கொரோனா தொற்று பாதிப்புடன் புனேவில் இருந்து ஷார்ஜாவுக்குச் சென்ற 30 வயது பெண்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பதினான்கு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், திடீரென அவர் விமானத்தில் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
ஆடிட்டராகப் பணிபுரியும் கணவருடன் துபாயில் வசித்து வந்த அந்தப் பெண், ஊரடங்கு காரணமாக மூன்று மாதங்கள் புனேவின் பிம்பிர்சிஞ்வாட் பகுதியில் தங்க நேர்ந்தது.
புனேவில் தான் வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பின் பத்திரப்பதிவு நடைமுறைகளுக்காக கடந்த மார்ச் மாதம் இந்தியா வந்துள்ளார். அவர் மகாராஷ்டிரா வந்த சில நாட்களில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு சர்வதேச விமான பயணங்கள் தடை செய்யப்பட்டது. இதனால் அப்பெண் புனேவில் உள்ள புனவாலே என்ற பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இதற்கிடையில், அந்த குடியிருப்பில் வசித்து வந்த நபர்களில் பலருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து அப்பெண்ணுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கும் கொரோனா பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனா அறிகுறிகள் சிறிய அளவில் இருந்ததால் அப்பெண்ணை வீட்டுத்தனிமையில் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து, அப்பெண் உள்பட பலர் வசித்துவந்த அந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதி முழுவதும் கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கொரோனா உறுதி செய்யப்பட்ட அப்பெண் மருந்து வாங்க செல்வதாக கூறிக்கொண்டு கடந்த 17-ஆம் திகதி தனது குடியிருப்பை விட்டு வெளியேறிய இவர், அதன் பின் அவர் தனது குடியிருப்புக்கு திரும்பி வரவே இல்லை. இது குறித்து தகவலறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அப்பெண்ணின் நெருங்கிய உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது,வைரஸ் உறுதி செய்யப்பட்ட அப்பெண் மருந்து வாங்க செல்வதாக கூறி குடியிருப்பை விட்டு வெளியே சென்று மும்பையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு விமானத்தில் ஏறி தனது குடும்பத்தினர் வசித்து வரும் ஐக்கிய அரபு அமீரக நாட்டின் துபாய் நகருக்கு தப்பிச்சென்றுள்ளார் என்ற தகவல் அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
ஜூலை 18-ஆம் தேதி அவரிடமிருந்து சுகாதாரத்துறை அதிகாரிக்கு தகவல். “நான் ஷார்ஜா வந்துவிட்டேன். எனக்கு கொரோனா சோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்திருக்கிறது” என்று அந்தப் பெண் தெரிவித்திருந்தார்.
மும்பையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் துபாய் சென்றபோதும் சார்ஜா விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், பரிசோதனையில் தனக்கு அப்போது கொரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளதாக அப்பெண் தனது உறவினரிடம் தெரிவித்துள்ளார்.
அதையறிந்த காவல்துறையினர், அந்தப் பெண் மீது அரசு ஊழியர்களின் உத்தரவை மீறியது மற்றும் நோய்த்தொற்று பரவ காரணமாக இருந்தது தொடர்பாக மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
மீண்டும் அந்தப் பெண் இந்தியாவுக்கு வந்தால் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தூதரகத்திற்கு தகவல் அளித்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அப்பெண்ணுக்கு துபாய் செல்ல சிறப்பு விமானத்தில் டிக்கெட் ஏற்பாடு செய்து கொடுத்தது யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.