ஆந்திர மாநிலத்துக்கு புதிய தலைநகராக அமராவதி என்ற பெயர் இருக்கும் என்று, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். தற்போது, ஹைதராபாத் நகரமே தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் இரு மாநிலங்களுக்கும் தலைநகராக உள்ளது. இது அடுத்த பத்து ஆண்டுகளுக்கு மட்டுமே இருக்கும். இந்நிலையில், கிருஷ்ணா நதியின் படுகையில், புதிய தலைநகரை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கு மறைந்த முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் பெயரைச் சூட்ட வேண்டும் என்று பரவலாக கோரிக்கை எழுந்தது. ஆனால், அதை மறுத்த சந்திரபாபு நாயுடு, ஆந்திர மாநிலத் தலைநகரின் பெயராக அமராவதி என்பது இருக்கும் என்று கூறியுள்ளார்.
கிருஷ்ணா நதிக்கரையின் ஓரத்தில் குண்டூர் மாவட்டம் தூளூரு பகுதியில் உள்ள 29 மண்டலங்கள் புதிய தலைநகருக்கான இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
புதிய தலைநகருக்காக இதுவரை 33 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் கையகப் படுத்தப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதியில் அரசு மற்றும் வனத்துறைக்குச் சொந்தமான 15 ஏக்கர் பரப்பளவு நிலம் உள்ளது. இதில், 8,000 ஏக்கரில் புதிய தலைநகருக்கான கட்டடங்கள் கட்டப்பட உள்ளன.
ஆந்திர புதிய தலைநகர் எந்தவொரு குறிப்பிட்ட நகரின் மாதிரியாக இல்லாமல், அனைத்து சிறந்த நகரங்களின் கூட்டுக் கலவையாக இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட் டுள்ளது.
ஒருங்கிணைந்த நிர்வாக கட்டமைப்புக்கு மலேசியாவில் உள்ள புத்ராஜாயா நகர், கட்டிடங்களுக்கு நவி மும்பை, ஆற்றின் முகப்பு பகுதிக்கு லண்டனில் உள்ள தேம்ஸ், நியூயார்க்கில் உள்ள ஸ்கைகிராப்பர் கட்டிடங்கள், சீனாவைப் போன்ற நகரக் கட்டமைப்பு அல்லது சிங்கப்பூர், துபாய் போன்ற துறைமுகம் சார்ந்த மேம்பாடு போன்ற அனைத்து நகரங்களின் சிறப்புகளையும் உள்ளடக்கிய நகரமாக புதிய தலைநகர் அமைய வேண்டும் என ஆந்திர அரசு விரும்பு கிறது.
சிங்கப்பூர் நிறுவனங்கள் புதிய தலைநகருக்கான மாஸ்டர் பிளானை வரும் ஜூன் மாதம் வழங்க உள்ளன.


