பெங்களூரு: பெங்களூரு கோரமங்களாவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவி (36) நேற்று மாலை அவரது வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு உயிரிழந்தார். கோலார் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய அவர் தற்போது வணிக வரித் துறையில் கூடுதல் ஆணையராக பெங்களூரில் பணியாற்றி வந்தார். இவர் நேற்று மாலை அவரது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் கிடந்தார். தகவலறிந்த மடிவாளா போலீஸார், அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது வீட்டைப் பார்வையிட்ட மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி, கூடுதல் ஆணையர் ஆலோக்குமார் உள்ளிட்டோர் இது குறித்து விசாரணை நடத்தினர். ரவியின் மர்மமான மரணம் குறித்து மடிவாளா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 36 வயதான அவர் 2009ம் வருட ஐஏஎஸ் பேட்ச் அதிகாரி. அப்போது வணிக வரித்துறை கூடுதல் பொறுப்பில் சேர்ந்தார். தற்போது, கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் ஆட்சியராகப் பணியாற்றும் ரவி, முன்னர் மங்களூரில் பணியாற்றியபோது, மணல் கொள்ளை மாஃபியாவுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை எடுத்தவர். அவருக்கு மணல் கொள்ளையர்கள் மிரட்டல் விடுத்து வந்தனர். இந்நிலையில், தனது வீட்டில் மதிய உணவுக்குப் பின்னர் தூக்கில் தொங்கியுள்ளார் ரவி. ரவியின் மனைவி வந்து பார்த்தபோது, சிறு துணியில் கழுத்தை இறுக்கி அவர் தூக்கில் தொங்கி இறந்துள்ளது தெரியவந்ததாக விசாரணை நடத்திய எம்.என்.ரெட்டி தெரிவித்தார். இதனிடையே, நேர்மையான அதிகாரியான ரவியின் மரணத்தின் பின்னே உள்ள உண்மையைக் கண்டறியுமாறு கோரி, கோலார் மாவட்டத்தில் பல இடங்களில் பொதுமக்கள் போராட்டமும் கடையடைப்பும் நடத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மணல் கொள்ளை மாஃபியாவுக்கு எதிராக நடவடிக்கை: ஐஏஎஸ் அதிகாரி மர்ம மரணம்
Popular Categories


