மெல்போர்ன்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது. இதன் காலிறுதிப் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதன் இரண்டாவது காலிறுதியில் இந்தியாவும் வங்கதேசமும் மெல்போர்னில் மோதுகின்றன. நேற்று இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல்ஹசன், நாங்கள் உலகக் கோப்பை காலிறுடிப் போட்டியில் முதல் முறையாக விளையாடுகிறோம். வங்கதேச கிரிக்கெட் வரலாற்றில் இது மிகப்பெரிய போட்டி இது என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் இது கிரிக்கெட்டில் இன்னொரு சாதாரண ஆட்டம் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் இந்த மைதானத்தில் போட்டியைக் காண வருவார்கள். இந்த அளவு மிகப்பெரிய ரசிகர் கூட்டத்துக்கு மத்தியில் எப்படி நெருக்கடி இல்லாமல் விளையாடுவது என்பது எனக்கு ஓரளவு தெரியும். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியபோது அது போன்ற சூழலைச் சந்தித்துள்ளேன். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் ஏறக்குறைய 70 ஆயிரம் ரசிகர்கள் அமரும் அளவு பெரியது. ஆனாலும் மெல்போர்ன் அனுபவம் வித்தியாசம்தான். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கிடைத்த அனுபவம் மூலம் தோனி, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா போன்ற வீரர்களுக்கு எதிராக திட்டங்களை வகுப்பதில் என்னால் உதவிட முடியும். அவர்களின் பலம் மற்றும் பலவீனங்கள் குறித்து எனது சக வீரர்களுக்கு தெரிவிப்பேன். இந்தியா நடப்பு உலக சாம்பியன். அந்த அணியின் டாப்-6 வரிசை பேட்ஸ்மேன்கள் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள். ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறமை பெற்றவர்கள். அவர்களை வலுவான பார்ட்னர்ஷிப் அமைக்க விடாமல் விரைவில் வீழ்த்தினால் போதும். 2007 உலகக் கோப்பையில் இந்தியாவைத் தோற்கடித்தபோது, நாங்கள் அச்சமின்றி விளையாடினோம். அதேபோன்று இப்போதும் விளையாட விரும்புகிறோம். இந்த உலகக் கோப்பையைப் பொறுத்தவரை இதுவரை நாங்கள் நன்றாக ஆடியுள்ளோம். இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக ஆடியது போன்று செயல்பட்டால், எங்களுக்கு சாதகமான முடிவு கிடைக்க வாய்ப்புள்ளது.. என்றார்.
தோனி, ரெய்னா, கோலியை வீழ்த்த ஐபிஎல் அனுபவம் கைகொடுக்கும்: சொல்கிறார் வங்கதேச வீரர் அல் ஹசன்
Popular Categories



