலை ஆதாரமாகக் கொண்டு இந்த கதையை பிரசுரித்தார்கள் என்பதை கூற வேண்டும். திருமலை திருப்பதி தேவஸ்தானம் போன்ற தார்மீக அமைப்புகள் வால்மீகி ராமாயணத்தை ஆதாரமாக கொள்ள வேண்டும் என்றார். மேலும், எடிட்டர் ராதாரமணாவை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
இதை அடுத்து டிடிடி வெப்சைட்டில் இருந்து சர்ச்சைக்குரிய அந்தக் கதையை நீக்கினார்கள். அதேபோல் அச்சடித்த புத்தகங்களையும் பிரிண்டிங் பிரஸ்ஸில் இருந்து பக்தர்களுக்கு அனுப்பாமல் நிறுத்தி வைத்தார்கள்.
அண்மையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அசையாச் சொத்துகளை ஏலம் விடுவது தொடர்பாக பெரிய விவாதத்திற்கு ஆளாகி சர்ச்சைக்குரிய விஷயமானது!
திதிதேவஸ்தானத்துக்கு தொடர்புடைய நிலங்களை விற்பதற்கு தேவஸ்தானம் தயாரானபோது அந்த நிலங்களின் விற்பனைக்கு பல பிரிவுகளில் இருந்தும் எதிர்ப்பு வந்தது. அதனால் நிலங்களை விற்க மாட்டோம் என்று ஆந்திரப் பிரதேச அரசாங்கமும் திருமலா திருப்பதி தேவஸ்தான சேர்மன் ஒய்வி சுப்பாரெட்டியும் தெளிவுபடுத்தினார்கள்.


