உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி அருகே இன்று காலை நிகழ்ந்த ரயில் விபத்தில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. 150க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப் படுகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி அருகே இன்று அதிகாலை ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் 15 பேர் உயிரிழந்தனர். இந்த ரயில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து வாரணாசிக்கு சென்று கொண்டு இருந்தது. ரேபரேலி மாவட்டம் பச்ராவன் என்ற இடத்தில் வந்த போது திடீர் என ரயில் தடம் புரண்டு கவிழ்ந்தது. இதில் ரெயிலின் 3 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி கவிழ்ந்தது. இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மருத்துவமனைகளில் சேர்த்தனர். பச்ரவான் ரயில் நிலையத்தில் சிக்னலுக்காக ஓட்டுநர் ரயிலை நிறுத்த முயன்ற போது பிரேக் பிடிக்காமல் சிக்னலை மீறி நிற்க முயன்றதால் இந்த விபத்து நடந்ததாக ரயில்வே தகவல் தொடர்பு அதிகாரி அனில் சக்சேனா தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்து காரணமாக ரேபரேலி வழியாகச் செல்லும் ரயில்கள் மாற்று பாதையில் விடப்பட்டன. இந்நிலையில் ரயில்வேத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, ரயில்வே போர்ட் தலைவர் உடனே ரே பரேலி பகுதிக்கு விரைந்து சென்று நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
ரேபரேலி ரயில் விபத்து: உயிரிழப்பு 15 ஆக அதிகரிப்பு
Popular Categories


