
பிசிசிஐ செயலாளராக இருக்கும் அமித் ஷா மகன் ஜெய் ஷா, கூடுதலாக, ஆசியக் கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக நேற்று ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தில்லியில் நேற்று காணொலி வாயிலாக நடந்த ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் ஜெய்ஷாவை தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு முன் தலைவராக வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஜ்முல் ஹசன் பபான் இருந்தார்.
இந்தக் கூட்டத்தில் ஜெய் ஷா பேசுகையில் ஆசிய மண்டலத்தில் கிரிக்கெட்டை இன்னும் ஆழமாக வேரூன்றத் தேவையான முயற்சிகள் எடுக்கப்படும். ஆசியக் கிரிக்கெட் கவுன்சிலை நிலையாக மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கிரிக்கெட் விளையாடும் மிகப்பெரிய நாடுகளுடன் ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் ஆரோக்கியமான போட்டியை நடத்தி வருகிறது.
அனைத்துவிதங்களிலும் ஆசியவில் கிரிக்கெட் வளர வேண்டும். குறிப்பாக மகளிர் கிரிக்கெட்டை வளர்க்க வேண்டும்.

கொரோனா வைரஸ் பல்வேறு சவால்களை கிரிக்கெட் உலகத்துக்கு வழங்கியது. அதையும் மீறி கிரிக்கெட் போட்டிகள்வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் மகளிர் கிரிக்கெட் போட்டிகள், வயதுவாரியான கிரிக்கெட்டுக்கு இன்னும் சவால்கள் தொடர்கின்றன’ எனத் தெரிவித்தார்.
ஆசியக் கிரிக்கெட்கவுன்சில் தலைவராக ஜெய் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, பொருளாளர் அருண் சிங் துமால் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டிய பொறுப்பு ஆசியக் கிரிக்கெட் கவுன்சிலிருக்குரியது. 2020ம் ஆண்டு ஆசியக் கோப்பை பாகிஸ்தான் நடந்திருக்க வேண்டும். ஆனால், அது இந்த ஆண்டு ஜூன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நடப்பதற்கு பதிலாக ஆசியக் கோப்பை வங்கதேசம் அல்லது இலங்கையில் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
.