ஒன்றிணைந்த ஆந்திராவின் முன்னாள் முதல்வர் கொணிஜேடி ரோசய்யா காலமானார். பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் ஆந்திரா முதல்வர் ரோசய்யாவுக்கு (88) இன்று காலை பல்ஸ் குறைந்து விட்டதால் குடும்பத்தினர் அவரை ஹைதராபாதில் உள்ள ஸ்டார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. காலை எட்டு இருபது மணிக்கு ரோசய்யா காலமானதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அரசியலில் சிறந்த அனுபவமுள்ள ரோசய்யா 1933 ஜூலை 4-ஆம் தேதி குண்டூர் மாவட்டம் வேமூரில் பிறந்தார். குண்டூர் இந்து கலாசாலையில் காமர்ஸ் படித்தார். 1968ல் முதல் முறையாக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ரோசையா பிரமுக சுதந்திர போராட்ட வீரர், தலைவர் என் ஜி ரங்காவின் சீடர் நிடுப்ரோலு வில் அரசியல் பாடம் கற்றவர்.
காங்கிரஸ் கட்சி மூலம் 1968 1974 1980 களில் சட்டசபை அங்கத்தினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் முதலமைச்சர்கள் அனைவரிடமும் பல முக்கியமான துறைகளில் பொறுப்பேற்று பணிபுரிந்தார். 2004 – 2009 காலகட்டத்தில் 12வது சட்டசபைக்கு சீரால அசெம்பிளி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 தேர்தலில் நேரடியாகத் போட்டியிடாமல் எம்எல்சி ஆக நீடித்தார்.
ஒன்றிணைந்த ஆந்திர மாநிலத்தில் மிக நீண்ட காலம் பொருளாதார நிதி அமைச்சராக பணிபுரிந்தார். 2009 -10 பட்ஜெட்டோடு சேர்த்து மொத்தம் 15 முறை மாநில பட்ஜெட்டை தயாரித்து அளித்த பெருமை இவருக்கு உண்டு. இதில் இறுதி ஏழுமுறை வரிசையாக பட்ஜெட் அளித்தது சிறப்பு. பட்ஜெட் தயாரிப்பதில் மிகச்சிறந்த அனுபவம் உள்ளவராக
ரோசய்யாவுக்கு பெயருண்டு.
ஒய்எஸ் ராஜசேகர் ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்ததால் 2009 செப்டம்பர் 3 ரோசய்யா முதல் அமைச்சராக பதவி ஏற்றார். 14 மாதங்கள் பதவியில் இருந்த பிறகு 2010 நவம்பர் 24ஆம் தேதி தன் பதவியை ராஜினாமா செய்தார். 2011 ஆகஸ்ட் 31 தமிழ்நாடு மாநில கவர்னராக பொறுப்பேற்றார். 2016 ஆகஸ்ட் 30 வரை சேவை அளித்தார்
ரோசய்யா அமைதியும் பொறுமையும் கொண்டவராக அரசியலில் தனக்கென்று தனி வழி காட்டியவர் என்ற தெலங்காணா முதல்வர் கேசிஆர் நினைவு கூர்ந்தார். ரோசய்யாவின் குடும்பத்தாருக்கு தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.
ரோசய்யா காலமான செய்தி தன்னை மிகவும் பாதித்ததாக ஆந்திர முதல்வர் ஜெகன் குறிப்பிட்டார். ஒன்றிணைந்த ஆந்திர முதல்வராக, நிதியமைச்சராக , சட்டசபை அங்கத்தினராக மிக நீண்ட அரசியல் வாழ்க்கையில் பல பதவிகளை அலங்கரித்தார். அவருடைய மரணம் இரு தெலுங்கு மாநிலங்களுக்கு தீராத நஷ்டம் என்று ஜெகன் குறிப்பிட்டார். அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக விவரித்தார் .
ரோசையா குடும்ப அங்கத்தினர்கள் மற்றும் அபிமானிகளுக்கு தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு இரங்கல் தெரிவித்தார்.
“மக்கள் சேவையில் ரோசய்யா ஒரு மிகப்பெரும் தலைவர். விழுமியங்களையும் சம்பிரதாயங்களையும் காப்பாற்றுவதில் ரிஷி போன்றவர். ரோசய்யாவின் மரணத்தால் அரசியலில் ஒரு சகாப்தம் முடிந்தது. விவாதங்களில் ஈடுபடாமல் களங்கம் அற்றவராக பெயர் பெற்றவர்” என்று சினிமா நடிகர் சிரஞ்சீவி குறிப்பிட்டார்.
“ரோசய்யா மரணம் என்னை வருத்தத்தில் ஆழ்த்தியது. விஷாகா ஸ்ரீசாரதா பீடத்தோடு அவருக்கு மிகவும் ஆழ்ந்த தொடர்பு உள்ளது. ஆன்மீகத்திற்கு ரோசையா மிகுந்த முக்கியத்துவம் அளித்தவர். ஆரோக்கியமான அரசியலுக்காக அவர் பாடுபட்டார். ரோசய்யாவின் அரசியல் வரப்போகும் தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாகும்” என்று விசாகா ஸ்ரீ சாரதா பீடாதிபதி ஸ்வரூபானந்தேந்திர சரஸ்வதி தெரிவித்தார்.
“ஒன்றிணைந்த ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் கொணிஜேடி ரோசய்யா மரணமடைந்த செய்தியை அறிந்து வருத்தம் அடைந்தேன். அவர் எனக்கு நீண்ட கால நண்பர். அறிவு நிறைந்த அவருடைய அனுபவம் முக்கியமான நேரங்களில் மாநிலத்திற்கு உதவியுள்ளது. பொறுமையும் திறமையும் ஒன்றிணைந்த நல்ல மனிதராக அவர் அனைவரின் அன்பையும் பெற்றவர். அவருடைய ஆத்மாவுக்கு அமைதி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். அவருடைய குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவிக்கிறேன்” என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
“ரோசய்யாவும் நானும் ஒரே சமயத்தில் முதல்வர்களாக பணிபுரிந்தோம். தமிழ்நாடு கவர்னராக அவர் பணிபுரிந்த போது அவரோடு எனக்கு தொடர்பு ஏற்பட்டது. அவருடைய சேவைகள் மறக்கமுடியாதவை. அவருடைய குடும்பத்தினருக்கு என் இரங்கல்கள்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். சோனியா காந்தி ராகுல் காந்தி ஆகியோரும் இரங்கல் தெரிவித்தனர்.
- ராஜி ரகுநாதன், ஹைதராபாத்