சீனாவுடனான 900 கோடி ரூபாய் மதிப்புள்ள வர்த்தக உறவை ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் ரத்து செய்துள்ளது.
லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், கடந்த ஜூன் 15ம் தேதி இந்தியா மற்றும் சீன ராணுவத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.
இதனை அடுத்து, #BoycottChineseProduct என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்த இணையவாசிகள் சீன பொருட்களுக்கு தடை விதிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்தனர்.
கல்வான் பள்ளத்தாக்கு மோதல் சம்பவத்தை அடுத்து டிக் டாக், ஷேர் இட், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த செயலிகளில் பயனாளர்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை எனவும் இவை இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதாகவும் குறிப்பிட்டது.
ஹீரோ சைக்கிள்ஸின் நிர்வாக இயக்குநர் பங்கஜ்
இந்த நிலையில் சீனாவுடனான வர்த்தக உறவை ரத்து செய்துகொள்வதாக ஹீரோ சைக்கிள்ஸின் நிர்வாக இயக்குநர் பங்கஜ் முன்சல் தெரிவித்துள்ளார்.
இன்னும் சில மாதங்களில் சீனாவிடம் இருந்து 900 கோடி ரூபாய் மதிப்புள்ள சைக்கிள் பாகங்களை வாங்க திட்டமிட்டிருந்ததாகவும் தற்போது அதனை ரத்து செய்வதாகவும் சீன தயாரிப்புகளை புறக்கணிக்கும் திட்டத்திற்கு உதவி புரியும் வகையில், இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
சைக்கிள் உற்பத்தியில் ஜெர்மனி முதலிடம் வகிப்பதால், ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் ஜெர்மனியில் தனது ஆலையை அமைப்பதன் மூலம் ஐரோப்பிய சந்தைகளில் இறங்க திட்டமிட்டுள்ளது, இது சீனாவுக்கு மாற்றாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக உலகளவில் மிதிவண்டிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ள பங்கஜ் முன்சல், அதிகரித்து வரும் இந்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஹீரோ சைக்கிள் அதன் திறனை விரிவுபடுத்துகிறது என்று கூறினார்.
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சிறு நிறுவனங்கள் குறித்து கவலை தெரிவித்த முஞ்சல், இந்த நிறுவனங்களுக்கு ஆதரவை வழங்கியுள்ளார். இதன்மூலம் அந்த நிறுவனங்கள், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர் மட்ட சைக்கிள் பாகங்களை தயாரிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.