
கர்நாடகா மாநிலத்தில், முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், அம்மாநில எல்லையில், பலத்த பாதுகாப்பு, தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.
கர்நாடகா மாநிலத்தில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில், அம்மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து, கர்நாடகா செல்ல வேண்டும் என்றால், அம்மாநிலத்தின் சேவா சிந்து இணையதளம் அல்லது ஆப் மூலம், இ-பாஸ் பதிவு செய்து, அதற்கு அனுமதி கிடைத்தால் மட்டுமே, அங்கு நுழைய முடியும்.
இல்லாவிட்டால் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படும். இதற்காக, கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி மற்றும் இதர சோதனைச்சாவடிகளில், போலீசார் மற்றும் இதர துறை அதிகாரிகள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணி முதல், 22 அதிகாலை, 5:00 மணி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனால், மருத்துவ சிகிச்சை, இறப்பு போன்ற முக்கியமான காரணங்களுக்கு மட்டுமே, சேவா சிந்து இ-பாஸ் வழங்கப்படுகிறது. டாக்டர்கள், விமான டிக்கெட்டுடன் செல்பவர்கள் மட்டுமே, கர்நாடகாவிற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
அவசியமின்றி வரும் வாகனங்களை தடுக்க, கடும் சோதனை நடத்தப்படுகிறது. கர்நாடகாவில், தனியார் வசம் டாஸ்மாக் கடைகள் உள்ளதால், அங்கு ஊரடங்கு காலத்தில், சட்டவிரோதமாக மது விற்பனை நடக்க வாய்ப்புள்ளது.
இதனால், அம்மாநில எல்லையான அத்திப்பள்ளி, ஆனைக்கல் போன்ற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் நேற்று பூட்டி, ‘சீல்’ வைக்கப்பட்டன.


