புதுதில்லி:
பண்டிட் தீனதயாள் உபாத்யாயவின் நூற்றாண்டை முன்னிட்டு, தில்லியில் தீனதயாள் பவன், பிரதமர் மோடியால் துவக்கி வைக்கப்பட்டது. பின்னர் பிரதமர் சில திட்டங்களை அறிவித்தார். அதில், அனைவருக்கும் மின்சாரம் வழங்கும் சௌபாக்யா யோஜனா குறிப்பிடத்தக்கது. ஏழைகளுக்கு கல்வி, மருத்துவ வசதி, தொடர்பு சாதனம் பெறுவதற்கு உதவுதல் உள்ளிட்ட சில திட்டங்களும் இந்த அறிவிப்பில் அடங்கும்.
சௌபாக்யா யோசஜாவின்படி, வரும் 2018 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் மின்சாரம் கிடைக்க வழிவகை செய்யப்படும். இந்தத் திட்டத்துக்கு ரூ. 16 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கப்படும். இதில் 60 சதம் மத்திய நிதி, 10 சதம் மாநில நிதி, 30 சதம் கடன்கள் மூலம் என்று வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய திட்டத்தில் ஏழை மக்கள் ரூ. 500 செலுத்தி மின்சாரம் பெறலாம். இந்த ரூ.500 ஐயும் கூட, 10 மாத தவணையிலும் செலுத்தலாம். இதன்படி நாட்டில் மின்சாரம் இல்லாத வீடுகளே இருக்கக் கூடாது என்பது நோக்கமாகும்.
5 பேர் கொண்ட பொருளாதார ஆலோசனை குழுவை அமைத்து பிரதமர் உத்தரவிட்டார். இந்தக் குழு பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை பிரதமருக்கு வழங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நிதி ஆயோக் உறுப்பினரான பிபேக் தேப்ராயை குழுவின் தலைவராக நியமித்துள்ளார். இந்த ஐவர் குழுவில் சுர்ஜித பாலா, ரதின் ராய் மற்றும் அஷீமா கோயல் ஆகியோர் பகுதி நேர உறுப்பினர்களாக உள்ளனர். நிதி ஆயோக் முதன்மை ஆலோசகர் ரத்தன் வாடல் குழுவின் செயலாளராக இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவானது பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் குறித்து விவாதிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.