புது தில்லி: ஏர்செல்- மேக்சிஸ் முறைகேடு வழக்கு விவகாரத்தில் அடுத்த கட்ட விசாரணை வரும் ஆக. 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏர்செல் – மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில் முன்ஜாமின் கேட்டு மார்ச் 2-ம் தேதி முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக இன்று சிபிஐ நீதிமன்றத்தில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், சன் டைரக்ட் நிறுவனத்தைச் சேர்ந்த சுவாமிநாதன் ஆகியோர் நேரில் ஆஜராகினர். இவர்கள் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் மனுவை தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் சிபிஐ வழக்கறிஞர் தாக்கல் செய்தார். அதன்படி, இருவருக்கும் முன்ஜாமின் வழங்கக் கூடாது என்று சிபிஐ எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், இந்த வழக்கில் தொழிலதிபர்கள் ரால்ஃப் மார்ஷல், அனந்த கிருஷ்ணன் ஆகியோருக்கு வழக்கில் ஆஜராக சம்மன் அனுப்ப முடியவில்லை என்று சிபிஐ தெரிவித்தது. இதையடுத்து அவர்கள் இருவருக்கும் சம்மன் அனுப்ப சிபிஐ-க்கு காலஅவகாசம் வழங்கிய தில்லி சிபிஐ நீதிமன்றம், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
ஏர்செல் – மேக்சிஸ் வழக்கு: விசாரணை ஆக.3 க்கு ஒத்திவைப்பு
Popular Categories


