இமாச்சப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதில் அங்குள்ள கட்டிடங்கள், விடுதிகள், கடைகள் சேதமடைந்துள்ளன. மழை மற்றும் வெள்ளம் காரணமாக, சிம்லா மாவட்டத்தின் ராம்பூர் பகுதியில் ஜாக்ரி தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கவலை தெரிவித்த பிரதமர் மோடி, நிலைமை கவனமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார்.
இந்நிலையில், இமாச்சலப் பிரதேசத்துக்கு சென்றிருந்த பிரபல சூஃபி பாடகர் மன்மீத் சிங் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தரஸை சேர்ந்த இவர், ‘Sain Brothers’ என்ற இசை குழுவை நடத்தி வருகிறார்.
இவர், தனது சகோதரர் மற்றும் நண்பர்களுடன் இமாச்சலுக்கு கடந்த திங்கட்கிழமை சுற்றுலா சென்றார். அங்கு தர்மசாலா அருகில் உள்ள ஷாஹ்புர் பகுதியில் தங்கியிருந்த அவர், புகழ்பெற்ற கரேரி ஏரி பகுதிக்கு சென்றார்.
அப்போது அவர் மழை காரணமாக, திடீரென தவறி பள்ளத்தாக்கில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. அவரை எங்கு தேடியும் கிடைக்காததால், அவர் சகோதரரும் நண்பர்களும் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார், மாயமான மன்மீத் சிங்கை தேடி வந்தனர். இந்நிலையில் உள்ளூர் மக்கள் உதவியுடன் அவர் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இது, மன்மீத் சிங்கின் உறவினர்கள் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.